5.1 சைவ இலக்கியங்கள்

இக்காலக் கட்டத்தில் சைவ இலக்கியங்கள் அதிக எண்ணிக்கையில் தோன்றின. இக்காலப் பிரிவில் வெளிவந்த சைவ இலக்கியங்களைச் சமய நூல்கள் என்றும் சாத்திர நூல்கள் (தத்துவ நூல்கள்) என்றும் பிரிக்கலாம். வில்லிபுத்தூரார் மற்றும் இரட்டைப்புலவரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கவை.

5.1.1 சைவ இலக்கியப் படைப்பாளர்கள்

இக்காலக்கட்டத்தில், சைவ இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் பலர். அவர்களுள் உமாபதி சிவாச்சாரியார், சிற்றம்பல நாடிகள், தத்துவப் பிரகாசர், சம்பந்த முனிவர் ஆகிய சைவ சித்தாந்த ஆசிரியர்கள் நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

  • உமாபதி சிவாச்சாரியார்
  • இவர் சைவசித்தாந்த ஆசிரியர் நால்வரில் கடைசியாக வந்தவர். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம், திருவருட்பயன் உட்படப் பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள் வினா வெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம், திருமுறைத்திரட்டு, கோயிற்புராணம், திருமுறைகண்ட புராணம், திருத்தொண்டர் புராணசாரம், சேக்கிழார் புராணம் போன்றவையாகும்.

    சிவப்பிரகாசம் சிவஞானபோதத்தின் சார்பு நூலாகும். (சிவஞானபோதம் பற்றிக் கடந்த பாடப்பகுதியில் விரிவாகப் படித்தோம்). இதன் பாயிரத்துள் ஆசிரியர், ஆசாரியார் மரபு, சைவ நூல்களின் இயல்பு, தீக்கை வகைகள் ஆகியவை பற்றிக் கூறியுள்ளார். சிவஞானபோதத்தின் பன்னிரு சூத்திரங்களையொட்டியே இந்நூல் பாடல்களைப் பாகுபடுத்திக் கூறுவர்.

    திருவருட்பயன், திருக்குறள் போன்ற அமைப்பு உடையது. பத்து அதிகாரங்கள்; ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்து குறள்; பாடல்கள் அழகாக எளிமையாக உள்ளன. இதன் தலைப்புகள் எளிமையாக உள்ளன. சித்தாந்த சாத்திரம் கற்கப் புகுவோர் முதலில் பயில்வது இந்நூலேயாகும்.

  • சிற்றம்பல நாடிகள்
  • இவர் துகளறு போதம், இரங்கல் மூன்று, திருப்புன்முறுவல் முதலிய ஐந்து நூல்களை இயற்றியுள்ளார்.

    துகளறு போதம் இவர் இயற்றிய நூல்களுள் முக்கியமானது. மெய்கண்டசாத்திரம் 14 எனக் கணக்கிட்டுக் காட்டும் ‘உந்திகளிறு’ என்ற வெண்பாவில் இந்நூலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் பல ஏட்டுப்பிரதிகளில், இப்பாடலில் வரும் உண்மைநெறி விளக்கம் என்ற பெயர் இல்லாமல் துகளறு போதத்தைச் சேர்த்து 14 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்நூல் திராவிட மாபாடியம் செய்த சிவஞான சுவாமிகள் போன்ற சிறந்த சாத்திர உரையாசிரியர்களால் எடுத்தாளப்பெற்ற பெருமையுடையது. காப்புச் செய்யுளும், 100  வெண்பாக்களும், இறுதியில் நூற்பொருள் கூறும் இரு பிற்கால வெண்பாக்களும் உடையது. முக்தி நெறிக்குரிய மார்க்கம், தசகாரியம் (பத்து படிகள்) என்பது சைவ சாத்திர மரபு. தச காரியங்களை முப்பது நிலைகளாகச் சில சாத்திரங்கள் கூறும். இவ்வாறு கூறும் முதல் சாத்திரம் துகளறு போதம் ஆகும்.

    சிற்றம்பல நாடிகளின் நேர்மாணாக்கர் நால்வர். அவர்களுள் தத்துவநாதர், தத்துவப் பிரகாசர் என்போர் நூல் எழுதினார்கள் (தத்துவநாதர் - உண்மைநெறி விளக்கம் என்ற நூலையும், தத்துவப் பிரகாசர் - தத்துவப் பிரகாசம் என்ற நூலையும் எழுதினர்). மற்ற இருவர் சம்பந்த முனிவர், ஞானப்பிரகாச முனிவர் என்போர் ஆவர். சம்பந்த முனிவரும் அவர் வழியில் வந்தவரும் நூல் எழுதியுள்ளனர். ஞானப்பிரகாசரும் அவரது பரம்பரையினரும் நூல் எழுதவில்லை. சிற்றம்பல நாடிகளின் மாணக்கர்களுடைய பணிகளை இங்கே காணலாம்.

