3.0 பாட முன்னுரை

பன்னிரண்டாம் நூற்றாண்டின் இலக்கியச் சூழல், இலக்கியம் தொடர்பான பிற செய்திகள் ‘12ஆம் நூற்றாண்டு முதற் பகுதி’ எனும் பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன. முதற்குலோத்துங்கனோடு தொடங்கி, மூன்றாம் குலோத்துங்கனோடு முடிவடையும் இந்நூற்றாண்டு, தமிழ் வளர்ச்சிக்குரிய பொற்காலமாக அமைந்தது. இக்காலம், பொதுவாக, சோழநாட்டிலும், தமிழ் நாட்டிலும் பெரும் போர்கள் இல்லாத காலம். எல்லா வகையாலும் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் பொற்காலம் என்பதில் ஐயமில்லை. இந்நூற்றாண்டின் பெருஞ்சிறப்பு, பெரிய புராணம் தோன்றியதாகும். இந்நூற்றாண்டின் மற்றொரு சிறப்பு இராமானுச நூற்றந்தாதி தோன்றியதாகும்.

நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாருக்குப் பின் தோன்றிய வைணவ ஆசிரியர் அனைவரும் இராமானுசர் உட்பட, வடமொழியில் நூல் எழுதினார்கள். இராமானுசரும் வடமொழியில் எழுதினார். இராமனுசரை அடுத்து, இந்நிலை மாறுகிறது. இது தவிர, வைணவத்தில் முதல் மணிப்பிரவாள நூலும் இக்காலப்பகுதியில் தோன்றியது. சமண இலக்கியத்தில் வளர்ச்சி அவ்வளவாக இல்லை. பிரபந்த இலக்கியங்கள் சில தோன்றின.