சொற்றொடர்கள் கருத்தை
உணர்த்தப் பயன்படுகிறன.
சொற்றொடரில் இடம்பெறும் சொற்கள் ஒன்றோடு ஒன்று பொருள் தொடர்பு கொள்வதால் கருத்து உணர்த்தப்படுகிறது.
சொற்களின் இத்தொடர்பு ‘புணர்ச்சி’ எனப்படும். புணர்ச்சிக்குக் குறைந்தது
இரண்டு சொற்கள் தேவை. இவ்விரண்டு
சொற்களில் முதலில் நிற்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும். நிலைமொழியை
அடுத்துவரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.
(எ.டு) தாமரை மலர்ந்தது.
இத்தொடரில் ‘தாமரை’ என்பது நிலைமொழி. ‘மலர்ந்தது’என்பது வருமொழி.
சொற்றொடரில் உள்ள சொற்களுக்கு இடையிலான பொருள்
தொடர்பே பொருள்புணர்ச்சி
எனப்படுகிறது. இஃது இரண்டு வகைப்படும்.
அவை,
- வேற்றுமைப் புணர்ச்சி
- அல்வழிப் புணர்ச்சி
சொற்றொடரில் நிலைமொழியும்
வருமொழியும் பொருள்தொடர்போடுதான் புணரும்
எனக் கூறமுடியாது.
(எ.டு) பவளக் கூர்வாய்ச் செங்கால் நாரை
இத்தொடரில்
உள்ள முதல் இரண்டு சொற்களை எடுத்துக்கொள்ளலாம்.
பவளம் என்பது நிலைமொழி. கூர் என்பது
வருமொழி. இந்நிலைமொழிக்கும் வருமொழிக்கும்
இடையில் பொருள் தொடர்பு சரியாக
அமையவில்லை. இங்குப் பவளம் என்பது செம்மை வண்ணத்தைக்
குறித்து வந்துளளது. அதற்கும் கூர்மைக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை. நிலைமொழிக்கும் வருமொழிக்கும்
பொருள் தொடர்பில்லை என்பதை இலக்கணப்படி
சொல்வதானால் ‘பவளம் என்னும் சொல் கூர் என்னும்
சொல்லைத் தழுவாது தொடர்ந்தது’ என்பர். இவ்வாறு நிலைமொழியோடு
வருமொழி பொருள் தொடர்பின்றிப் புணருமானால்,
நிலைமொழியும் வருமொழியும் சேர்ந்த அத்தொடரைத் ‘தழாத் தொடர்’
என்றும், பொருள் தொடர்போடு புணருமானால், அத்தொடரைத்
‘தழுவு தொடர்’ என்றும் கூறுவர்.
மெய்யுயிர் முதலீறு ஆமிரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமைப்
பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்
இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே
(நன்னூல் : 151) |