| 
     3.3 ஏலாதி
       பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் 
        ஏலாதி என்பதும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏலாதி என்பது ஏலம், இலவங்கம், 
        சிறு நாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறு பொருள்களும் ஒரு குறிப்பிட்ட 
        அளவோடு சேர்க்கப்பட்ட ஒரு வகை சூர்ணமாகும். இது உடலுக்கு வலிமை, பொலிவு, 
        தெம்பு ஆகியவற்றைத் தரவல்லது. அதுபோல இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள 
        ஆறு கருத்துகளும் மக்களின் அறியாமை நோயை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் 
        இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற கீழ்க்கணக்கு 
        நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும். 
         
        3.3.1 ஆசிரியர்  
      
        நூலின் ஆசிரியர் கணி மேதாவியார். 
        இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு 
        சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை 
        நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர். 
         
         
        3.3.2 நூலின் அமைப்பும் 
        பாடுபொருளும்  
      
       
        இந்நூல் 82 பாடல்களைக் கொண்டுள்ளது. சிறப்புப்பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் 
        ஆகிய இரு பாடல்களும் இதில் அடங்கும். இந்நூலும் ‘மகடூஉ முன்னிலை’ அமைப்பைக் 
        கொண்டது. அதாவது, ஒரு பெண்ணை விளித்து, அவளுக்கு ஒரு கருத்தைக் கூறுகிற வகையில் 
        பாடலை அமைப்பது. 1, 2, 6, 7, 13, 21, 28, 29, 31, 32, 33, 56, 76 ஆகிய எண்களைக் 
        கொண்ட செய்யுள்களில் இந்த விளியைக் காணலாம். 
        சமண சமயத்திற்குரிய சிறந்த 
        அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் 
        நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது. இல்லறம், துறவறம் ஆகிய நெறிகளையும் 
        விளக்குகிறது. சமண சமய நூலாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள அறநெறிகள் 
        அனைவர்க்கும் பொதுவான பொதுமை நெறிகளாக அமைந்துள்ளமை இதன் சிறப்பு எனலாம். 
        இந்நூலாசிரியர் காலம் நான்காம் நூற்றாண்டு.  
         
        3.3.3 உண்டி கொடுத்தலின் 
        பயன்  
      
       
        துறவிகள், மாணவர், வறியவர், தென்புலத்தார், துணையற்றவர், சிறுவர், சான்றோர் 
        ஆகிய இவர்களுக்கு நல்ல உணவைப் பகுத்துக் கொடுத்தவர் மறுமையில் மன்னராய் ஆட்சி 
        செய்வர் என்று கூறுகிறார் ஆசிரியர் (ஏலாதி-35). 
     
        பொய் பேசாமல், பிறர் சொல்லும் பொய்மைக்கு இணங்காமல், புலால் உண்ணாமல், எவரையும் 
        வையாமல், விருந்தினர் முகம் கோணாது முகம் மலர்ந்து பகுத்துக் கொடுத்து உண்பவர் 
        மண்ணரசராகி மகிழ்ந்து புகழ் பெறுவர் என்று ஏலாதி கூறுகிறது. (ஏலாதி-44). 
        இதுபோல் 21 பாடல்களில் ஆதரவற்றோர்க்கு 
        உணவு, உடை, கொடுத்து ஆதரிப்பவர், தீயனவற்றைப் பேசாமலும், செய்யாமலும் உள்ளவர்கள், 
        நோய் தீர்ப்போர் முதலியவர்கள் மண்ணாளும் அரசராவர் என்பதை மீண்டும் மீண்டும் 
        வலியுறுத்திச் சொல்வதன் மூலம் பசித்துயரம் நீங்க உணவு கொடுத்து ஆதரிப்பவர் 
        பெருவாழ்வு பெறுவர் என்ற கருத்தை ஏலாதி உறுதிப்படுத்துகிறது.  
         
        3.3.4 விண்ணுலகை அடையும் 
        நெறி  
       
        கொலை செய்யாது, மற்றவரைத் துன்புறுத்தாது வாழ்பவர், வஞ்சியாதவர் ஆகியோர் 
        விண்ணவர்க்கும் மேலாவர் என்று உரைக்கிறது ஏலாதி (ஏலாதி-2). இது விருந்தாய் 
        வருகின்ற அனைவரிடத்தும் இன்சொல் கூறி அறுசுவை உணவு அளித்தல் விண்ணக வாழ்வை 
        அளிக்கும். விண்ணுலக வாழ்வினை அடைவதற்கான வழிகள் கூறப்படுகின்றன (ஏலாதி 
        7, 20, 32, 33, 34, 36, 40). இவற்றுள் பொய்யாமையும் கொலை புரியாமையும், 
        புலால் உண்ணாமையும், உணவு கொடுத்தலும் ஆகிய அறங்களே விண்ணுலக வாழ்வினை அடையும் 
        வழிகளாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 
  
    
      
        
        
          
          காலில்லார் கண்ணில்லார் நாவில்லார் யாரையும்
           
          பாலில்லார் பற்றிய நூலில்லார் - சாலவும்  
          ஆழப் படும் ஊண் அமைத்தார் இமையவரால்  
          வீழப் படுவார் விரைந்து 
          
         | 
        
        
          | 
       
      
        | 
         
          (ஏலாதி-36) 
         | 
          | 
       
     
       கை கால் இழந்தவர், பார்வையற்றவர், ஊமையர், தமக்குத் 
        துணையாக எவருமே இல்லாதவர், நூலறிவு இல்லாதவர் முதலியவர்களுக்கு வயிறார உணவளித்தவர்கள் 
        தேவர்களால் விரும்பிப் போற்றப்படுவார்கள் என்பது இச்செய்யுளின் கருத்து. 
   
