1.3 இலக்கண வகைச் சொற்கள்

சொற்களுக்கு உரிய இலக்கண வகையால் சொற்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்

என்பவை ஆகும்.

1.3.1 பெயர்ச்சொல்

ஐம்பொறிகளாலும் உள்ளத்தாலும் உணரும் பொருள்களைக் குறிப்பவை பெயர்ச் சொற்கள் எனப்படும்.

(எ.கா)    மண்,  மேடு,  திங்கள்,  கிளை,  வட்டம்,  ஆடுதல்

1.3.2 வினைச்சொல்

ஒரு பொருளின் வினையைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

(எ.கா) வளவன் வந்தான்

இதில் வந்தான் என்பது வினைச்சொல் ஆகும்.

1.3.3 இடைச்சொல்

தனித்து இயங்கும் ஆற்றலின்றிப் பெயருடனோ வினையுடனோ சேர்ந்து வரும் சொல் இடைச்சொல் எனப்படும்.

(எ.கா)

அவனுக்குக் கொடுத்தான்
அவன் + கு + கொடுத்தான்
.

இதில், கு என்பது இடைச்சொல்லாக இடம்பெற்றுள்ளது.

1.3.4 உரிச்சொல்

பெயர் வினைகளை விட்டு நீங்காமல் செய்யுளுக்கே உரியதாய் வரும் சொல் உரிச்சொல் எனப்படும்.

(எ.கா)  சால, உறு, தவ, நனி, கடி, கூர், கழி
 

அதுவே,
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர்வினை
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து
நான்குமாம் திசை வடசொல் அணுகா வழி

(நன்னூல் : 270)

 

இயற்சொல், திரிசொல் என்னும் தன்மை கொண்ட பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் என்று சொல்வகை இரண்டாகும். இடைச்சொல், உரிச்சொல்லுடன் சேர்ந்து நான்கும் ஆகும். இவற்றுடன் திசைச் சொல்லும் வடசொல்லும் சேரவில்லை என்றால் சொல்வகை நான்கு ஆகும்.

இந்த நூற்பாவின் மூலம் இலக்கணவகைச் சொற்களையும் இலக்கிய வகைச் சொற்களையும் நன்னூல் தெரிவித்துள்ளது.