3.2
தமிழக வரலாறு |
|
அன்பர்களே! நாம் தமிழக வரலாற்றை மூன்று பகுதிகளாகப்
பிரித்துக்
கொள்ளலாம்.
1. முற்காலம்
2. இடைக்காலம்
3. பிற்காலம்
என்ற மூன்று பகுதிகளாக இவ்வரலாற்றைக் காணலாம்.
3.2.1
வரலாற்றுக்கு முந்தைய காலம்
இந்தியத் துணைக்கண்டத்தைப் (Subcontinent) படத்தில்
காணுங்கள். என்ன தோன்றுகிறது உங்களுக்கு?
வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
(பாரதி - பாப்பாப்பாட்டு: 13) |
|
என்று பாரதியார் பாடியது நினைவிற்கு வருகிறதா இல்லையா?
ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியா இந்த
உருவத்தில் இல்லை. இமயமலையும் வடஇந்தியப் பகுதிகளும்
கடலுக்குள் இருந்தன. இன்று இந்துமாக்கடலாக உள்ள இடம்
பெரிய நிலப்பரப்பாக இருந்தது. அப்பெரும்பரப்பு குமரிக்கண்டம் அல்லது லெமூரியா (Lemuria) எனப்பட்டது. அங்கே
குமரிமலை என்று பெயர் பெற்ற நீண்ட மலைத்தொடர்
இருந்தது. பஃறுளியாறு எனப் பெயர் பெற்ற ஆறு இருந்தது.
அவையெல்லாம் ஒரு பெரிய கடல் வெள்ளத்தால் அழிந்தன.
தெற்கே இருந்த நிலப்பகுதி கடலில் மூழ்கியபின் வடக்கே
கடலுக்குள்ளிருந்து இமயமலையும் அதனைச் சார்ந்த
நிலப்பகுதிகளும் வெளியே
தோன்றின. இதுதான் பழைய இந்திய
வரலாறு.
3.2.2
சிந்துவெளி நாகரிகம்
மனிதன் முதன் முதலாகப் பரிணாம அடிப்படையில்
(Evolution) குமரிக்கண்டத்திலேயே தோன்றியதாக அறிஞர்
கருதுகின்றனர். குமரிக்கண்ட மனிதன் படிப்படியாக நாகரிக
வளர்ச்சி அடைந்த நிலையில் வடஇந்தியப் பகுதிகளில்
சென்று
குடியேறினான். அங்குச் சிந்துநதிக்கரையின் சமவெளிப்பகுதியில்
அவன் அழகிய குடியிருப்புகளையும், நகரங்களையும்
உருவாக்கினான். அந்த நகரங்களே இன்று
மண்ணிலிருந்து
தோண்டி எடுக்கப்பெற்றுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா என்னும்
நகரங்களாகும். இங்குத் தோன்றிய நாகரிகமே சிந்துவெளி
நாகரிகம் எனப்படும். இதனைத் தோற்றுவித்தவர்
தென்னாட்டிலிருந்து சென்று பரவிய
திராவிடரே ஆவர்.
ஹரப்பா
1920ஆம் ஆண்டு ஹரப்பா என்ற பழைய நகரம்
மண்ணுக்கடியில் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லறை
ஒன்றும், மட்பாண்டங்களும், விலங்குகளின் எலும்புகளும், சில
முத்திரைகளும் இங்குக் கிடைத்தன.
ஹரப்பா பஞ்சாப் பகுதியில் ராவி, சட்லெஜ்
ஆறுகளுக்கு
இடையில் லாகூர் - முல்ட்டான் தொடர்வண்டி
வழியில் உள்ளது.
எம். எஸ். வாட் (M.S. Watt) என்னும் அறிஞர் ஹரப்பாவின்
அகழ்வாய்வுகள் என்னும் நூலில்
ஹரப்பா பற்றிக் கூறும் செய்திகள்
வியப்பளிக்கின்றன. இந்த நகரத்தின் சுற்றளவு 4 கிலோ
மீட்டராகும். இங்கு ஆறு
பெரிய மண்மேடுகள் உள்ளன.
இவற்றில் பெரியது 29,000 செ. மீ. நீளமும், 23,000 செ. மீ. அகலமும், 1,800 செ. மீ. உயரமும் உடையது.