      3.3.5 
        கற்றவர்க்கு ஒப்பாவான்  
      
       
        கல்வியின் சிறப்பை இலக்கியத்தில் பல நிலைகளில் எடுத்துரைப்பதைப் பார்த்திருப்பீர்கள். 
        கற்றவர் என்று யாரைச் சொல்லலாம் என்று ஏலாதி கூறுவதைப் பாருங்கள். 
   
        துன்பம் தீர்த்தல், பிறரை இகழாமை, கீழ்மைப் பண்புடைய மக்களோடு பழகாமை, பசித்துன்பம் 
        போக்குதல், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதல், இனிய சொல் உடையவன் ஆதல் 
        ஆகிய பண்புகளை உடையவன் கற்றவர்க்கு ஒப்பாவான் என்று காட்டுகிறது ஏலாதி. (ஏலாதி-4)  
     
    அந்தப் பாடலைப் பாருங்கள்.  
  
    
      
        | 
         
          இடர்தீர்த்தல் எள்ளாமை கீழ்இனம் சேராமை  
          படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்  
          கண்டவர் காமுறும்சொல் காணில் கல்வியின்கண்  
          விண்டவர்நூல் வேண்டா விடும் 
         | 
        
        
          | 
       
      
        | 
         
          (ஏலாதி - 4) 
         | 
       
     
         
       ( இடர் = துன்பம்;  எள்ளாமை = இகழாமை;  படர் 
        = துன்பம் (பசித்துன்பம்)  பழிப்பின் நடை = பழிப்பதற்குரிய நடை; 
          காமுறும் சொல் = இன்சொல்;  விண்டவர் நூல் = மேலோர் கூறிய ஒழுக்க 
        நூல்கள்)
       
        கல்வியின் பயன் நல்லொழுக்கத்தையும் நல்ல நெறிகளையும் உடையவராகச் செய்தலேயாகும். 
        ஒருவர் மேற்கூறிய பண்புகளைப் பெற்றிருப்பாரேயாயின் அவர் கல்வியின் பயனை அடைந்ததாகவே 
        கருதலாம். ஆனால், அத்தகையோர்க்குச் சான்றோர்களின் அறநூல்களும் தேவையற்றுப் 
        போய்விடும். 
        விருந்தோம்பல் பண்பு இல்லறத்திற்குரிய சிறந்த பண்பல்லவா? அதுபற்றி ஏலாதி 
        என்ன சொல்கிறது? விருந்தினரிடம் இன்சொல் கூறலும், கலந்துறவாடலும் இருக்கை 
        உதவலும், அறுசுவை உணவு அளித்தலும், கடுஞ்சொல் ஒழித்து மென்சொல் வழங்குதலும் 
        ஒருவனிடம் அமைந்தால் அவனை வானோர் விருந்தினராய் ஏற்றுக்கொள்வராம் (ஏலாதி-7). 
         
    
      
        | 
         
          செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
           
          நல்விருந்து வானத் தவர்க்கு 
         
         | 
        
        
          | 
       
      
        | 
         
          (குறள் : 86) 
         
         | 
       
     
    
      
      என்ற குறட்பாக் கருத்தையொட்டி இது அமைந்துள்ளது.
       
        இல்லறச் சிறப்பையும் புலனடக்கச் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. 
        அமைச்சனாகும் தகுதி யாருக்கு உண்டு, தூதர் பண்புகள் யாவை என்பன போன்ற அரசியல் 
        கருத்துகளையும் குறிப்பிடுகிறது இந்நூல். 
        உடல் உறுப்புகளின் தொழில் ஆறு வகைப்படும் அவை உறுப்பினை எடுத்தல், முடக்கல், 
        நிமிர்த்தல், நிற்றல், கிடத்தல், ஆடுதல் என்பன என்று விவரிக்கிறது ஒரு பாடல் 
         (ஏலாதி-69).
          உடல் உறுப்புகளின் அழகெல்லாம் 
          அழகல்ல. கல்வியழகே அழகு என்று காட்டுகிறது இன்னொரு பாடல் (ஏலாதி-74). 
           
          3.3.6 பல்லுயிர்க்கும் 
          தாய் 
        
         
        அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான்? புலனடக்கம், பிறர்க்கு 
        ஈதல், பொறுமை, பொய் சொல்லாமை, ஊன் உண்ணாமை, நற்குணமுடைமை முதலிய ஆறு பண்புகளை 
        உடையவனாக இருப்பான். அவன் பல உயிர்கட்கும் தாய்போலும் அன்பினை உடையவன் என்று 
        தாய்மையைச் சிறப்பிக்கும் பாடலைப் பாருங்கள். 
         
