2.2 தொல்பொருள் சான்றுகள்
தமிழ்நாட்டு வரலாற்றை அறிய விழையும் மாணவர்களுக்குப்
புதைபொருள் சான்றுகளும், நினைவுச் சின்னங்களும் பயன்படுகின்றன. நைல், யூப்ரடீஸ்,
டைகிரிஸ் ஆகிய நதிக்கரைகளில் நடத்திய அகழ்வாராய்ச்சிகளைப் பயன்படுத்தித்
தமிழ் நாட்டிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அண்மைக் காலத்தில் கற்கால மனிதர்களைப்
பற்றிய பல நினைவுச் சின்னங்கள் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூரிலும்,
புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டிலும், தமிழ் நாட்டின் பிற இடங்களிலும்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. அக்காலத்து மக்களின் நாகரிகத்தை அறிய அந்நினைவுச்
சின்னங்கள் பயன்படுகின்றன.
தொல்பொருள் சான்றுகளை மூன்றாகப் பிரித்து ஒன்றன்பின் ஒன்றாகக் காணலாம். அவையாவன:
1. கல்வெட்டுகளும் பட்டயங்களும்
2. நினைவுச் சின்னங்கள்
3. நாணயங்கள்
2.2.1 கல்வெட்டுகளும் பட்டயங்களும்
கல்வெட்டுகளும் பட்டயங்களும் (செப்பேடுகள்) தமிழ்
நாட்டு வரலாற்றைப் பற்றிய பயன்தரும் உண்மைகளை அளிக்கின்றன. அவை தமிழ் நாட்டில்
மட்டுமேயன்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும் நாடுகளிலும்,
மலேசியா, இலங்கை ஆகிய வெளிநாடுகளிலும் காணப்படுகின்றன. காலத்திற்கு ஏற்றவாறு
கல்வெட்டுகளில் பயன்படுத்தியிருக்கும் எழுத்துகளும் மொழிகளும் மாறுபடுகின்றன.
கல்வெட்டுகள் தோன்றிய துவக்கத்தில் அவை தமிழ் மொழியில் பிராமி எழுத்தில்
பொறிக்கப்பட்டன. பல்லவர் காலத்தின் முதல் கட்டத்தில் பிராகிருத மொழியிலும்,
இடைப்பகுதியில் சமஸ்கிருத மொழியிலும், கடைசிக் கட்டத்தில் கிரந்தத் தமிழிலும்
வெளியிடப்பட்டன. துறவிகள் வாழ்ந்து வந்த குகைச்சுவர்கள், கற்பாறைகள், நடுகற்கள்,
கோயில் சுவர்கள், கோயில் தூண்கள். சிற்பங்களின் அடித்தளங்கள், செப்பேடுகள்
முதலியவை செய்திகளைப் பொறிக்கும் தளங்களாயின. குகைக் கல்வெட்டுகள் தமிழ்
நாட்டில் பரவலாக உள்ளன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம்,
ஆனை மலை, அழகர் மலை போன்ற மலைகளில் உள்ள குகைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன.
கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சமய அறப்பணிகள், கோயில்களுக்கு வழங்கிய நன்கொடைகள்,
மன்னர்களின் வெற்றிகள், வழக்குகள் மீது வழங்கிய தீர்ப்புகள், ஊர் மன்றங்கள்
இயற்றிய சட்டங்கள், அவற்றின் செயல்கள், வாணிபம் போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றன.
அசோகரின் கிர்னார் கல்வெட்டு, கி.மு.3 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் சோழ,
பாண்டிய அரசுகள் இருந்ததாகக் கூறுகின்றது. வட இந்தியாவில் காரவேலரின் காதிகும்பா
கல்வெட்டும், சமுத்திர குப்தரின் அலகாபாத் கல்வெட்டும் தத்தம் காலங்களில் நிலவிய
தமிழ் நாட்டின் அரசியல் நிலையை விளக்குகின்றன. களப்பிரர்களின் இருண்ட கால
வரலாற்றினை வேள்விக்குடிச் செப்பேடும், தளவாய்புரம் செப்பேடும் அறிவிக்கின்றன.
