6.3
கபில தேவநாயனார் இயற்றிய நூல்கள்
மூத்த
நாயனார் திருஇரட்டை மணிமாலை
மூத்தநாயனார் என்பது
விநாயகரைக் குறிக்கும். 20
பாடல்களைக் கொண்ட நூல் இது. விநாயகரைக் குறித்து வெண்பா
மற்றும் கட்டளைக் கலித்துறை ஆகிய இருவகைப் பாடல்கள் மாறி
மாறி வர அந்தாதியாகப் பாடப்பட்ட நூல். கபிலதேவநாயனார்
பாடியது. இவர் திருவாரூரில் வாழ்ந்தவர். இவர் பாடிய 3 நூல்கள்
பதினோராம் திருமுறையில் உள்ளன. இவற்றில் 45 தலங்களைக்
குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் 32 சோழநாட்டுக்கு
உரியவை.
இந்நூலில் வரும் ‘திருவாக்கும் செய்கருமம்
கைகூட்டும்',
‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்'
என்ற
இருபாடல்களும் இன்றுவரை மக்களால் பாடப்படுகின்றன.
விநாயகரை, ‘ஆழ்வான்' என்று குறிப்பிட்டுள்ளார்
(பாடல்-3).
விநாயகக் கடவுளைக் குறித்துப் பாடப்பட்ட முதல்
தமிழ்நூல்
இது ஆகும். ‘அப்பம் அவலோடு எள் உருண்டை
கன்னல்
வடிசுவையில் தாழ்வான்' (பாடல்-3), ‘வாழைக்கனி பலவின்கனி
மாங்கனி தாம் சிறந்த கூழைச் சுருள் குழை அப்பம் எள்ளுருண்டை
எல்லாம் துறுத்தும் பேழைப் பெருவயிறு' (பாடல்-4) என்று உணவுப்
பொருளில் விருப்பம் உள்ளவராக விநாயகரைக்
காட்டுகிறார்.
இக்கருத்து மக்களிடையே இன்றளவும் வழங்கி
வருவது
கருதத்தக்கது.
சிவபெருமான்
திருஇரட்டை மணிமாலை
37 பாடல்களைக் கொண்டது. அந்தாதி
நூல். எனினும் நூலின்
இறுதிச் செய்யுளின் சொல் முதல் செய்யுளின் தொடக்கமாக
வரவில்லை. சிவன் கோவணம் உடுத்துப் பலி ஏற்ற
செய்தி
அதிகமாக இடம்பெறுகிறது. அகத்துறையில் பலபாடல்கள் உள்ளன.
திருத்தலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ன. வர்ணனைகள்,
அகத்துறைக் கருத்துகள் அனைத்தும் சிவன் துதியாகவே உள்ளன.
சிவபெருமான்
திரு அந்தாதி
நூறு வெண்பாக்களைக்
கொண்ட நூல். அந்தாதி
அமைப்புடையது. பல தலப்பெயர்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஆனையூர், இடுமணல், கோவணம், தாங்கால், திருமாலுமங்கை,
பனிச்சாங்காடு, வெள்ளங்காடு என்றெல்லாம் இந்த
நூலில் சொல்லப்பட்டுள்ள தலங்கள் குறித்து விளங்கவில்லை.
சிவன் 1008 பேர்களைக் கொண்டவன் என்கிறது, ஒரு பாடல்(81).
அகத்துறைப் பாடல்களே அதிகம் உள்ளன.
6.3.1 பரணர் பாடிய சிவபெருமான் திருஅந்தாதி
அந்தாதி வகையில் 100
வெண்பாக்களைக் கொண்டது.
பதினொராம் திருமுறையில் இந்நூல் இடம்பெற்றுள்ளது. 101ஆம்
பாடலாக உள்ள தனிப்பாடல் ஆசிரியர் பெயரைக் கூறுகிறது. பத்துப்
பாடல்களில், ‘ஆரூர்' இடம் பெற்றுள்ளது. எனவே
ஆசிரியர்
திருவாரூரினர் என்பர். 64 பாடல்களில்
தலப்பெயர்கள்
இடம்பெற்றுள்ளன. 36 பாடல்களில் தலப்பெயர்
இல்லை.
சண்டீசருக்கு அருள் செய்தது (11), கண்ணப்பர் கண் தந்த செயல்
(28) பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. நக்கீரதேவர், கபில
தேவர், பரண தேவர் மூவரும் சமகாலத்தினர் எனலாம்.
