3.2 பெயர்ச்சொல் வகைகள்

பெயர்ச்சொல்லை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,

1) பொருட்பெயர்
2) இடப்பெயர்
3) காலப்பெயர்
4) சினைப்பெயர்
5) பண்புப்பெயர்
6) தொழிற்பெயர்

என்பவை ஆகும்.
 

3.2.1 பொருட்பெயர்

உயிர் உள்ள, உயிர் இல்லாத பொருள்களின் பெயர்களைக் குறிப்பது பொருட்பெயர் எனப்படும்.

(எ.கா)    அமுதன், வள்ளி, பொன், கிளி

மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளில் உயிர்திணைப் பொருள்களும் உள்ளன. அஃறிணைப் பொருள்களும் உள்ளன. எனவே, உயர்திணைப் பொருள்கள், அஃறிணைப் பொருள்கள் ஆகிய அனைத்துப் பொருள்களும் பொருட்பெயர் என்று கொள்ளலாம்.
 

3.2.2 இடப்பெயர்

ஏதேனும் ஓர் இடத்தைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா) சென்னை, கதிர்காமம், மேடு, பள்ளம்

ஊர்களின் பெயர்களும் ஊரில் உள்ள நிலப்பிரிவுகளின் பெயர்களும் இடப்பெயர்கள் ஆகும்.

3.2.3 காலப்பெயர்

ஏதேனும் ஒரு காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

(எ.கா) திங்கள் கிழமை, தை, காலை, மாலை

பொழுதுகளின் பெயர்களும் நாள்களின் பெயர்களும் திங்களின் பெயர்களும் ஆண்டின் பெயர்களும் காலப்பெயர்கள் ஆகும்.

பொழுது - காலை
நாள் - செவ்வாய்க்கிழமை
திங்கள் - ஆனித்திங்கள்
ஆண்டு - திருவள்ளுவர் ஆண்டு

 

3.2.4 சினைப்பெயர்

பொருள்களின் உறுப்புகளைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும். சினை என்றால் உறுப்பு என்று பொருள். உயர்திணைப் பொருள்களின் உறுப்புகளையும் அஃறிணைப் பொருள்களின் உறுப்புகளையும் இது குறிக்கும்.

(எ.கா) கை, கண், கிளை, இலை

3.2.5 பண்புப்பெயர்

ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயர் எனப்படும். நிறம், சுவை, வடிவம், அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பண்புப் பெயர் வரும்.

பாலின் நிறம் வெண்மை
தேனின் சுவை இனிமை
நிலவின் வடிவம் வட்டம்
ஒன்றைக் குறிப்பது ஒருமை


3.2.6 தொழிற்பெயர்

ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் (தொழிலின் பெயராக வரும்) பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் அல், தல் முதலிய விகுதிகளைப் பெற்று வரும்.

(எ.கா)

ஆடல், நாடல்    - அல் விகுதி
ஆடுதல், நாடுதல் - தல்
விகுதி

இந்த எடுத்துக்காட்டுகளில் முதலில் உள்ள ஆடல், நாடல் ஆகியவை அல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன; ஆடுதல், நாடுதல் ஆகியவை தல் என்னும் விகுதியைப் பெற்றுள்ளன.

இவ்விகுதிகள் இல்லாமலும் தொழிற்பெயர் வருவதுண்டு. அத்தகைய தொழிற்பெயர் இரண்டு வகைப்படும். அவை:

1. முதனிலைத் தொழிற்பெயர்
2. முதனிலை திரிந்த தொழிற்பெயர்
 

● முதனிலைத் தொழிற்பெயர்

தொழிற்பெயர் தனக்குரிய விகுதியைப் பெறாமல் பகுதி (முதனிலை) மட்டும் வந்து தொழிலை உணர்த்துவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா)

சோறு கொதி வந்தது.
மின்னி இடி இடித்தது.

இவை கொதித்தல், இடித்தல் என்று வராமல் கொதி, இடி என்று பகுதி மட்டும் வந்துள்ளன. எனவே இவை முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன. 
 

முதனிலை திரிந்த தொழிற்பெயர்

தொழிற்பெயரின் விகுதியைப் பெறாத முதனிலை, திரிந்து (மாறுபட்டு) வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

(எ.கா)

கெடுவான் கேடு நினைப்பான்.
காந்தியடிகள் துப்பாக்கிக் சூடுபட்டு இறந்தார்.

இந்த எடுத்துக்காட்டுகளில் கெடு என்னும் முதனிலை கேடு என்றும் சுடு என்னும் முதனிலை சூடு என்றும் மாறி வந்துள்ளன. எனவே இவை முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் என்று அழைக்கப்படுகின்றன.