  • தத்துவ நாதர்
  • சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கில் பதின்மூன்றாவதாக எண்ணப்படுவது உண்மைநெறி விளக்கம். இதன் ஆசிரியர் சீகாழித் தத்துவநாதர். இந்த நூலை உமாபதி சிவம் செய்தார் என்ற கருத்தும் அறிஞர்களிடையே உண்டு. இந்நூல் ஆறு அரிய பாடல்களை உடையது. அந்த ஆறு பாடல்களும் தசகாரியம் கூறும். இந்நூலுக்குப் பல உரைகள் உள்ளன. இந்நூலாசிரியர் தத்துவநாதர், அருணந்தி சிவாசாரியார் பாடிய இருபா இருபஃதுக்குச் சிறப்பான உரை எழுதியுள்ளார். இந்த உரை, மெய்கண்ட சாத்திர நூல்களுக்கு எழுதப்பட்ட உரைகள் அனைத்திலும் காலத்தால் மிகப் பழமையானது.

  • தத்துவப் பிரகாசர்
  • தத்துவப் பிரகாசர் எழுதிய நூல் தத்துவப் பிரகாசம். (தத்துவப் பிரகாசர் என்ற பெயரில் 14-16ஆம் நூற்றாண்டுகளில் பலர் இருந்தனர். அவர்களுள் சீகாழியைச் சேர்ந்தவர் இவர். இவ்வரிசையில் காலத்தால் முதலாமவர்.) இதற்குத் தத்துவ கவிதை என்ற பெயரும் உண்டு. சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் ஞானபாதம் ஒன்றையே விரித்தும், தொகுத்தும் கூறும். மற்றைய சரியை, கிரியை, யோகம் ஆகியவை மிகச் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றையும் தமிழால் உணர்த்த வேண்டும் எனக் கருதி இந்நூலை இவர் செய்ததாகக் கொள்ளலாம்.

  • சம்பந்த முனிவர்
  • இவர் பாடிய நூல்களாக இக்காலத்தில் கிடைப்பவை சிவானந்தமாலை, சிற்றம்பல நாடிகள் சாத்திரக் கொத்திலுள்ள வெண்பா, தாலாட்டு போன்றவையாகும்.

    சிவானந்த மாலை 414 வெண்பாக்களைக் கொண்டது. இது மிகச்சிறந்த சைவ சித்தாந்த நூல். பல சமய உண்மைகளைச் சுவையுடைய உவமைகளால் தெளிவாக விளக்குகிறது. பல பாடல்களில் ஞானசம்பந்தரைப் போற்றுகிறார் ஆசிரியர். இலக்கியச்சுவை ததும்பும் பல பாடல்கள் இந்நூலுள் உள்ளன.

    இவர்களைத் தவிர, சம்பந்த சரணாலயர், சிவாலய முனிவர், அருள் நமச்சிவாய தேசிகர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய தேசிகர் போன்றோர் உள்ளிட்ட பலர் இக்காலப் பகுதியில் சைவ சமயத்தைப் பொறுத்தவரையில் சிறந்த இலக்கியப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

    5.1.2 கச்சியப்பரின் படைப்பு

    கந்தபுராணம் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்டது. இவருடைய காலம் தெளிவில்லாததாக உள்ளது. பலர் பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் பொதுவாக அனைவரும் ஒப்புக்கொள்வது, கச்சியப்ப சிவாசாரியார் கி.பி. 1400க்கு முன்னால் வாழ்ந்தார் என்பதுதான்.

    கந்தபுராணம் ஆறு காண்டங்களை உடையது. இதில் முருகப் பெருமானது தோற்றமும் வீரமும், சூரபதுமன் ஆகியோர் கொடுமையும், அவர்கள் அழிவும், முருகப் பெருமான் அருளும், பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. கந்தபுராணத்தில் சொல்லப்படாத பொருள் எதுவும் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. இராமாயணம், பாகவதம் ஆகிய நூல்களில் வைணவ சமயத் தத்துவங்கள் காணப்படுவது போல, சைவ சித்தாந்தத் தத்துவங்கள் கந்தபுராணத்தில் மிகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

    5.1.3 இரட்டைப் புலவர் படைப்புகள்

    இக்காலப் பகுதியில் தோன்றியவர் இரட்டைப்புலவர். சோழ நாட்டில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள ஆலந்துறை என்ற ஊரில் இவர்கள் இருந்தனர். இவர்கள் அத்தை பிள்ளை, அம்மான் (தாய்மாமன்) பிள்ளையாக இருந்தனர். ஒரு பிள்ளை கண்ணில்லாத குருடர். மற்றொரு பிள்ளை காலில்லாத முடவர். குருடரின் பெயர் இளஞ்சூரியர். காலில்லாத முடவர் முதுசூரியர். இருவரும் சேர்ந்து ஒரே உள்ளத்தோடு செந்தமிழ்ப்பாக்கள் பாடும் தகுதி பெற்றிருந்தனர். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருந்தமையால் இருவருடைய இளமைப் பெயர்களும் மறைந்து இரட்டைப்புலவர் என்ற பெயரே நிலைத்தது.

    இவர்கள் பாடிய நூல்கள் திருஆமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம, காஞ்சி ஏகாம்பரநாதர் உலா, ஏகாம்பரநாதர் வண்ணம் என்பன. மூவர் அம்மானைப் பாடல்கள், தியாகேசர் பஞ்சரத்தினம் என்பனவும் இவர்கள் பாடியனவாகக் கூறுவர்.