இந்த மண்மேடுகள்
எட்டு அடுக்குகளைக் காட்டுகின்றன.
எட்டுமுறை புதுப்பிக்கப்பட்ட
நகரம் என்பதை இந்த
அடுக்குகள் காட்டுகின்றன. கி.மு.
3,500க்கும் கி.மு.
2,750க்கும் இடைப்பட்ட காலத்தின் நாகரிகம்
என்று
இதனைக் கருதலாம்.
மொகஞ்சதாரோ
மொகஞ்சதாரோ நகரம் நிலத்தின் அடியில்
புதையுண்டிருப்பது 1922-இல் கண்டறியப்பட்டது. சிந்து
ஆற்றின் மேற்குப் பகுதியில்
உள்ளது. இந்நகரை
அகழ்ந்தபோது நாற்கோணமுள்ள ஒரு
முற்றம், முற்றத்தைச்
சூழ முப்பது சிற்றறைகள், சில நாணயங்கள்
ஆகியன
காணப்பெற்றன. அங்கே சில எழுத்து முத்திரைகளும்
கிடைத்தன. மொகஞ்சதாரோ ஏழு அடுக்குகளையுடைய
நிலப்பகுதியைக் காட்டிற்று. வரிசை வரிசையான வீடுகள்,
நீண்ட
தெருக்கள், பெருமாளிகைகள், நீராடும் குளம், மண்டபங்கள்,
கழிவுநீர்ப் பாதைகள், மட்பாண்டங்கள், பல நிறந் தீட்டப்பெற்ற
பானைகள், பொம்மைகள், அணிவகைகள் ஆகியன
கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காலம்
கி.மு. 3,250 முதல் கி.மு.
2,750ஆக இருக்க வேண்டும் என்பர்.
மொகஞ்சதாரோ ஓர் உயர்ந்த நாகரிகத்தைக்
காட்டுகின்றது.
காற்றோட்டமும் வெளிச்சமும் தடையின்றி அமையும் வகையில்
பெருந்தெருக்களும் குறுந்தெருக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
கழிவுநீர்க் கால்வாய் அப்பெருநகரில் அமைந்த முறைபற்றிக்
கூறப்படுவது
கவனிக்கத்தக்கது.
"மொகஞ்சதாரோவில் கால்வாய் இல்லாத நெடுந் தெருவோ குறுந்தெருவோ இல்லை. கால்வாய்கள்
அனைத்தும் ஒரே அளவில் வெட்டிச் சுட்டுத் தேய்த்து வழவழப்பாக்கிய செங்கற்களால்
அமைந்தவை. பொதுவாக எல்லாக் கால்வாய்களும் 50 செ.மீ. ஆழமும் 22 செ.மீ. அகலமும்
உடையனவாக இருக்கின்றன. இக்கால்வாய்களைப் போலவே இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய
கழிவுநீர்க் கால்வாய்களும் இத்தகைய சிறந்த முறையில் செய்யப்பட்ட
செங்கற்களைக் கொண்டே
கட்டப்பெற்றவை ஆகும். இவ்வீட்டு வடிகால்கள் தெருக்
கால்வாயுடன் சேரும் இடங்களில், சதுர வடிவில் செங்கற்கள்
கொண்டு
கட்டப்பெற்ற சிறு குழிகள் அமைந்துள்ளன. அக்குழிகள்
22 செ.மீ. சதுரமும் 45 செ.மீ. ஆழமும் உடையவை.
அக்குழிகளில் 90 செ.மீ. உயரமுடைய தாழிகள்
புதைக்கப் பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில் சிறிய துளைகள்
இருக்கின்றன.
வீட்டு வடிகால்கள் வழியே கழிவுநீருடன் குப்பை
கூளங்கள்
வந்த தாழிகளில் விழுதல் இயல்பு. தாழிகளின் அடியில்
உள்ள சிறிய துளைகள் வழியே கழிவுநீர் தொட்டியில்
நிரம்பித்
தெருக்கால்வாயில் கலக்கும். அந்நீருடன்
வந்த குப்பை கூளங்கள்
தாழியின் அடியிலேயே தங்கிவிடும். நகராண்மைக் கழகப்
பணியாட்கள் அக்குப்பை கூளங்களை அவ்வப்போது
தாழிகளிலிருந்து அப்புறப்படுத்தித் தூய்மை செய்வர். "ஆ!
