5.4 மூன்றாம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பனவாகும். கருவிப்பொருள், கருத்தாப்பொருள், உடன் நிகழ்ச்சிப் பொருள் ஆகிய மூன்றும் மூன்றாம் வேற்றுமையின் பொருள்கள் ஆகும். ஆல், ஆன் என்ற இரண்டும் கருவிப் பொருளுக்கும், கருத்தாப் பொருளுக்கும், ஒடு, ஓடு என்ற இரண்டும் உடன் நிகழ்ச்சிப் பொருளுக்கும் பெரும்பாலும் பயன்பட்டு வருகின்றன.

இரண்டாம் வேற்றுமைப் பொருளாகிய காரியத்திற்கு வேண்டும் கருவிப் பொருளைத் தருவதால், இது மூன்றாம் வேற்றுமை ஆயிற்று. எனவே இதனைக் கருவி வேற்றுமை என்றும் கூறுவர்.

எடுத்துக்காட்டு

கத்தியால் வெட்டினான் கருவிப்பொருள்
நளன்கதை வெண்பாவால் ஆனது

தமிழ்ச்சங்கம் பாண்டியனால் அமைக்கப்பட்டது கருத்தாப்பொருள்
குகைக்கோயில் பல்லவனால்
கட்டப்பட்டது

கோவலனொடு கண்ணகி வந்தாள் உடன்நிகழ்ச்சிப்
பொருள்
ஆசிரியரோடு மாணவன் வந்தான்

  • கருவிப் பொருள்
  • கருவிப் பொருளானது முதல்கருவி, துணைக்கருவி என இருவகைப்படும்.

    முதல்கருவி செயப்படுபொருளோடு ஒற்றுமை உடையது; செயப்படுபொருளுக்கு இன்றியமையாதது; தானே செயப்படு பொருளாக அமைவது என்பர்.

    துணைக்கருவிக்கு இலக்கணம் கூறும்போது, ‘முதல்கருவி செயப்படுபொருளாக மாறும் வரைக்கும் துணையாக உடன் நின்று உதவுவது’ என்றும் கூறுவர்.

    எடுத்துக்காட்டு

    மண்ணால் குடத்தை வனைந்தான் - முதல்கருவி
    சக்கரத்தால் குடத்தை வனைந்தான் - துணைக்கருவி

    மண்ணால் ஆகிய குடம் என்பதில் மண் என்னும் முதல்கருவி, குடம் ஆகிய செயப்படுபொருளாக உள்ளது.

    சக்கரத்தால் குடம் வனைந்தான் என்பதில் சக்கரம் என்னும் துணைக்கருவி மண்ணாகிய முதல்கருவிக்குத் துணையாய் அது குடமாக உருவாகும் வரை உடன் நிகழ்ந்தது.

    ஆல், ஆன் உருபுகளுக்குப் பதிலாகக் கொண்டு என்பது சொல்லுருபாக வருவதுண்டு.

    (எடுத்துக்காட்டு)  ஊசி கொண்டு தைத்தான்

     

  • உடன் நிகழ்ச்சிப்பொருள்
  • வினை கொண்டு முடியும் பொருளோடு உடன் இருப்பதாகக் காட்டும் பொருள் உடன் நிகழ்ச்சிப் பொருள் ஆகும். உடன் நிகழ்ச்சி என்பது ஒன்றாக நிகழ்வது.

    எடுத்துக்காட்டு

    பாரதியாரொடு பாரதிதாசனும் வந்தார்.
    கோயிலோடு குளமும் அமைத்தான்.

    பாரதியாரும் பாரதிதாசனும் வந்த செயல் உடன் நிகழ்ந்தது. அதாவது, இருவர் செயலும் ஒரே காலத்தில் நிகழ்ந்தன.

    கோயிலும் குளமும் ஒரே காலத்தில் அமைக்கப்பட்ட நிகழ்வுகள் ஆகும்.

    ஒடு, ஓடு ஆகிய உருபுக்குப் பதிலாக ‘உடன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவது உண்டு.

    எடுத்துக்காட்டு

    இராமனுடன் இலக்குவன் காட்டுக்குச் சென்றான்.

    ஒரு சொல்லே உருபாக வருவதால் இது சொல்லுருபு எனப்படும்.

    மூன்றாவதன் உருபு ஆல்ஆன் ஒடு ஓடு
    கருவி கருத்தா உடன்நிகழ்
    வு அதன் பொருள்

    (நன்னூல் : 297)