  • திருஆமாத்தூர்க் கலம்பகம்
  • இந்நூல் 101 பாடல்களும், காப்பு விருத்தம் ஒன்றும் உடையது. இந்நூலுள் அகத்துறைப் பாடல்களும், சந்தப்பாடல்களும் அதிகமாக உள்ளன.

  • தில்லைக்கலம்பகம்
  • இரட்டைப்புலவர் பாடிய இரண்டாவது கலம்பகம், காப்பு வெண்பாவும், 100 பாடல்களும் உடையது. சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராசப் பெருமான் மீது பாடப்பெற்றது. பெருமான் சிறப்பு, வழிபட்டோர், பிற தலங்கள், பஞ்சபூதத் தலங்கள், ஐந்து சபைகள் முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

    யார் எவ்விதம் இறந்தாலும், புரியைக் (புரி - பழுதை, வைக்கோல் தாளை முறுக்கிச் செய்த கயிறு) கட்டி இழுத்து எறிந்தாலும் கூட, சிதம்பரத்தில் சென்று இறத்தல் நன்று என்று கூறுகிறார்கள் இந்த இரட்டைப்புலவர்கள்.

    பழுத்துச் செத்தாலும் பிறந்து செத்தாலுமிப் பாழுடலம்
    கொழுத்துச் செத்தாலும் மெலிந்து செத்தாலும் கொலைப்படினும்
    புழுத்துச் செத்தாலும் புதைத்தாலும் காலில் புரியைக் கட்டி
    இழுத்துச் செத்தாலும் சிதம்பரத் தேசென் றிறத்தல் நன்றே

  • காஞ்சி ஏகாம்பரநாதர் உலா
  • இது, இரட்டைப்புலவரால் இயற்றப்பட்டது. நூலில் தலப்பெருமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. கயிலாயத்தில் உமாதேவியார், சிவபெருமான் திருக்கண் புதைக்க (மறைக்க) உலகம் இருளில் மூழ்கியது. உலகத்தைத் துன்பத்தில் ஆழ்த்திய பாவம் தீருவதற்காகக் காஞ்சியில் சென்று தம்மைப் பூசிக்கும்படி பிராட்டிக்குப் பெருமான் உத்தரவிட்டார். அம்மையார் காஞ்சியின் சிறப்புகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வரும் செய்தி உலாவில் விளக்கமாக உள்ளது. பின்னர் அம்மையார் பூசித்தல், கம்பை நதியில் வெள்ளம் கண்டு பெருமான் திருவுருவை அணைக்க இறைவன் வெளிப்படுதல், பங்குனி விழா, அலங்காரச் சிறப்பு, உலா வருதல், பின்னர் ஏழு பருவப் பெண்களும் கண்டு விரும்புதல் என்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.

    பேரிளம்பெண் என்ற பருவத்தைக் கூறும் போது சிவபெருமானின் இயல்பை மிகவும் நன்றாக விளக்கியுள்ளனர் இந்த இரட்டைப்புலவர்கள். காலத்தால் ஓரளவு முற்பட்ட இந்த நூல், பின்வந்த புலவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து வருகிறது.

  • தனிப்பாடல்கள்
  • இரட்டைப் புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் எண்ணிறந்தனவாய் உள்ளன. அவற்றுள் சுவையுடைய ஒரு பாடலைக் காண்போம்.

    ஒரு முறை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் இரட்டைப் புலவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். முதுசூரியர் கால் இல்லாத முடவராதலால் கரையில் இருந்தபடியே குளித்துக் கொண்டிருந்தார். இளஞ்சூரியர் காண்பார்வை இல்லாதவராக இருந்தாலும் குளத்தினுள் இறங்கிச் சென்று நீராடிக் கொண்டிருந்தார். அப்போது தாம் இடையில் உடுத்தியிருந்த ஓராடையைத் தண்ணீரில் தோய்த்து, அதனை துவைத்துக் கொண்டிருந்தார். கரையிலிருந்த முதுசூரியர், இளஞ்சூரியரைப் பார்த்து “ஆடையை நீரிலே தோய்த்து அதனை அடுத்தடுத்து அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தால், அது தண்ணீரில் விழுந்து ஓடிவிடுமே” என்று கூறினார். அதைக் கேட்ட இளஞ்சூரியர் ‘இந்தக் கலிங்கம் (கலிங்கம் - ஆடை) போனால் போகட்டும் கவலையில்லை; மதுரை மாநகரில் ஒப்பற்ற லிங்கமாய் இருக்கும் சொக்கலிங்கம் எனக்குத் துணையாய் இருப்பார்” எனப் பதில் கூறினார்.

    அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம்அதனைத்
    தப்பினால் நம்மையது தப்பாதோ? - இப்புவியில்
    இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
    சொக்கலிங்கம் உண்டே துணை

    (அப்பு - நீர்; தப்பினால் - துவைத்தால்; தப்பாதோ - ஓடிவிடாதோ; கலிங்கம் - ஆடை)