இச்சிறந்த முறை வேறு எந்தப் பண்டை
நகரத்திலும் இருந்ததாக
யாம் கண்டதில்லை; கேட்டதுமில்லை" என்று சர் ஜான் மார்ஷல்
போன்றோர் கூறிப் பெருவியப்பு எய்தியுள்ளனர்"
என்று கூறுவதிலிருந்து மிகப்பெரிய ஒரு நாகரிகம்
மண்ணுக்கடியில் புதைந்து போனதை அறியலாம்.
புதையுண்ட நாகரிகத்தின் பெருமை
சிந்து வெளியில் வாழ்ந்தோர் பெரும்பாலோர் வணிகர்கள்.
மேற்காசிய நாடுகளோடும், காஷ்மீர், மைசூர், நீலகிரி, ராஜபுதனம்
போன்ற உள்நாட்டுப் பகுதிகளோடும் அவர்களுக்கு வாணிகத்
தொடர்பிருந்தது. தங்கம், செம்பு, தகரம், வெள்ளி, விலையுயர்ந்த
கற்கள் ஆகியவற்றை அவர்கள் இறக்குமதி செய்தனர்.
வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட எடைக்
கற்கள் தசாம்ச முறையில்
அமைந்துள்ளன. முகத்தல், நீட்டல் அளவைகளும்
அம்முறையிலேயே அமைந்துள்ளன.
இந்த முத்திரைகளில் யோக நிலையில் அமர்ந்திருக்கும்
சிவபெருமான் உருவம் குறிக்கத்தக்கது. திராவிட நாகரிகத்தின்
சமயப் பண்பாடு இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆற்றைத்
தலையிலிருந்து கீழே விடும் சிவனின் வடிவம் கவனிக்கத்தக்கது.
நீண்ட காலம் இத்தெய்வம் பற்றிய கருத்து திராவிடர்களிடையே
இருந்திருக்கின்றது. சங்க இலக்கியங்களில் ஒன்றான கலித்தொகையில் யோகநிலையில் அமர்ந்த கடவுள் உருவம்
பற்றிய வருணனை உள்ளது. இக்காலத்தில் அவ்வடிவைத்
தட்சிணாமூர்த்தி எனக் கூறுகின்றனர். கையில் தண்டமும் நீர்
கொண்ட கரகமும் இத்தெய்வம் கொண்டிருந்ததாகக்
கலித்தொகை
குறிக்கின்றது. திராவிடப் பண்பாட்டின் அடிப்படையான சமயச்
சிந்தனையை இவ்வுருவம் உணர்த்துகின்றது. இன்றும் சிவன்
கோயில்களின் முதல் திருச்சுற்றில் தெற்கு நோக்கி அமர்ந்த
வடிவில்
இருக்கும் இவ்வுருவம் காணத்தக்கது.
3.2.3
பண்டைக் காலம்
தமிழ்நாடு சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு
என்னும் மூன்று
பகுதிகளையுடையது. தொன்மையான குடிகளுக்கு எடுத்துக்காட்டாகச் சேர சோழ பாண்டியர் குடிகளைக்
குறிப்பது வழக்கம்.
வால்மீகி இராமாயணம் சேர சோழ பாண்டிய நாடுகளைக்
குறிப்பிடுகின்றது. கிரேக்கத் தூதர் மெகஸ்தனீஸ் தம் இண்டிகா
என்ற நூலில் சேர சோழ பாண்டியரைக் குறிக்கின்றார்.
அசோகனின் பிராமிக் கல்வெட்டில் சேரலபுத்திரர் எனச் சேரர்
குறிப்பிடப்படுகின்றனர்.
