1.1 நூலாசிரியர்

தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியதில் ஐரோப்பியக் கிறித்துவச் சமயத் தொண்டர்களுக்குப் பெரும் பங்குண்டு. ஐரோப்பியக் கிறித்துவத் மிழ்த் தொண்டர்களைப் போல, தமிழ்க் கிறித்துவத் தொண்டர்களும் தம் படைப்புகளால் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை ஆவார்.

1.1.1 வாழ்க்கை வரலாறு

பிறப்பு

தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு என்னும் சிற்றூரில் 1827ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் பிறந்தவர் கிருஷ்ணபிள்ளை. தந்தையார் சங்கர நாராயண பிள்ளை; தாயார் தெய்வநாயகி அம்மையார். இவர்கள் வைணவ சமயத்தினர். ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கல்வியறிவும் மிக்கவர்கள். கிருஷ்ண பிள்ளையின் தந்தை கம்பராமாயணத்தைத் தொடர் சொற்பொழிவாக விளக்கியுரைக்கும் திறம் பெற்றவர். தம் புதல்வருக்கும் தக்க ஆசிரியர்கள் வாயிலாகத் தமிழ்ப் பயிற்சியும் வடமொழிப் பயிற்சியும் கொடுத்தார்.

கிறித்துவராதலும் பணிசெயலும்

சாயர்புரம் திருமறைக் கல்லூரியில் தமிழாசிரியராகக் கவிஞர் பணியாற்றினார். அப்பொழுது, இயேசு பெருமானின் அறக்கருத்துகளினால் ஈர்க்கப்பெற்றுக் கிறித்துவராக மாறினார். தமது முப்பதாம் வயதில் சென்னையிலுள்ள தூய தாமசு ஆலயத்தில் திருமுழுக்குப் பெற்றார். அது முதல் ஹென்றி ஆல்பிரடு கிருஷ்ணபிள்ளை என வழங்கப்பட்டார். இவர் சென்னையில் தினவர்த்தமானி என்ற இதழின் துணையாசிரியராகவும், மாநில உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். பின்னர், பாளையங்கோட்டை சி.எம்.எஸ்.கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், திருவனந்தபுரம் மகாராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி செய்தார். மேலும் கிறித்தவ இலக்கியச் சங்கத்தின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

இறப்பு

தமது 73ஆம் வயதில் கி.பி. 1900ஆம் ஆண்டு, பிப்ரவரி 3ம் நாள் மறைந்தார்.

சமகால அறிஞர்கள்

இவர் காலத்தில் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆகிய தமிழ் அறிஞர்கள் வாழ்ந்தனர்.


1.1.2 ஆசிரியரது படைப்புகள்

இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தை இயற்றிப் பெரும் புகழ் கொண்டவர் கிருஷ்ண பிள்ளை. இவர் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமன்றி வேறு பல அரிய நூல்களையும் இயற்றியுள்ளார். இறைவனைப் புகழும் இனிய தேவாரப் பாடல்கள் அடங்கிய இரட்சணிய மனோகரம் என்னும் நூலையும், போற்றித் திரு அகவல், இரட்சணிய சரிதம் என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார். அவ்வாறே இலக்கண சூடாமணி என்னும் இலக்கண நூல், பாளையங்கோட்டை எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை கிறித்துவரான வரலாறு என்ற தன் வரலாற்று நூல் ஆகியவற்றை உரைநடையில் படைத்துள்ளார். காவிய தரும சங்கிரகம் என்ற இலக்கியத் தொகுப்பு நூலையும் உருவாக்கியுள்ளார். வேதப்பொருள் அம்மானை, பரத கண்ட புராதனம் ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இவர் எழுதியதாகக் கூறப்படும் இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை ஆகிய நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.