6.3.2 கல்லாடதேவர் இயற்றிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
38 அடிகளைக் கொண்ட சிறுபாடல்
இது. ஆசிரியப்பாவில்
அமைந்துள்ளது. கல்லாடதேவர் பாடியது. நக்கீரர் இதே பொருளில்
பாடிய நூலுக்கு அடுத்து இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
இதில்
கண்ணப்பர் வரலாறு சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கண்ணப்பர்
என்ற பெயர் ஒரு இடத்திலும் இடம்பெறவில்லை. ‘வேட்டுவன்'
என்றே சொல்லப்பட்டுள்ளது. கோசரியார் என்று அந்தணர் பெயர்
சொல்லப்பட்டுள்ளது. அனையவன் என்று ஓருமையில் தொடங்கி
நூல் முடிவில் திருவேட்டுவர் என்று மரியாதைப் பன்மையில்
முடித்து இருப்பது கண்ணப்பரிடம் நூலாசிரியருக்குள்ள ஈடுபாட்டைக்
காட்டுகிறது.
6.3.3 பட்டினத்துப் பிள்ளையார் பாடிய நூல்கள்
கோயில்
நான்மணிமாலை
பட்டினத்தடிகள் பாடிய
ஐந்து நூல்கள் பதினோராம்
திருமுறையில் உள்ளன. திருமுறை ஆசிரியராகிய
இவரும்,
துறவறத்தைப் பெரிதும் வலியுறுத்தியும் பெண்களைப் பழித்தும்
பாடிய பட்டினத்தாரும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவர்கள்.
கோயில் என்பது சிதம்பரம்.
நடராசப் பெருமான் துதியாக
அமைவது இந்நூல். வெண்பா, கலித்துறை, ஆசிரியப்பா, விருத்தம்
என்ற முறையில் மாறிமாறி அந்தாதியாக இந்த நூல் அமைந்துள்ளது.
பட்டினத்தார் பாடினார். இவருக்கு முன் நான்மணிமாலை யாரும்
பாடியதில்லை. பட்டினத்தடிகள் பாடிய கோயில்நான்மணிமாலையே இத்தகு இலக்கிய வகைக்கு முதல் நூல் ஆகும். இந்த நூலின்
இறுதிப் பாடல் 53 அடிகளில் இறைவனைப் போற்றி, போற்றி என்று
துதிக்கிறது. இந்நூலில் 11 பாடல்கள் அகத்துறையில் உள்ளன.
இறைவனை ‘நாயனார்' என்கிறார்.
திருக்கழுமல
மும்மணிக்கோவை
‘கழுமலம்' என்பது சீகாழி.
சீகாழியில் உள்ள சிவபெருமானை
ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை எனும்
மூவகை
பாடல்கள் மாறிமாறி வர அந்தாதியாக இந்த நூல் அமைந்துள்ளது.
ஆனால் பாடலின் இறுதித் தொடர் அங்ஙனம் அமையவில்லை.
எனவே இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
என்று
கருதுவதில் பிழை இல்லை. இந்த நூலில் 30 பாடல்கள் இருக்க
வேண்டும். 12 பாடல்கள் மட்டுமே உள்ளன. பிற்காலத்தினர் 18
பாடல்களைச் சேர்த்து முப்பது பாடல் என்று கணக்கிட்டாலும்,
அப்பதினெட்டுப் பாடல்களில் சொல்லும்,
பொருளும்
பிற்காலத்தனவாக உள்ளன என்று ம.பாலசுப்பிரமணிய முதலியார்
கூறுவார். நொச்சியோ, கரந்தையோ, வெறும் இலையோ சிவனது
வழிபாட்டுக்குப் போதுமானது என்று பட்டினத்தடிகள் கூறுவதைப்
பாருங்கள். ‘நான் வழிபடும் நேரம்தான் பொழுது, இட்டதே மலர்,
சொன்னதே மந்திரம் ஏற்றுக்கொண்டு என்னை நீ காக்க வேண்டும்'
என்கிறார்.
இயன்றதோர் பொழுதின் இட்டது மலரா
சொன்னது மந்திரமாக, என்னையும்
இடர்ப்பிறப்பு இறப்பெனும் இரண்டின்
கடற்படா வகை காத்தல் நின்கடனே
(வரிகள்26-29,பாடல்7)
என்பதே அந்தப் பாடல்.