சேரநாடு
சேரநாடு மலை சார்ந்தது. சங்க
இலக்கியங்களில் "சாரல் நாடன்" என்ற வழக்கு
உள்ளது. சாரல்
நாடு என்பதே சேரநாடு என
மருவியிருக்க வேண்டும். சேரநாட்டில்
குட்டநாடு, குடநாடு, பூழிநாடு, குன்றநாடு, மலைநாடு, கொங்குநாடு, பொறைநாடு முதலிய உட்பகுதிகள்
இருந்தன. அயிரைமலை, நேரிமலை, செருப்புமலை, கேப்பாக்கோட்டை, உம்பற்காடு, நறவுத் துறைமுகம், முசிறித்
துறைமுகம், தொண்டித் துறைமுகம் ஆகிய குறிப்பிடத்தக்க
இடங்கள் சேரநாட்டிற்குரியவை. சேர
அரசர்களில் வஞ்சி
மாநகரையும் சிலர் மாந்தை நகரையும்
தலைநகராகக் கொண்டு
ஆட்சி செய்தனர்.
சோழநாடு
சோழநாடு தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரை
ஓரமாக உள்ளது. வங்கக் கடற்கரையில் இதன்
தலைநகராகிய பூம்புகார் இருந்தது. கடலைக்
கிழக்கு எல்லையாகவும் புதுக்கோட்டைக்கு
அருகில் ஓடும் வெள்ளாற்றைத் தெற்கு
எல்லையாகவும் கொண்டிருந்தது பழைய சோழநாடு. உறையூர், காவிரிப்பூம்பட்டினம்
ஆகிய
இருபெருநகரங்கள் அக்காலத்தில் சோழர்க்கு உரியனவாக
இருந்தன.
உறையூர் காவிரி ஆற்றின் தென்கரையில்
இன்றைய திருச்சி
நகரின் ஒருபகுதியாக உள்ளது. தாலமி
என்னும் யவன ஆசிரியர்
இவ்வூரை ஓர்தொவுர என்று
குறிக்கின்றார்.
காவிரி வடகரையில் அமைந்த
காவிரிப்பூம்பட்டினம்
பூம்புகார் என்னும் பெயருடையது. காவிரி புகும் பட்டினம்
என்பதே மருவிக்
காவிரிப்பூம்பட்டினம் என்றாயிற்று. இப்பட்டினம்
பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என்ற இரண்டு பகுதிகளைக்
கொண்டது. இவ்விரு பகுதிகளுக்கும் நடுவே பெரிய
கடைத்தெருக்கள் இருந்தன. பெரிப்புளூஸ் என்னும் பயணநூல்
இவ்வூரைக் கமரா எனக் குறிக்கின்றது. குடந்தை, கழார்,
கோயில்வெண்ணி, போர், குராப்பள்ளி, தலைச்செங்காடு, பிடவூர்,
வல்லம் ஆகிய ஊர்களும்
சோழநாட்டில் புகழ் பெற்றிருந்தன.
பாண்டிய நாடு
|
பாண்டிய நாடு சங்க காலத்தில் மூன்று பக்கமும்
கடலை எல்லையாகக் கொண்ட தென்தமிழ்நாடாக விளங்கிற்று. இம்மூன்று கடல்களையும்
அயல்நாட்டவரான யவனர் எரிதிரையக்கடல் எனக் குறித்தனர். இன்று
தீவாக இருக்கும் பாம்பன் பகுதி பாண்டிய நாட்டோடு
ஒருசேர இணைந்திருந்தது. பாண்டிய நாட்டின் மேற்குக்கரை
இன்றைய தென்திருவாங்கூர் வரை
பரவியிருந்தது.
பொதிகைமலையை ஆண்ட ஆய் என்னும்
வள்ளல்
பாண்டிய
அரசர்களைச் சார்ந்திருந்த ஒரு குறுநில மன்னர். பாண்டிய நாட்டின் வடக்கு எல்லை தென்வெள்ளாறு
ஆகும்.
திண்டுக்கல்
மலை, கோடைமலை, பன்றிமலை ஆகிய
மலைப்பகுதிகள் பாண்டிய நாட்டின் வடபகுதியில் இருந்தன.
பாண்டியரின் தலைநகர் மதுரை. தாலமி இதனை மதௌர என்று குறிக்கின்றார். மருதமரங்கள் மிகுதியாக இருந்தமையால்
இந்நகர் மருதையெனப் பெற்றுப் பின் மதுரை எனத்
திரிந்ததென்பர். வையையாற்றின் தென்கரையில் அமைந்தது
இவ்வூர். வையையாற்றில் அமைந்த திருமருதந்துறை அக்காலத்தில் புகழ்மிக்க நீராடுதுறையாக விளங்கிற்று.
