டாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது
கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில்
பிறந்தவர் (14.7.1929). இந்தியாவிலும், பின்னர் ஜெர்மனியிலும்,
அமெரிக்காவிலும் உயர்கல்வி பயின்றவர். நீர் வளத் துறையில்
டாக்டர் பட்டம் பெற்றவர்.
நீர்வளத் துறைப் பேராசிரியர்: தமிழகத் தொழில் நுட்பத் கல்வி
இயக்குநர்: UNESCO வல்லுநர் (Expert) போன்ற பொறுப்புகளை
வகித்தவர். மதுரை-காமராசர் பல்கலைக் கழகம், அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகம்,
தில்லி என மூன்று பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராக இருந்த
பெருமைக் குரியவர். தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் (Tamil
Virtual University) நிறுவனத்தலைவர் (Founder Chairman).
நீர் வளத் துறையில் பல ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ள
இவரது கண்டு பிடிப்பு ஒன்று KULANDAISWAMY MODEL (குழந்தைசாமி
மாதிரியம்) என்ற பெயரில் அத்துறை இலக்கியத்தில் இடம்
பெற்றுள்ளது. பாரிஸ் நகரிலுள்ள UNESCO - நிறுவனத்தின் நீர்
வளத் துறைத் திட்டக் குழுவில் [Planning Group] ஆறு ஆண்டுத்
திட்ட வரைவு தயாரிப்பில் உறுப்பினராகப் பணி ஆற்றியவர் (1978).
சர்வ தேசிய, தேசிய அளவில் பல உயர்மட்டக் குழுக்களில் அங்கம்
வகித்தவர். தொழில் நுட்பக் கல்வி, உயர் கல்வி, தொலைநிலைக்
கல்வி மற்றும் ஆய்வுத் துறைகளில் நீண்ட ஈடுபாடு உடையவர்.
பல்கலைக்கழக மானியக் குழுமம் (University Grants Commission),
அனைத்திந்தியத் தொழில் நுட்பக் குழுவின் (All
India Council for Technical Education),
பொதுக் குழ, செயற் குழு, அனைத்திந்தியத் தொழிற்பயிற்சிக்
கல்விக் குழு (Joint Council for Vocational Education),
தமிழகத் திட்டக் குழுமம், தேசிய கல்வி, ஆய்வு பயிற்சிக்
குழு (National Council for Education & Research Training):
தேசிய கல்வி, திட்டமிடுதல் நிர்வாக நிறுவனம் (National Institute
for Education Planning & Administration) போன்ற பல நிறுவனங்களில்
உறுப்பினராக இருந்தவர். சர்வ தேசியத் தொலை நிலைக் கல்விக்
குழுவில் ஆசியாவின் துணைத் தலைவராகவும் (Asian Vice
President of International Council for Distance Education),
காமன்வெல்த்
நாடுகளின் பல்கலைக்கழகங்கள் குழுவின் (Association of Commonwealth
Universities, London) தலைவராகவும், இந்தியப் பல்கலைக்கழகங்கள்
குழுவின் (Association of Indian Universities) தலைவராகவும்,
இந்தியத் தொழிற்கல்விக் கழகத்தின் (Indian Soceity for Technical
Education) தலைவராகவும் பணியாற்றியவர்.
அறிவியல் தொழில் நுட்பத் துறையைச் சேர்ந்த பல ஆய்வுக் கழகங்களில்
உறுப்பினர் (Fellow) என்னும் தகுதி அளிக்கப்பட்டவர்.
இவர் பொறியியல் துறையில், ஆசிரியராக, ஆராய்ச்சியாளராக, நிர்வாகியாகப்
பணி புரிந்து வந்தவர் எனினும், பொதுவாக இலக்கியத்தில், குறிப்பாகத்
தமிழில் ஆர்வமும், ஈடுபாடும் உடையவர். `குலோத்துங்கன்` என்ற
புனை பெயரில் கவிதைகள் எழுதுபவர். இதுவரை இவரது தமிழ்ப்
படைப்புகள் ஆறு கவிதைத் தொகுப்புகளாகவும், தமிழில் எட்டு
உரைநடை நூல்களாகவும் ஆங்கிலத்தில் மூன்று உரைநடை நூல்களாகவும்
ஒரு கவிதை நூலாகவும் வெளிவந்துள்ளன. மேலும் தமிழிலும் ஆங்கிலத்திலும்
பொதுத் தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய
கவிதைகள் அனைத்தும் கொண்ட தொகுப்பு ஒன்று. 'குலோத்துங்கன்
கவிதைகள்' என்ற தலைப்பில் 704 பக்கங்களில் 2002-இல் வெளிவந்துள்ளது.
