6.3 ஏழாம் வேற்றுமையும் அதன் பொருள்களும்

ஏழாம் வேற்றுமையின் உருபுகள் கண் முதலாக இல் ஈறாக இருபத்து எட்டாகும். இவ்வுருபுகளில் ‘கண்’ என்பதே ஏழாம் வேற்றுமைப் பொருளை உணர்த்தும் தலையாய உருபாகும். எனவே ஏழாம் வேற்றுமையைக் கண் வேற்றுமை என்று அழைப்பர்.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் அறுவகைப் பெயர்களும், தற்கிழமை, பிறிதின்கிழமை என்னும் இரண்டிற்கும் இடமாக வருதல் ஏழாம் வேற்றுமையின் பொருளாகும்.

கண், கால், கடை, இடை, தலை, வாய், திசை, வயின், முன், சார், வலம், இடம், மேல், கீழ், புடை, முதல், பின், பாடு, அளை, தேம், உழை, வழி, உழி, உளி, உள், அகம், புறம், இல் ஆகிய இருபத்தெட்டும் இடப்பொருள் உணர்த்தும் உருபுகள் ஆகும்.

எடுத்துக்காட்டு

பனையின் கண் உள்ள மடல் - தற்கிழமை

பொருள் பெயர்

பனையின் கண் உள்ள அன்றில் (பறவை) - பிறிதின்கிழமை
வீட்டின்கண் உள்ள அறை - தற்கிழமை

இடப்பெயர்

வீட்டின்கண் உள்ள பூனை - பிறிதின்கிழமை
நாளின்கண் உள்ள நாழிகை - தற்கிழமை

காலப்பெயர்

நாளின்கண் செய்யும் வேலை -
பிறிதின்கிழமை
கையின்கண் உள்ள விரல் - தற்கிழமை

சினைப்பெயர்

கையின்கண் உள்ள வளையல் -
பிறிதின்கிழமை
கறுப்பின்கண் இருக்கும் அழகு - தற்கிழமை

குணம் அல்லது
பண்புப்பெயர்

இளமையின்கண் வாய்த்த செல்வம் - பிறிதின்கிழமை
ஆட்டத்தின்கண் உள்ள அபிநயம் - தற்கிழமை

தொழில்பெயர்

ஆட்டத்தின்கண் உள்ள பாட்டு - பிறிதின்கிழமை

பனையும் மடலும் ஒரே பொருள். பனை என்னும் முதல்பொருள் மடல் என்னும் தன் சினைப்பொருளுக்கு இடப்பொருள் ஆயிற்று. இது தற்கிழமை. பனையும் அதில் வசிக்கும் அன்றிலும் வேறுவேறு பொருள். பனை என்னும் பொருள் அன்றிலாகிய பிறிதின் கிழமைப் பொருளுக்கு இடப்பொருள் ஆயிற்று. இவ்வாறே பிற எடுத்துக் காட்டுகளையும் எண்ணி உணர்க. (நீங்காது இருப்பது தற்கிழமை; நீங்கி இருப்பது பிறிதின்கிழமை ஆகும்.)

இவ்வேழாம் வேற்றுமை இடவேற்றுமை என்றும் அழைக்கப்படும்.

ஏழாம் வேற்றுமைக்குக் கண் என்பது உருபு என அறியலாம். கண்ணே அன்றி, கால், கடை, இடை முதலிய பல உருபுகள் இதற்கு உண்டு. இவ்வுருபுகள் அனைத்தும் இடப்பொருளை உணர்த்தும் சொற்களாக வரும்.

எடுத்துக்காட்டு

1) கால்  :  நாற்றங்கால் (நாற்று வளரும் இடம்)

2)  கடை : கடை நாள் கங்குல். (கங்குல் = இரவு)

3)  இடை : இடைச்சுரம் (சுரம் = காட்டுவழி)

இவற்றைச் சொல் உருபுகள் என்றே கூறலாம்.

இக்காலத்து, இவ்வுருபுகளோடு பக்கம், பாங்கர், மாடு, அண்டை, அருகு, அயல், ஊடு, ஓரம், நடு போன்றனவும் சொல் உருபுகளாகக் கருதப்படும்.

எடுத்துக்காட்டு

வயல் பக்கம் சென்றான்.
சாலை ஓரம் நடந்தான்.
வீட்டு நடுவே அமர்ந்தான்.

எனவரும்.

ஏழன் உருபு கண் ஆதியாகும்
பொருள் முதல் ஆறும் ஓரிரு கிழமையின்
இடனாய் நிற்றல் இதன்பொருள் என்ப.

(நன்னூல் : 301)


கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின்
முன்சார் வலமிடம் மேல்கீழ் புடைமுதல்
பின்பாடுஅளைதேம் உழைவளி உழி உளி
உள்அகம் புறம் இல் இடப்பொருள் உருபே

(நன்னூல் : 302)

குறிப்பு : ‘இல்’ என்னும் உருபு ஐந்தாம் வேற்றுமையில் வந்துள்ளதை முன்னரே நீங்கள் அறிவீர்கள். ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ என்னும் உருபு ஒப்புப்பொருளிலும், ஏதுப்பொருளிலும் வந்துள்ளது. ஏழாம் வேற்றுமையில் ‘இல்’என்னும் உருபு இடப்பொருளில் மட்டுமே வரும் என்பதை அறிந்து கொள்வது நன்று.