        
    
      
        | 
         
          நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே  
          பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை  
          வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும் 
          தாய்அன்னன் என்னத் தகும் 
         
         | 
       
      
        
        
          
          
           (ஏலாதி-6) 
         | 
       
     
    
      
        ( நிறை = மனக்கட்டுப்பாடு;  நீர்மை = நற்பண்பு;   வேயன்ன தோளாய் 
        = மூங்கில் போன்ற தோள்களை உடைய பெண்ணே! (இது விளி) )
      
         3.3.7 காலனுக்கு அஞ்சுக 
        
     
        ஒருவருடைய வாழ்நாளின் இறுதிக்காலம் அறிந்து வருபவன் காலன். அவன் பகைவனின் 
        வாளுக்கும் அஞ்சான். கண்ணோட்டம் இல்லாத வீரத்துக்கு அஞ்சான், ஆண்மைத் தோற்றம் 
        கண்டு அஞ்சான், ஆட்சியைக் கண்டு அஞ்ச மாட்டான், பொருளுக்கும் அஞ்சான். எதற்கும் 
        அஞ்சாது வருவான். அவன் வருமுன்னே நல்லொழுக்கம் மேற்கொண்டு வீட்டு நெறி நிற்றல் 
        வேண்டும் என்கிறார் கணிமேதையார். 
       
  
    
      
        | 
         
          வாளஞ்சான் வன்கண்மை அஞ்சான் வனப்பஞ்சான்  
              ஆள்அஞ்சான் ஆம்பொருள் தான்அஞ்சான் - நாளெஞ்சாக்  
          காலன் வரவொழிதல் காணில் வீடெய்திய  
          பாலின்நூல் எய்தப் படும் 
         | 
       
      
        
        
          
          
           (ஏலாதி 
          - 22) 
         | 
       
     
    
      
        ( நாள் எஞ்சா = குறிப்பிட்ட நாள் தவறாத,   வீடெய்திய பாலின் நூல் 
        = வீடு பேற்றுக்கு வழி கூறும் நூல்கள்)
      
        காலன் வராமல் தடுப்பது எப்படி? காலனுக்கு அஞ்சி அறம் (தவம்) செய்து வீடுபெற 
        முயல வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடலைப் பார்ப்போமா? 
         
        
    
      
        | 
         
          அழப்போகான், அஞ்சான் அலறினால் கேளான்  
          எழப்போகான் ஈடற்றார் என்றும் - தொழப்போகான்  
          என்னேஇக் காலன்ஈடு ஓரான் தவமுயலான்  
          கொன்னே இருத்தல் குறை 
         | 
         | 
       
      
        
        
          
          
           (ஏலாதி 
          - 37) 
         | 
       
     
        
        
        (அலறி = கதறி, எழ = எழுந்து உபசரித்தாலும்,  ஈடற்றார் 
          = வலிமையில்லாதவர், ஓரான் = உணராமல், கொன்னே = வீணாக, 
          குறை = தவறு)  
           
          3.3.8 சுவர்க்கமும் 
          வீடும்  
         
     
        சுவர்க்கமும் வீடுபேறும் பற்றி ஏலாதி இன்னும் என்னவெல்லாம் சொல்கிறது பாருங்கள்.
      
      
        ஒருவன் கொடையினால் இம்மையில் இன்புற்று வாழலாம். தவத்தினால் விண்ணுலக வாழ்வு 
        பெறலாம்.
          மெய்யுணர்வினால் வீடு பேற்றை 
          அடையலாம் என்கிறார் கணி மேதையார். விண்ணுலக வாழ்வினும் 
          மேலான தன்மை உடையது வீடுபேறு என்னும் உண்மை இங்கு 
          வலியுறுத்தப்படுவதைக் காணலாம் (ஏலாதி-76). தவம் இரண்டு வகையினதாகக் 
          கூறப்படுகிறது. பயன் கருதிய தவத்தினால் விண்ணுலகம் 
          எட்டும். பயன்கருதாத, மெய்யுணர்வு பொருந்திய தவ ஒழுக்கத்தால் வீடுபேறு 
          கிட்டும். 
           
          3.3.9 மும்மருந்தும் 
          கூறும் முடிவு  
        
         
        திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி
        ஆகிய மும்மருந்துகளின்
        பெயர்களால் அமைந்த 
        நூல்களில் காணும் உண்மைகள் என்னவென்று பார்ப்போமா? 
        பணிவுடைமை முதலிய நல்லொழுக்கம் மேற்கொள்ளுதல், கொலை 
        புரியாமை, புலால் உண்ணாமை, 
        அருளுடைமை, இனிய முகத்துடன் வேண்டுவார்க்கு உணவு கொடுத்தல் ஆகிய இவையே இம்மைக்கும் 
        மறுமைக்கும் பெருவாழ்வு தருவன.    |