5.7 வாழ்க்கை வரலாற்று இலக்கியம்

வாழ்க்கை, வரலாறு என்னும் இரு சொற்களின் இணைப்பாக இப்பெயர் அமைகின்றது. பொதுமக்களிடையே கலை, அரசியல், இலக்கியம், அறிவியல் என ஏதாவது துறையில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கையையோ, சுவையான அனுபவங்களையோ சுவைபடத் தொகுத்து அளிப்பது வாழ்க்கை வரலாறு இலக்கியம் ஆகும்.

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு, விநோத ரசமஞ்சரி, வண்ணச் சரபம், தண்டபாணி சுவாமிகளின் புலவர் புராணம், தமிழ்நாவலர் சரிதை, குருபரம்பரைப் பிரபாவம், சேய்த்தொண்டர் புராணம் என்பவற்றை வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் முன்னோடிகள் என நாம் கொள்ளலாம்.

வாழ்க்கை வரலாற்று இலக்கியம் பிறர் வரலாறு, தன் வரலாறு எனும் இருபெரும் பிரிவுகளை உடையது என்கிறார் ச.வே.சுப்பிரமணியன். இவ்விரு வகைப் பிரிவிலும் உரைநடை, கவிதை, கடிதம், நாடக வடிவில் நூல்கள் உள்ளன.

பிறர் வரலாறு கூறும் நூல்கள்

1 டாக்டர் உ.வே.சா. - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் சரித்திரம்
2 மு.நமச்சிவாயம் - காசி முதல் தாஷ்கண்ட் வரை
3 சி.ஞானமணி - எழுத்தாளர் ம.பொ.சி
4 திரு.வி.க - மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
5 மு.வ - அறிஞர் பெர்னாட்ஷா
6 ரகுநாதன் - புதுமைப்பித்தன் வரலாறு
7 கல்கி - மாந்தருக்குள் ஒரு தெய்வம்
8 மறை. திருநாவுக்கரசு - மறைமலையடிகள் வரலாறு
9 சோ.சிவபாத சுந்தரம் - கௌதம புத்தர் அடிச்சுவட்டில்
10 கௌசிகன் - டாக்டர் ராதாகிருஷ்ணன்
11 சோமலெ - பண்டிதமணி
12 அ.லெ. நடராசன் - ஏழைப்பங்காளன் லெனின்
13 பி.ஸ்ரீ - பாரதி - நான் கண்டதும் கேட்டதும்
14 ம.பொ.சி - வீரபாண்டிய கட்டபொம்மன்
15 ரா. கணபதி - அறிவுக்கனலே அருட்புனலே

ஒருவர் தன் வரலாற்றினைத் தானே எழுதிக் கொள்ளுதல் தன்வரலாறு ஆகும். பாரதியின் பாரதி அறுபத்தாறு என்ற நூலைத் தன்வரலாற்றிலக்கிய முதல் நூல் எனலாம். பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகமேடை நினைவுகள் நீண்டதாக ஆறுபகுதிகள் கொண்டமைகிறது. உ.வே.சாவின் என் சரித்திரம், நான் கண்டதும் கேட்டதும், நினைவு மஞ்சரி என்பன குறிப்பிடத் தக்கன.

• பிற குறிப்பிடத்தக்க நூல்கள்

1 திரு.வி.க - வாழ்க்கைக் குறிப்புகள்
2 நாமக்கல் கவிஞர் - என் கதை
3 வ.உ.சி - சுயசரிதை
4 கண்ணதாசன் - வனவாசம்
5 ஜெயகாந்தன் - நினைத்துப் பார்க்கிறேன்
6 ச.து.சு யோகியார் - ஆத்ம சோதனை