5.0 பாட முன்னுரை
தமிழ்மொழி வரலாற்றில், நாயக்கர் கால மொழிநிலை ஒரு
திருப்புமுனை என்று கூறலாம். இடைக்காலத்தில் காணப்பட்ட
மொழிக் கூறுகள் சில நாயக்கர் காலத்திலும் நிலைத்து விட்டன.
நாயக்கர் காலம் வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்த காலம்.
அக்காலக் கட்டத்தில்தான் புதிய உரைநடை வடிவமும்
தோன்றியது. இத்தகைய சூழலில் தமிழ் மொழியில் பல
மாற்றங்கள் ஏற்பட்டன. பல புதிய மாற்றங்களையும் ஏற்றுக்
கொள்ள வேண்டிய நிலை மொழிக்கு உண்டாகிவிட்டது.
அக்காலக் கட்டத்தில் ஏற்பட்ட மொழிமாற்றங்கள் பெரும்பாலும்
ஒலிகளையும் இலக்கண அமைப்பையும் அடிப்படையாகக்
கொண்டவை. இத்தகைய பல்வேறு மொழி மாற்றங்களை
விளக்குவதாக இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.
|