பண்டைய தமிழர்கள், போரில் விழுப்புண்பட்டு மாண்ட
வீரர்களுக்காக நட்ட நடுகற்களில் நாம் வரலாற்றுச் செய்திகளைக் காண்கிறோம்.
போரில் பகைவர் பலரைக் கொன்று வீரத்தை நிலைநாட்டி, விழுப்புண்பட்டு இறந்துபோன
மறவரின் பெயரை ஒரு கல்லில் பொறித்து, அக்கல்லை நட்டு, அந்நடுகல்லுக்கு மயில்
பீலி சூட்டிச் சிறப்புச் செய்தனர் என்பதைப் புறநானூறு,
அணிமயில் பீலி
சூட்டிப் பெயர்பொறித்து
இனி நட்டனரே கல்லும்
(புறநானூறு,
264: 3-4)
எனக் கூறுகிறது.
தொல்காப்பியத்திலும் நடுகல் பற்றிச் சான்று
கிடைக்கிறது. சங்க காலத்தைச் சார்ந்த நடுகற்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
தற்போது கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்கள் பல்லவர்களின் காலத்தைச் சார்ந்தனவாகும்.
செங்கம் நடுகற்கள் பல்லவர் வரலாற்றிற்குச் சான்று பகர்கின்றன.
பல்லவர்கள் காலத்துச் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் பல்லவப் பேரரசின் பரப்பு,
அப்பேரரசை ஆண்ட மன்னர்களின் வெற்றிகள்,
அறப்பணிகள் முதலிய உண்மைகளை உணர்த்துகின்றன.
பாண்டியர் வரலாற்றைக் காட்டும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல கிடைத்துள்ளன.
அவற்றுள் வேள்விக்குடிச் செப்பேடு, சின்னமனூர்ச் செப்பேடுகள், தளவாய்புரம்
செப்பேடு, சிவகாசிச் செப்பேடு, குடுமியான்மலைக் கல்வெட்டு முதலியவை
குறிப்பிடத்தக்கவையாம்.
பிற்காலச் சோழர்கள் வரலாற்றில் நாம் அடியெடுத்து வைக்கும்போது
கல்வெட்டுச் சான்றுகள் நமக்குத் தீபம் போன்று பயன்படுகின்றன. திருவாலங்காட்டுச்
செப்பேடு அரசியல் பற்றிய முக்கியமான தகவல்களைத் தந்துள்ளது. சோழர் ஆடசியில்
கிராமங்களில் ஊராட்சிமுறை நிலவிய காரணத்தால் மக்கள் சுதந்திரத்துடன் வாழ்ந்து
வந்ததை உத்திரமேரூர்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது. திருவிடை மருதூர்க் கல்வெட்டு
வரிகொடுக்கத் தவறினோருக்கு வழங்கிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. திருவேண்டிபுரம்
கல்வெட்டு, அன்பில் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, கன்னியாகுமரிக் கல்வெட்டு
என்பன பிற முக்கிய கல்வெட்டுகளாகும். சோழர் எழுப்பிய கோயில்களின் சுவர்களில்
அணிகலன்கள் போன்று காட்சி தரும் கல்வெட்டுகள் வரலாற்று உண்மைகள் பலவற்றைக்
கொண்டுள்ளன.
2.2.2 நினைவுச் சின்னங்கள்
பல்லவர், சோழர், மதுரை நாயக்கர் ஆகியோர் எழுப்பிய
கோயிலகள் தத்தம் காலத்துக் கட்டடக் கலை வளர்ச்சியையும் பண்பாட்டு வளர்ச்சியையும்
பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் பல்லவர் எழுப்பிய மகாபலிபுரத்துக்
கடற்கரைக் கோயில், காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயில், சோழர்கள் எழுப்பிய
தஞ்சைப் பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரக் கோயில், தாராசுரம் கோயில், நாயக்கர்
எழுப்பிய மதுரை மீனாட்சியம்மன் கோயில் முதலியவை சிறப்புற்று விளங்குகின்றன.
