2.5 இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்பு

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

2.5.1 தொல்காப்பியர் கருத்து

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்து எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் முயற்சிகள் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகளை முதலில் காண்போம். இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் தோன்றுவதற்கு இரு முயற்சிகள் தேவைப்படுகின்றன. அவை,

தேவைப்படும் முயற்சி:

(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல்
(2)

மேல்வாய்ப் பல்லை, நாக்கினது அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சி ஆகியன.

 

ஒத்துழைக்கும் உறுப்புகள்:  மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன

இந்த எழுத்துகள் பிறப்பதற்கு ஒத்துழைக்கும் உறுப்புகள் மேல்வாய்ப் பல், நாக்கு என்பன. இதனைத் தொல்காப்பியம்,

இ, ஈ, எ, ஏ, ஐ யென இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓர் அன்ன
அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய

(எழுத்து. 86)

(அன்ன = போன்றவை; நா = நாக்கு; அண்பல் = மேல்வாய்ப்பல்; முதல்நா = நாவின் அடி)

என்று விளக்குகின்றது. இந்நூற்பா இந்த ஐந்து உயிர்எழுத்துகளும் ஒரே முயற்சியினால் பிறக்கின்றன என்று கூறுகின்றது. ‘ஐந்தும் அவற்று ஓர் அன்ன' என்னும் தொடர், அகரம் ஆகாரம் என்னும் எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் அங்காத்தல் முயற்சியே இந்த எழுத்துகள் பிறப்பதற்கும் தேவைப்படுகின்றது என்பதை உணர்த்துகிறது.

2.5.2 நன்னூலார் கருத்து

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பது குறித்து நன்னூல தெரிவிக்கும் கருத்துகளைக் காண்போம்.

இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய உயிர்எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சி பற்றியும், ஒத்துழைக்கும் உறுப்புகள் குறித்தும் நன்னூல் எடுத்துரைக்கின்றது. அவை,

தேவைப்படும் முயற்சி :

(1) வாயைத் திறத்தலாகிய அங்காத்தல். (2) மேல்வாய்ப் பல்லை நாக்கின் அடியின் ஓரமானது சென்று பொருந்துதல்.

ஒத்துழைக்கும் உறுப்புகள்: மேல்வாய்ப்பல், நாக்கு ஆகியன.

இதனை,

இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு
அண்பல் முதல்நா விளிம்புற வருமே

என்று நன்னூல் நூற்பா (76) விளக்குகின்றது.

(அங்காத்தல் = வாய் திறத்தல்; முதல் நா = அடி நாக்கு; விளிம்பு = ஓரம்)