4.2 ஆய்தம்

ஆய்த எழுத்தும் சார்பு எழுத்துகளில் ஒன்று. இதன் வரிவடிவம் முக்கோணத்தில் அமைந்த மூன்று புள்ளிகள் போன்று இருக்கும்.

ஆய்த எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும். ஆய்த எழுத்து, தனியாக வராது. சொல்லுக்கு நடுவில் மட்டும் வரும். ஆய்த எழுத்துக்கு முன்பு குறில் எழுத்தும், பின்னால் உகரத்துடன் சேர்ந்த வல்லின எழுத்தும் (கு, சு, டு, து, பு, று) வரும்.

அஃது
எஃகு

இது தனிமொழி ஆய்த எழுத்து ஆகும். இரண்டு சொற்கள் சேரும்போதும் ஆய்த எழுத்து உருவாகும். இதைப் பின்னர் காணலாம்.

குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்த வல் ஆறன் மிசைத்தே

(நன்னூல் 90)

பொருள்:

ஆய்த எழுத்து குறில் எழுத்திற்குப் பின்பும், குற்றியலுகர எழுத்திற்கு முன்பும் வரும்.