திருவிடைமருதூர்
மும்மணிக்கோவை
இந்த நூலில் 30 பாடல்கள் உள்ளன.
பட்டினத்தடிகள் பாடியது.
சைவர்களால் பெரிதும் பயிலப்படும் நூல் ஆகும். ‘உமையொரு
பாகன்' வடிவம் பாதம் முதல் தலைமுடி வரை வர்ணிக்கப்படுகிறது.
திருவடி, திருவின் ஆகம் (மார்பு), திருக்கரம், திருநெடுநாட்டம்
(கண்கள்), திருமுடி என்று ஆறு பகுதிகளாக அர்த்த நாரீசுவரர்
வடிவத்தைப் பட்டினத்தடிகள் இந்த நூலில் வர்ணித்திருப்பதைப்
போல் வேறு எங்கும் இடம் பெறவில்லை. பட்டினத்தடிகள்
திருவுருவ வர்ணனையாகக் கூறும் விளக்கங்களில் பல
சிற்ப
சாத்திரங்களிலும் காணப்படுவது அறியத்தக்கது. மொழி ஆய்வு
செய்பவருக்கு இந்த நூலில் இடம்பெறும் சொற்கள்
சிறந்த
ஆய்வுத் தளமாகத் திகழும். சிறந்த சைவ சமய நூல்.வாழ்வில் நல்ல
கதி அடைய விரும்பும் சைவர்களுக்கு விளக்கமாக இந்த நூல் வழி
காட்டுகிறது.
திரு
ஏகம்பமுடையார் திரு அந்தாதி
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதரைத்
துதிக்கும் பாடல் இது. கட்டளைக் கலித்துறை வடிவத்தில் அந்தாதியாக
அமைந்து 100 பாடல்களைக் கொண்டுள்ளது. துதிப்பாடல்கள்
அகத்துறையில் அமைந்துள்ளன. அர்த்த நாரீசுவரத்
தோற்றம் புகழப்படுகிறது. தலங்களின் பெயர் கூறித் துதிக்கும்
தன்மையது. ஓரளவு துதியும், அகத்துறையும் மாறிமாறிப் பத்துப் பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது.
திரு
ஒற்றியூர் ஒருபா ஒருபஃது
‘ஒருபா ஒருபஃது' என்பது சிற்றிலக்கிய
வகையில் ஒன்றாகும்.
வெண்பாவிலாவது, அகவல் பாவிலாவது பத்துப்பாடல் பாடுவது
என்று பன்னிருபாட்டியல் இதற்கு இலக்கணம்
கூறுகிறது.
பட்டினத்தடிகள் பாடியநூல். அகவற்பாவால்
அமைந்தது.
திருவொற்றியூர் என்ற தலத்தில் எழுந்தருளிய சிவனை ஒவ்வொரு
பாடலிலும் முன்னிறுத்திப் போற்றும் முறையில் அமைந்துள்ளது.
திருவிசைப்பா
திருப்பல்லாண்டு (அ) ஒன்பதாம் திருமுறை
ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு என்றே பெயர் பெறும். இதில்
28 திருவிசைப்பாப் பதிகங்களும், ஒரு திருப்பல்லாண்டுப் பதிகமும்
உள்ளது. ‘இசைப்பா' என்பதால் இது தேவாரங்கள் போல
இசைக்கு உரியது என்பது தெளிவு,
பரம்பொருளின் புகழை இசைக்கின்ற பா என்று பொருள் கொள்ளத் தகுந்தது. இதைப்
பாடியவர்கள் ஒன்பதின்மர் ஆவர். அவர்களது பெயர், அருளிச்செய்த பதிகங்களின்
தொகை ஆகியவற்றைப் பழம் பாடல்கள் முறையாகச் சொல்கின்றன.
திருவிசைப்பாப் பாடினோர்
திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி
காட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம
நம்பி, சேதிராயர் ஆகிய ஒன்பதின்மர்.
இவர்களில் அதிகமான பதிகங்கள்
பாடியவர் கருவூர்த்தேவர்.