பாண்டிய நாட்டின் புகழ்மிக்க துறைமுகம் கொற்கையாகும்.
இத்துறைமுகம் வளைகுடாப்
பகுதியில் அமைந்தது. விலையுயர்ந்த
முத்துக்கள் இப்பகுதியில் கிடைத்தன. இம்முத்துக்கள் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மற்றொரு துறைமுகமான
தொண்டி பாண்டிய நாட்டின் வடக்கு எல்லையில் இருந்தது.
3.2.4
இடைக்காலம்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு சங்க காலம்
மறைந்தது. களப்பிரர் என்னும் அயலவர் தமிழ்நாட்டைக்
கைப்பற்றி ஆட்சி செலுத்தினர். இவர்கள் காலத்தில் நீதி
நலிவுற்றது. இவர் காலத்தை
வரலாற்றில் இருண்ட காலமென்பர்.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் தமிழ்நாட்டின்
வடபகுதியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர். மகேந்திரவர்ம
பல்லவன் நரசிம்மவர்ம பல்லவன் காலத்தில்
"தொண்டை நாடு"
எனப்பெற்ற தமிழகப் பகுதி பல்லவ நாடாக விளங்கி அவர்களின்
ஆட்சி சேரநாட்டிலும்
பரவியது. பல்லவர் காலத்தின் மிகப்பெரிய
கலைச்சின்னம் மாமல்லபுரமாகும்.
|
இதோ கடற்கரையில்
இருக்கும்
மாமல்லபுரத்தைக் காணுங்கள்! கற்களை
அடுக்கிக் கட்டாமல் பாறைகளைக் குடைந்து
செதுக்கப்பட்ட
கோயில்களையும்
ரதங்களையும் இங்குக் காணலாம்.
|
பகீரதன் கங்கையாற்றை நிலவுலகத்திற்குக்
கொண்டு வந்ததைக் குறிக்கும் சிற்பம் மிகச்
சிறப்பாக இல்லையா? அதோ அந்தக்
கல்யானை எவ்வளவு அழகாக இருக்கிறது?
இதன் அழகை ரசித்தவர் அந்த இடத்தை
விட்டு
அகல்வார்களா?
|
|
பல்லவர்கோன் கண்ட மல்லை - கோலப்
பாரெங்கும் தேடினும் ஊரொன்றும் இல்லை |
|
என்ற பாட்டுக் கேட்கிறதல்லவா?
சங்ககாலச் சோழர் பூம்புகார், உறையூர் ஆகிய
தலைநகரங்களை யெல்லாம் விட்டுக் குறுநில மன்னராய்ப்
பழையாறை என்ற ஊரில் வாழ்ந்தனர். கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டில் இந்தச் சோழர் மீண்டும் தலையெடுத்தனர்.
விஜயாலய சோழன் என்பவன் தஞ்சாவூரைத் தலைநகராக்கிக்
கொண்டு சோழப் பேரரசை நிறுவினான். இந்தச்
சோழர்குடியில்
பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய இராசராசன் தமிழகத்தின்
பெரும்பகுதியைக்
கைப்பற்றினான்.
|
இதோ காணுங்கள்! தஞ்சாவூர் 216 அடி
உயரமுள்ள கோபுரத்தைக் கொண்ட தஞ்சைப்
பெருவுடையார் கோயிலை. இதனைக் கட்டிய
பெருவேந்தன் இராசராசனே சைவத்
திருமுறைகளைத் தொகுக்கக் காரணமாக
இருந்தவன். இவன் மகன் இராசேந்திரன் கங்கைக்கரை வரையில்
படையெடுத்து வெற்றி கொண்டான். ஈழநாட்டையும் தன்
ஆட்சிக்குள்
கொண்டு வந்தான். |
சோழர்களுக்குப் பின் தெற்கே பாண்டியர்
ஆட்சி ஓங்கியது. பாண்டியர்க்குப் பின் மதுரை நாயக்க அரசர்களால் ஆளப்பட்டது.
