2.2 வரிச் சீரமைப்பு

ஆங்கிலேயர் பல மன்னர்களிடமிருந்த நாட்டைப் பெற்றுத் தங்கள் பகுதியோடு இணைத்துக் கொண்டனர். இதனால் ஒவ்வொரு பகுதியிலும் வரி விதிப்பு முறை ஒவ்வொரு வகையாக இருந்து வந்தது. ஆதலால் ஆங்கில அரசு சோழர், பாண்டியர், விசயநகர அரசர் காலத்து வரிகளையெல்லாம் ஒரு ஒழுங்குமுறைக்குக் கொண்டு வர எண்ணியது. குடிமக்கள் தாமே நேரில் வரியைக் கட்டும் ரயத்து வாரி முறை, மிராஸ்தாரி என்ற நிலவரி முறை, படைநாயகம் செய்த பாளையப்பட்டு முறை எனப் பல்வேறு முறைகள் நடைமுறையில் இருந்தன. இவற்றைக் கண்ட ஆங்கிலேயர் பாளையக்காரர்களிடமிருந்த படையைக் கலைத்து, நீதி வழங்கும் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டனர். பாளையக்காரர்கள் தாம் இருக்கும் பகுதியில் வரி வசூலித்து அரசுக்குச் செலுத்தும் உரிமையை மட்டும் பெற்றிருந்தனர். ஆங்கிலேயர் அவர்களுக்கு ஜமீன், ஜாகீர், மிட்டாதாரர், பட்டக்காரர் எனப் பெயர் மாற்றம் செய்தனர். இதன் காரணமாக முறையற்ற வரிக் கொடுமை நீங்கி, முறைகேடான சட்டங்கள் மாறித் தமிழகம் முழுவதற்கும் ஒரே அரசியல், ஒரே நீதி என்ற ஒருமைப்பாடு நிலவத் தொடங்கியது.