6.0 பாட முன்னுரை

Audio

தமிழ்நாட்டின் வரலாற்றில் சங்க காலம் எனப்பெற்ற காலம் பொற்காலம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். அக்காலத்தில் மொழி, பண்பாடு, கல்வி, மெய்யுணர்வு ஆகியன மிக உயர்ந்த நிலையில் இருந்தமையால் அக்காலத்தைப் பொற்காலம் என்றனர்.

அப்படியாயின் அன்றைய வாழ்வு எப்படி இருந்தது? அந்த உலகம் யாரால் இருந்தது. இதோ கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பாண்டிய அரசன் கூறுவதைக் கேளுங்கள்!

“தேவர்களுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும் அதனைத் தாம் மட்டும் தனியே உண்ணமாட்டார். யார்மீதும் வெறுப்புக் கொள்ள மாட்டார். பிறர்க்கு வரும் துன்பம் கண்டு அவர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி அத்துன்பத்தை நீக்கும் வரையில் கண் துயில மாட்டார். புகழ் தரக்கூடிய செயலென்றால் அதற்குத் தம் உயிரையும் கொடுப்பார். பழி வருவதாயின் அதன்பொருட்டு உலக முழுதும் பெறும் வாய்ப்பு வந்தாலும் அதனை ஏற்க மாட்டார். அவர்கள் தமக்கென்று முயற்சி செய்யும் தன்னலமற்றவர். பிறர்க்கென்றே முயற்சி மேற்கொள்வர். அத்தகையோர் இருப்பதால்தான் இந்த உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது."

இதுதான் இளம்பெருவழுதியின் உரை. இவ்வாறு வாழ்ந்த பலர் அக்காலத்தில் இருந்தனர். இப்படிப்பட்ட பண்பாடு உடையவரே நாட்டின் பெரிய செல்வம் ஆவர். இத்தகையோர் பேணிப் பாதுகாத்த தமிழ்ப் பண்பாடு பற்றிய கருத்துகள் இப்பாடப் பகுதியில் விளக்கப்படுகின்றன.