‘இச்செயலைக்
கணக்காகச் செய்தான்’ என்பர் தமிழர். இதன் பொருளாவது, பெரியோர் நூல்களில்
சொல்லியபடியே சரியாகச் செய்தான் என்பதாகும். ஆசிரியர் கணக்காயனார் எனப்பட்டார்.
நூலை ஆய்பவர் என்பது இப்பெயரின் பொருள். கணக்கினை
முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலின், கேட்டலே நன்று என்ற
பழமொழிப் பகுதியால், கணக்கு என்னும் சொல் நூல் என்ற பொருள் கொண்டது என்று
அறியலாம்.
பல்வேறு நூல்வகைகளுக்கும் இலக்கணம் கூறும் பாட்டியல்
நூல்கள் பிற்காலத்தில் தோன்றின. பன்னிருபாட்டியல் என்பது
அவற்றுள் ஒன்று. அது ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்
ஆகிய
பாவகைகளில் மிகுதியான அடிகள் கொண்டனவாக ஐம்பது முதல்
ஐந்நூறு பாடல்களைத் தொகுத்தமைப்பது
மேற்கணக்கு என்று
கூறிற்று. அதுவே, வெண்பா யாப்பினைப் பயன்படுத்தி, குறைவான
அடிகளால் ஐம்பது
முதல் ஐந்நூறு பாடல்களைக் கொண்டு
விளங்குவது கீழ்க்கணக்கு என்றும் கூறுகிறது. இதனால் பாட்டிலுள்ள அடிகளின் மிகுதியும் குறைவுமே மேல்
கீழ் என்ற
அடைமொழிகளால் விளக்கப்பட்டன என்பது விளங்கும்.
இடைக்காலத்தில் எழுந்த நூல்களிலும், உரைகளிலும் -
கீழ்க்கணக்கு என்று
அடையில்லாமலும், பதினெண்கீழ்க்கணக்கு
என்று அடையோடும் இவை குறிக்கப்படுகின்றன.
மூத்தோர்கள்
பாடியருள் பத்துப்பாட்டும்
எட்டுத்தொகையும் கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்
என்பது தமிழ்விடுதூது.
நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதரும், நச்சினார்க்கினியரும்
பதினெண்கீழ்க்கணக்கு என்ற குறியீட்டைக் கையாள்கின்றனர்.
எனவே இந்த வழக்கு, கி.பி. 13, 14 ஆம் நூற்றாண்டுகளுக்கு
உரியது என்பது விளங்குகின்றது.
|