இவருடைய கவிதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பு `EARTH IS PARADISE
ENOUGH` என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய `வாழும்
வள்ளுவம்` என்ற நூலின் மொழிபெயர்ப்பு `THE IMMORTAL KURAL`
என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இரண்டும் இவரது மொழியெர்ப்பே. ஆங்கிலம், தமிழ், இரண்டிலும்
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் பெற்றவர். இவரது கவிதைகளின்
இரண்டாவது மொழி பெயர்ப்புத் தொகுப்பு An Unending Ascent
என்ற தலைப்பில் ஆங்கிலத்தல் வெளிவர உள்ளது.
இன்றைய தேவைக்கேற்பத் தமிழ் மொழியில் பல துறை இலக்கியங்களை,
குறிப்பாக அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களை உருவாக்குவது,
தமிழ் மொழிக்குப் புதுமை ஆக்கம் தேடுதல் (Modernisation)
தமிழ் மொழி கற்பதை எளிதாக்குதல் ஆகியன இவர் மிகுந்த ஈடுபாடு
கொண்டுள்ள துறைகளாகும். கலைச் சொல்லாக்கம் பற்றியும், புதிய
சொற்களை உருவாக்குவதற்கான உத்திகள் பற்றியும், பல கருத்துகளை
நூல் வடிவிலும், கட்டுரை வடிவிலும் வெளியிட்டுள்ளார். இலத்தீன்,
கிரேக்கம், வடமொழி போன்ற செவ்வியல் மொழிகளின் வரிசையில்
தமிழ் மொழியும் இடம் பெற வேண்டுமெனத் தொடர்ந்து கருத்தரங்குகள்,
கட்டுரைகள் மூலம் வலியுறுத்தி வருபவர்.
தமிழ் எழுத்துச் சீரமைப்பு அவரது குறிக்கோள்களில் தலையாயது.
கடந்த 30 ஆண்டுகளாக வரிவடிவச் சீரமைப்பைப் பற்றி முழு ஈடுபாட்டுடன்
தொடர்ந்து விரிவாக எழுதியும், பேசியும் ஓர் இயக்கமே நடத்தி
வருகிறார். தமிழ் நெடுங்கணக்கிலுள்ள 247 ஒலியெழுத்துகளைக்
குறிப்பிட, அதிகமாகப் போனால், 39 குறியீடுகட்குமேல் தேவை
இல்லை என்பது இவரது உறுதியான கருத்து. 1995 - இல் தமிழக
அரசு இவர் தலைமையில் எழுத்துச் சீரமைப்புப் பற்றிப் பரிந்துரைக்க
ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையைப் பெற்றுள்ளது. குழுவின்
பரிந்துரை பெரியார் அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
இவர் எழுதிய நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும்,
இவரது கட்டுரைகள், கவிதைகள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி,
பல்கலைக் கழக வகுப்புகளில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளன.
கீழ்க்கண்ட பல்கலைக் கழகங்கள் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம்
D.Litt., (Honoris Causa) / D.Sc. (Honoris Causa)
கொடுத்துச் சிறப்பித்துள்ளன:
| i. |
யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம் D.Litt. (Honoris Causa) 1980 |
| ii. |
அழகப்பா
பல்கலைக் கழகம் D.Sc. (Honoris Causa) 1997 |
| iii. |
பாண்டிச்சேரி
பல்கலைக்கழகம் D.Sc. (Honoris Causa) 1997 |
| iv. |
ஜவஹர்லால்
நேரு தொழில் நுட்பப் பல்கலைக் கழகம்
Ph.D. (Honoris Causa) 1999 |
| v. |
இந்திரா
காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகம்
D.Litt.(Honoris Causa) 2000 |
| vi. |
கர்நாடக
திறந்த நிலைப் பல்கலைக் கழகம் D.Litt.(Honoris Causa)
2002 |
| vii. |
அம்பேத்கார்
திறந்த நிலைப் பல்கலைக் கழகம் D.Litt.(Honoris Causa)
2002 |
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இவருக்கு 1980-இல் D.Litt. (Honoris
Causa) பட்டம் கொடுத்துச் சிறப்பித்தபொழுது, கீழ்கண்டவாறு
மதிப்பிட்டிருக்கிறது:
`அறிவியல்
உலகம், கலை இலக்கிய உலகம் ஆகிய இரண்டையும்
இணைக்கும் தகுதி வாய்ந்த, அபூர்வமான அறிவியலாளர்களில்
டாக்டர் குழந்தைசாமி ஒருவர். எனவே அவரது கலைப் படைப்பு
களில் அறிவியல் பார்வையும், அறிவியல் ஆய்வில் கலை
உணர்வு
களும், மனித நேயமும் இடம் பெற்றுள்ளன`. |
இவருக்குத் தமிழகப் புலவர் குழு `செந்தமிழ்ச் செம்மல்` பட்டமும்
(1996): மதுரை காமராசர் பல்கலைக்கழகம் `தமிழ்ச் செம்மல்` விருதும்,
பொற்கிழியும் (1996) வழங்கியுள்ளன.
