3.6 உரிச் சொற்றொடர்
 

உரிச்சொற்கள் பெயர் அல்லது வினைச்சொற்களுக்கு அடையாய் நின்று தொடர வருவது உரிச்சொற்றொடர் எனப்படும். உரிச்சொல்லைப் பற்றிய செய்திகள் முந்தைய பாடத்தில் கூறப்பட்டன. அவற்றை நினைவு கொள்க.

- இசையும் குறிப்பும் பண்பும் ஆகிய பல்வேறுபட்ட குணங்களை
  உணர்த்தும் பெயராய் வரும்.
- பல சொல் ஒரு பண்பையும், ஒரு சொல் பல பண்புகளையும்
  உணர்த்தும்.
- பெயர், வினைகளை விட்டு நீங்காது அவற்றிற்கு அடையாய் வரும்.
- செய்யுளுக்கு உரியனவாய் வரும்.

இசை, ஓசை, குறிப்பு என்பன மனத்தினால் உணரப்படுவன.  பண்பு ஐம்பொறிகளால் உணரப்படுவது.

(எ.டு) 

சால, உறு, தவ, நனி, கூர், கழி - மிகுதி என்னும் ஒரு குணம் குறித்தது.

கடி - காப்பு, கூர்மை, நாற்றம், அச்சம் முதலிய பல குணம் குறித்தது.
 

(எ.டு)  தடக்கை - பெயர்க்கு அடையாக வந்தது.

 நனி வருந்தினான் - வினைக்கு அடையாக வந்தது.

“வாரணம் பொருத மார்பு” - இதில் வாரணம் என்பது யானையைக் குறித்துச் செய்யுளில் வழங்கி வந்துள்ள சொல் ஆகும்.

பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்   (நன்னூல் : 442)