1.0 பாட முன்னுரை

திராவிட மொழிகளுள் பழமையான இலக்கிய இலக்கணப் பாரம்பரியத்தை உடையதாகத் தமிழ்மொழிதான் விளங்கி வருகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பா(462)வின்படி, மொழி காலந்தோறும் மாறிவரும் தன்மையுள்ளது எனலாம். தொல்காப்பியர் காலம், சங்க காலம், சங்கம் மருவிய காலம் என்று பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்மொழி வளர்ச்சியடைந்து கொண்டே வந்துள்ளது. பல்லவர் காலத் தமிழிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இக்காலக் கட்டத்தில் எழுந்த இலக்கியங்களே அன்றிக் கல்வெட்டுகளும் பல்லவர் காலத் தமிழ் மொழியின் தன்மையை அறியப் பேருதவி புரிகின்றன எனலாம்.