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் (Tamil Academy, Chennai) தலைவராகவும்,
ஆசிய ஆய்வுஇயல் நிறுவனத்தின் (Institute of Asian Studies)
துணைத் தலைவராகவும், உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் (International
Institute of Tamil Research) துணைத் தலைவராகவும், தமிழக அரசின்,
கலைச் சொல் ஆக்கக் குழுவின் தலைவராகவும் இன்னும் பல குழுக்களில்
உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
1999 இல் தமிழக அரசின் வேண்டுகோளின்படி உலகத் தமிழ் மக்கள்
பயன்பாட்டிற்காக தமிழ் இணையப் பல்கலைக் கழகம் அமைப்பதற்கு
அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக இருந்து ஒரு அறிக்கை
படைத்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசு 2000 - இல் தமிழ்
இணையப் பல்கலைக்கழகம் (Tamil Virtual Academy) என்ற நிறுவனத்தை
உருவாக்கியது. அது முதல் அப்பல்கலைக் கழகத்திற்குத் தலைவராக
இருந்து வருகிறார்.
இவருக்கு 1988-இல் இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருதும்:
1992-இல் மைய வேளாண்மை வாரியத்தின் (Central Board of Irrigation,
New Delhi) வைர விழாச் சிறப்பு விருதும் வழங்கப்பட்டன. இந்தியப்
பொறியியலாளர் நிறுவனம் (The Institution of Engineers, India)
இவரை இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் வல்லுநர்களில் ஒருவராக
1991-இல் அதன் பூனே மாநாட்டில் கௌரவித்தது.
இவர் எழுதிய `அறிவியல் தமிழ்` என்ற நூலுக்குத் தமிழக அரசின்
பரிசு 1987-இல் வழங்கப்பட்டது. தமிழ் மொழியில் இவருக்குள்ள
ஈடுபாடு, ஆற்றல், தமிழ் மொழி மேம்பாட்டுக்கு இவர் ஆற்றியுள்ள
தொண்டு இவற்றைப் பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் 1997 - இல்
இவருக்கு பாராட்டுப்பத்திரம், பொற்கிழி கொண்ட அண்ணா விருது
வழங்கியது. தமிழக அரசு இவருக்கு 1999-இல் ஒரு லட்சம் ரூபாய்,
பொற்கிழியும், பாராட்டுப் பத்திரமும், நினைவுச் சின்னமும்
கொண்ட திருவள்ளுவர் விருது வழங்கியது.
`வாழும் வள்ளுவம்` என்ற தலைப்பில் வெளிவந்த இவருடைய நூலுக்கு
1988-இன் தேசிய அங்கீகாரமான சாகித்ய அகாதமி விருது
வழங்கப்பட்டது.
கல்வித் துறையில் இவர் ஆற்றிய தொண்டுக்காக, பல்கலைக்கழக மானியக்
குழுமம் (U.G.C.) இவருக்கு 1990-ஆம் ஆண்டுக்குரிய பிரணவானந்த
அடிகளார் விருதை வழங்கிச் சிறப்பித்தது.
தொலை நிலைக் கல்வித் துறையில் இந்தியாவிலும் மற்ற Commonwealth
நாடுகளிலும் கல்வியைப் பரப்ப இவர் செய்த தொண்டிற்காக Commonwealth
of Learning என்ற Commonwealth நிறுவனம் இவருக்கு Honorary
Fellow of the Commonwealth of Learning என்ற விருதை அளித்துக்
கொளரவித்தது.
I.I.T., கரக்பூர், 2003-இல் Distinguished Alumnus என்ற கௌரவத்தை
அளித்துச் சிறப்பித்தது.
அறிவியலுக்கும், கல்விக்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி,
குடியரசுத் தலைவர் 1992-இல் இவருக்கு, தேசிய கௌரவமான `பத்மஸ்ரீ`
விருதும் அறிவியல் - தொழில் நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும்
இவர் செய்த சேவை படைத்த சாதனைகளுக்காக 2002-இல் தேசிய கௌரவமான
`பத்ம பூஷண்` விருதும் அளித்துச் சிறப்பித்தார்.