தமிழ் நாட்டில் காணப்படும் பெரும்பாலான கோயில்களில் கண்ணைக் கவரும் வண்ண
ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வரலாற்று உண்மைகளை வழங்கும் சிற்பங்களும் உள்ளன.
2.2.3 நாணயங்கள்
நாணயங்கள் வெவ்வேறு காலங்களில் நிலவிய பேரரசுகளின்
பொருளாதார நிலையையும், ஆதிக்கத்தையும் எடுத்து இயம்புவதுடன் சரியான கருத்துகளை
வழங்குகின்ற காரணத்தால் அவற்றை இலக்கியச் சான்றுகளுடன் ஒப்பிட்டும் கூறுவர்.
சங்க கால வரலாற்றுக்கு நாணயங்கள் பெரிதும் உதவி
புரிகின்றன. அவை சங்க இலக்கியச் செய்திகள் பலவற்றையும் மெய்ப்பிக்கின்றன.
ஆனால் அந்நாணயங்களில் பெரும்பான்மையானவை அந்நிய நாட்டு நாணயங்கள் ஆகும்.
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்த
ரோமாபுரி நாட்டு நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை ரோமாபுரிக்கும் தமிழகத்திற்கும்
இடையே நடைபெற்று வந்த செழிபபான வாணிபத்தைப் புலப்படுத்துகின்றன. ‘Periplus
of the Erithraean sea’ என்னும் கிரேக்க நூலின் வாயிலாக இவ்வாணிபத்தைப் பற்றி
அறிய முடிகிறது.

பழம் பாண்டிய மன்னரின் நாணயங்கள் சில சதுர வடிவிலும்,
நீண்ட சதுர வடிவிலும் கிடைத்துள்ளன.
இவற்றின் ஒருபுறம் மீன் சின்னமும், மறுபுறம் யானை போன்ற விலங்கின் உருவமும்
பொறிக்கப்பட்டுள்ளன. இவை கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்களாக இருக்கலாம்
எனத் தெரிகிறது.
பல்லவர்களும் பாண்டியர்களும் சிறந்த செப்பு
நாணயங்களை வெளியிடுவதில் சிறப்புப் பெற்று விளங்கினர். அக்காலத்துத் தமிழகத்தின்
பொருளாதார நிலையையும், அரசுகளுக்கிடையில் ஏற்பட்டிருந்த நல்லுறவையும் அறிவதற்கு
இந்நாணயங்கள் பயன்படுகின்றன.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
தொல் பொருள் சான்றுகள்
எத்தனை வகையாகப் பிரிக்கப்படுகின்றன? |
|
2. |
ஆதிச்சநல்லூரில்
எந்தக் கால மனிதர்களைப் பற்றிய நினைவுச் சின்னங்கள் கிடைக்கப்பெற்றன? |
|
3. |
கல்வெட்டுகள்
எந்தெந்த வெளிநாடுகளில் காணப்படுகின்றன? |
|
4. |
பல்லவர் காலத்தில்
கல்வெட்டுகள் எந்தெந்த மொழிகளில் வெளியிடப்பட்டன? |
|
5. |
அசோகரின் கல்வெட்டுப் பெயர்
என்ன? |
|
6. |
தமிழ் நாட்டின் அரசியல்
நிலையைப் பற்றி வட இந்தியாவில் எந்தெந்தக் கல்வெட்டுகள் விளக்குகின்றன? |
|
7. |
நினைவுச் சின்னங்களுக்கு
இரு சான்றுகள் தருக. |
|
8. |
செங்கம் நடுகற்கள் யாருடைய
வரலாற்றுக்குச் சான்று பகர்கின்றன? |
|
9. |
அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில்
கிடைத்துள்ள நாணயங்கள் எந்த நாட்டு நாணயங்கள்? |
|
10. |
செப்பு நாணயங்களை வெளியிடுவதில்
சிறப்புப் பெற்று விளங்கியவர்கள் யார்? |
|
|