அவர் பாடிய பதிகங்கள் பத்து. நான்கு பதிகங்கள்
பாடியவர்
திருமாளிகைத் தேவரும், திருவாலி அமுதனாரும் ஆவர். சேந்தனார்
திருவிசைப்பா மூன்றும், திருப்பல்லாண்டு ஒன்றும் ஆக நான்கு
பதிகங்களைப் பாடியுள்ளார். இரண்டு பதிகம்
பாடியவர்கள்
பூந்துருத்தி நம்பியும், புருடோத்தம நம்பியும் ஆவர். ஏனையோர்
ஒவ்வொரு பதிகமே பாடி உள்ளனர்.
திருமுறைகள் பன்னிரண்டிலும்,
ஒன்பதாம் திருமுறையே
அளவில் மிகவும் சிறியது. பழம்பாடல் ஒன்று 345 என்று பாடல்
தொகை கூறும். ஆனால் கிடைத்திருப்பது 301 தான். கருவூர்த்
தேவருடைய திருப்பூவணப்பதிகம் எட்டே
பாடல்களைக்
கொண்டது. பூந்துருத்தி நம்பி காட நம்பியின் திருவாரூர்ப்
பதிகம் இரண்டே பாடல்களைக் கொண்டது. ‘சாளரபாணி' என்ற
பண் இத்திருமுறையில் மட்டுமே உள்ளது. சேந்தனார்
பாடிய
திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையின் இறுதிப்பகுதி ஆகும்.
சிவனுக்கு வேறு எங்கும் திருப்பல்லாண்டு பாடப்படவில்லை. சோழ
அரசன் கண்டராதித்தனும், தீண்டாத வகுப்பைச்
சேர்ந்த
சேந்தனாரும் பதிகம் பாடிய சிறப்பு இத்திருமுறைக்கே உரியது.
பதிகங்கள் யாவும் சிவனையே துதிப்பவை. முருகன்
மீது
சேந்தனார் பாடிய திருவிசைப்பா ஒன்றே ஒன்று உள்ளது. இதிலுள்ள
29 பதிகங்களில் 16 பதிகங்கள் தில்லைக்கு உரியன. தில்லைத்
திருமுறை என்றே இதைக்
கூறவும் இடம் தருகிறது.
இத்திருமுறையில் சொல்லப்பட்ட தலங்கள் 14. தில்லைக்குரியன 16
பதிகங்கள். ஏனைய தலங்களாவன; வீழிமிழலை, ஆவடுதுறை,
திருவிடைக்கழி (சேந்தனார்) களந்தை ஆதித்தேச்சுரம்,
கீழக்கோட்டூர் மணியம்பலம், முகத்தலை, திரைலோக்கிய சுந்தரம்,
கங்கைகொண்ட சோழேச்சுரம், பூவணம், சாட்டியக் குடி, தஞ்சை
இராசராசேச்சுரம், இடைமருதூர் (கருவூர்த் தேவர்),
ஆரூர்
(பூந்துருத்தி நம்பிகாட நம்பி) என்பன. பதிகம் ஒவ்வொன்றுக்கும்
பண் கூறப்பட்டுள்ளது. யார் பண் வகுத்தார்? எப்போது வகுத்தார்?
என்பது தெரியவில்லை. இங்குப் பயிலும் பண்கள் ஆறு ; அவற்றில்
பஞ்சமம் - 21, காந்தாரம் - 2, புறநீர்மை - 3,
நட்டராகம் - 1,
இந்தளம்-1, சாளரபாணி-1 என்பன.
சோழர் காலம் சைவத்துக்குப் பொற்காலம்
எனலாம். மன்னர்கள்
ஆழ்ந்த சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர். ஆலயங்களை எழுப்பினர்.
அவற்றைப் பொற்கூரைகளால் அலங்கரிக்க முற்பட்டனர். மடங்கள்
தானங்கள் பெற்றன. ஆலயங்களில் தேவாரத் திருவாசகப் பாடல்கள்
ஒலித்தன. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளாகத் தொகுக்கத்
தூண்டிய சூழல் நிலவியது எனலாம். சிவனைத் துதிக்கும் பக்திச்
சுவை கனிந்த பாடல்களும், பாசுரங்களும் ஆக்கப்பட்ட நிலையின்
அடுத்த கட்டமான, சைவப் பெரியோர்கள் துவக்கிய வழியில்
சமயப் பெரியார்கள் சைவ சித்தாந்தங்களை உருவாக்கும் பணிக்கு
இக்காலம் தளமமைத்துத் தந்தது. சிற்றிலக்கியங்கள் இலக்கிய
தளத்தில் கால் பதிக்கும் நிலை நேரிட்டது.
|