5.0 பாட முன்னுரை

தமிழ் மொழியில் எழுதும்போது சொற்களின் முதலில் இந்த எழுத்துகள் தான் வரும் என்ற வரையறை உண்டு. ஆங்கில மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும். ஆனால் தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. தனி மெய் எழுத்துகள் சொல்லின் முதல் எழுத்தாக வாரா. ழு, வு, லு முதலிய உயிர்மெய் எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வருவது இல்லை. அதேபோல, சொல்லுக்கு இறுதியிலும் எல்லா எழுத்துகளும் வருவதில்லை. சொல்லில் ஒரு மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வருவதற்கும் சில வரையறைகள் உள்ளன. தமிழ் மொழியில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் பற்றியும் சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள் பற்றியும் இந்தப் பாடத்தில் காணலாம்.