2.1.2 தூது இலக்கியத்தின் தோற்றம்
தமிழ்
மொழியில் தோன்றிய முதல் தூது நூல் நெஞ்சு விடு தூது
எனும் நூல் ஆகும். இந்த நூலின் ஆசிரியர் உமாபதி சிவாச்சாரியார்.
அவர் தமது நெஞ்சத்தைத் தம் ஆசிரியருக்குத் தூதாக அனுப்புகிறார்.
இதில் சைவ சித்தாந்தக் கருத்துகள் நிரம்ப உள்ளன. இந்த நூலின்
காலம் கி.பி. 14-ஆம் நூற்றாண்டு.
நண்பர்களே!
இப்போது நாம் ஒரு செய்தியை மனத்தில் கொள்ளவேண்டும். எந்த ஓர்
இலக்கியமும் திடீர் என்று தோன்றிவிடாது. ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்கு
உரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும் இலக்கிய
நூல்களிலும் காணப்படும் இதனைச் சிறிது விளக்கமாகக் காணலாம்.
• தொல்காப்பியத்தில் தூது
தொல்காப்பியர்
தாம் இயற்றிய இலக்கண நூல் ஆகிய தொல்காப்பியத்தில் தலைவனுக்கும்
தலைவிக்கும் இடையே பிரிவு ஏற்படுவதற்கு உரிய காரணங்களில்
ஒன்றாகத் தூது செல்வதைக் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைக்
கூறும் தொல்காப்பிய நூற்பா இதோ தரப்படுகிறது.
ஓதல்
பகை தூது இவை பிரிவே
(அகத்திணையியல். 27 ) |
(ஓதல்
= கல்வி கற்றல்; பகை = போர் செய்தல்)
தலைவனுக்கும்,
தலைவிக்கும் இடையே தூது செல்பவர்கள் யாவர் என்பதையும் தொல்காப்பியம்
கூறுகின்றது. தோழி, தாய், பார்ப்பான், பாங்கன் (தோழன்),
பாணன் என்போர் தூது செல்வர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.
இவை போன்று தூது பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் இடம்பெறக்
காணலாம்.
• சங்க இலக்கியங்களில் தூது
சங்க
இலக்கியங்களிலும் தூது பற்றிய செய்திகள் பல இடம் பெறுகின்றன.
• புலவரின் தூது
சங்க
இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில்
உள்ள பாடல் ஒன்றை இங்குக் காண்போமா?
அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாங் கையறுபு இனையக்
குமரி அம் பெரும்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின் இடையது
சோழ நன்னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர்
ஆந்தை அடி உறை எனினே மாண்ட நின்
இன்புறு பேடை அணியத்தன்
நண்புறு நன்கலம் நல்குவன் நினக்கே
(புறநானூறு : 67) |
|
(ஆடுகொள் வென்றி
= வெற்றியுள் மிக்க வெற்றி; அடு
= கொல்லுதல்; கோடு கூடு மதியம் = இரண்டு
பக்கமும் வந்து பொருந்திய சந்திரன்; மையல்
= மயக்கம் செய்யும்; கையறுபு இனைய = செயல்
சற்று வருந்த; அயிரை = ஒரு வகை மீன்;
மாந்தி = மேய்ந்து; பெயர்குவை
ஆயின் = போவாயானால்; கோழி = உறையூர்
என்ற நகரம்; அடிஉறை = அடிக்கீழ்; நல்குவன்
= தருவான்)
இனி, இந்தப் பாடலில் உள்ள செய்தியைப் பார்ப்போமா? இந்தப் பாடல்
பிசிராந்தையார் என்ற புலவர் பாடியது. அவர், வானத்தில் பறந்து
செல்லும் அன்னச் சேவலைப் (ஆண் அன்னத்தை) பார்த்து அன்னச்சேவலே!
அன்னச் சேவலே! என்று அழைக்கிறார். அப்பொழுது மாலைநேரம். எப்படிப்பட்ட
மாலை நேரம்? நிலவொளி வீசும். துணையைப் பிரிந்த வாழ்வோரை மயங்கச்
செய்யும் மாலை நேரம். அன்னச் சேவலானது தெற்குத் திசையில் உள்ள
குமரித் துறையில் உள்ள அயிரை என்ற மீன்களைத் தின்று விட்டுச்
செல்கின்றது. அப்போது பிசிர் ஆந்தையார் அந்த அன்னச் சேவலிடம்
தன் செய்தியைக் கூறுகின்றார்.
• தூதுவனாக அன்னச் சேவல்
அன்னச்
சேவலே! நீ வடதிசையில் உள்ள இமயமலைக்குப் போகின்றாயா?
அவ்வாறு போவாய் ஆயின் இமயமலைக்கும் குமரித் துறைக்கும்
இடையில் உறையூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் சோழ நாட்டில்
உள்ளது. நீ உறையூருக்குச் சென்றால் அங்கு உள்ள அரண்மனையின்
உயர்ந்த மாடத்தில் தங்க வேண்டும்; அங்கு வாயில் காவலர்கள்
இருப்பர். |
|
எனவே,
அவர்களுக்கு உணர்த்தாது நீ அரண்மனையின் உள்ளே செல்ல
வேண்டும்; அங்கு என் மன்னனாகிய கிள்ளி என்பவன் இருப்பான்.
அவன் கேட்கும்படி பெரிய பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையின்
அடியில் வாழ்வேன் என்று கூறவேண்டும். அவ்வாறு நீ கூறிய
உடன் அவன் மனம் நெகிழ்ந்து உன் பெட்டை அன்னம் அணிவதற்கு
நல்ல அணிகலன்களாய்த் தருவான் என்று பிசிர் ஆந்தையார்
கூறுகின்றார்.
|
• திருக்குறளில் தூது
திருவள்ளுவர்
திருக்குறளில் தூது என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.
அந்த அதிகாரத்தில் தூதுவரின் இலக்கணம், பண்புகள், தூது சொல்லும்
முறை என்பவற்றைப் பத்துக் குறள்களில் விளக்குகின்றார். சான்றாக
ஒரு குறளைக் காண்போம்.
தொகச்சொல்லித் தூவாத நீக்கி
நகச்சொல்லி
நன்றி பயப்ப தாம் தூது
(திருக்குறள் : 685) |
|
(தொகச் சொல்லி
= தொகுத்துச் சொல்லி; தூவாத = கொடிய சொற்கள்;
நக = மனம் மகிழும்படி; நன்றி
= நன்மை)
அதாவது,
தூதனின் பண்புகளை இக்குறள் கூறுகின்றது. தூது செல்பவர்கள்
தாம் சொல்ல வேண்டியவற்றைக் காரணவகையால் தொகுத்துக் கூறவேண்டும்.
கொடிய சொற்களை நீக்கிக் கூறவேண்டும். இனிய சொற்களால் கேட்பவர்
மனம் மகிழும்படி சொல்ல வேண்டும். இவ்வாறு கூறித் தூது அனுப்புவோருக்கு
நன்மை ஏற்படுத்துபவனே தூதன் என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
இவ்வாறு,
தூது பற்றிய செய்திகள் இலக்கண நூலிலும் இலக்கிய நூல்களிலும்
இடம்பெறக் காணலாம். இச்செய்திகளைக் கருக்களாகக் கொண்டே தூது
என்ற தனியான ஓர் சிற்றிலக்கிய வகை தோன்றியது எனலாம். |