சமயங்களின் தோற்றம்
சங்க காலத்தில் வைதிகம், பௌத்தம், சமணம் ஆகிய
சமயங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து தமிழகத்திற்கு
வந்தன. அதற்குமுன் தமிழர் சமயநெறி ஒரு
பொதுமையைத்
தழுவியிருந்தது. இயற்கை நெறிப்பட்டதாக அவர்கள் வழிபாடு
இருந்தது. சங்க காலத்தின்பின் சமண
பௌத்த வைதிக நெறிகள்
தமிழ்நாட்டில் ஓங்கின. இடைக்காலத்தில் சைவமும் வைணவமும்
புதிய எழுச்சி பெற்றன. சமண பௌத்த சமயங்கள் மெல்லச்
செல்வாக்கு இழந்தன. சைவ சமயத்தைத் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர்
மக்களிடையே
பரப்பினர். வைணவ சமயத்தைப் பரப்புவதில் நம்மாழ்வார்,
பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார்,
திருப்பாணாழ்வார் போன்றோர்
பெருமுயற்சி மேற்கொண்டனர்.
வருணமும் சாதிகளும்
வைதிக சமயத்தின் தாக்கத்தால் சங்க காலத்திலேயே
வருணப் பாகுபாடு புகுந்துவிட்டது. மேலோர் கீழோர் என்ற
பாகுபாடு மெல்ல வளரத் தொடங்கிவிட்டது.
வேள்வி செய்தல்
(யாகம் செய்தல்) அரசர்களாலும் ஆதரிக்கப்பட்டது. நான்கு
வருணக் கோட்பாடு தமிழகத்திற்குள் செல்வாக்குப் பெறத்
தொடங்கியது.
திருவள்ளுவர் பிறப்பால் உருவாக்கப்படும் உயர்வு
தாழ்வுகளை மறுத்தார். சமண பௌத்த சமயங்கள்
வருணப் பாகுபாடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சாதி
வேறுபாடுகள் பெருகி வளர்ந்த காலத்தில் சைவ வைணவ
சமயங்களும் அவ்வேறுபாட்டை ஒத்துக்கொள்ளவில்லை.
நந்தனார்
என்ற தாழ்த்தப்பட்டவர் சைவ நாயன்மார் அறுபத்து மூவருள்
ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். திருப்பாணாழ்வார் என்ற
தாழ்த்தப்பட்டவர் ஆழ்வார்கள் பன்னிருவரில் ஒருவராக
ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவற்றையெல்லாம் மீறிச் சாதிகள்
வளர்ந்தன. சாதிகளின் வளர்ச்சியில் தீண்டாமை என்ற
கொடுமையும் தோன்றிவிட்டது
.
பக்தி இயக்கம்
நால்வர் |
இதோ இந்த நால்வர் உருவங்களைப்
பாருங்கள்! இதோ பன்னிரண்டு
ஆழ்வார்களைக் கவனியுங்கள்! இவர்கள்
தாம் இந்தியாவின் பக்தி இயக்கத்தின்
ஊற்றுக்கண்கள். ஊர் ஊராகச் சென்று
இசையோடு பாடிப் பக்தி இயக்கத்தை
வளர்த்தவர்கள் இவர்களே! ஒவ்வொரு
தலமும் புனிதமானதாகக் கருதப்பட்டு
இவர்களால் பாடப்பெற்றன.
|
தில்லை
|
இதோ சிதம்பரம் எனப்படும்
தில்லையம்பலத்தைக் காணுங்கள்!
ஆனந்தக் கூத்தனாக
நடராசன் ஆடும்
புகழ்மிக்க நடனம் மாபெரும் பிரபஞ்ச
உண்மையை உணர்த்துவதாக அறிஞர்
கூறுகின்றனர். திருநாவுக்கரசர்
இறைவனின் திருநடனத்தைப் பற்றிப்
பாடுவது கேளுங்கள்!
|
குனித்த புருவமும்
கொவ்வைச் செவ்வாயிற்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே! |
|
(தேவாரம், 4-ஆம் திருமுறை:81.3)
|
இதோ!
தமிழகத்தின் திருவரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் பள்ளி கொண்டுள்ள அரங்கநாதனை |
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா
அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர்உளானே!
(நாலாயிரத் திவ்விய பிரபந்தம், திருமாலை : 2) |
|
என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் பாடுவதைக்
கேட்கலாம்.
தமிழர் பண்பாட்டில் பக்தி இயக்கம்
பேரிடம் பெற்றுவிட்டது.
|