மேலே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களில் பண்பாடு அமைந்த பாங்கைக் கண்டோம். இப்பகுதியில் எஞ்சியுள்ள ஐந்து நூல்களில் பண்பாடு பற்றிய செய்திகளைக் காண்போம். 6.3.1 பதிற்றுப்பத்தில் பண்பாடு அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசன் தன் புரோகிதனைத் தவம் செய்து வருமாறு அறிவுறுத்தினான். அவ்வரசன் மன அமைதி, செல்வம், மகப்பேறு, கொடை, தெய்வ உயர்வு ஆகியன தவத்தால் அமையும் எனத் தெரிவித்துப் புரோகிதனைத் தவம் செய்யக் காட்டிற்கு அனுப்பினான். சேரநாட்டு அயிரைமலையில் கொற்றவை கோயில் இருந்தது. போரில் வெற்றி வேண்டி அரசர் அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டனர். பாலைக் கௌதமனார் என்ற அந்தணப் புலவர் வேண்டிக் கொண்டதற்கேற்பப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர அரசன் பத்துப் பெரு வேள்விகளைச் செய்வித்தான். இவை, பதிற்றுப்பத்திலிருந்து பெறும் பண்டைய தமிழர் பற்றிய செய்திகளாகும். 6.3.2 பரிபாடலில் பண்பாடு பரிபாடல் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். இவ்விரு தெய்வங்களுக்கும் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர்மலையில் கோயில் இருந்தது. இம்மலை அக்காலத்தில் திருமாலிருஞ் சோலைமலை எனப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இம்மலையில் திருமாலையும் பலதேவனையும் வழிபட்டனர். தலைவன் பரத்தையோடு சேர்ந்து வையையில் நீராடியதைப் பரிபாடல் காட்டுகின்றது. மக்கள் வையையாற்றுப் புதுவெள்ளத்தில் நீராடும்போது பொன்னால் செய்த நத்தை, நண்டு, இறால், வாளைமீன் ஆகியவற்றை நீரில் விட்டனர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். ‘நிலம் மழை பெற்றுக் குளிர்க’ என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தில் பல ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. நாள், மீன்கள், சூரியன் முதலான கோள்கள் எவ்வெவ்விடத்தில் இராசிச் சக்கரத்தில் நிற்கின்றன என்பது குறித்த ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது. இரதி, மன்மதன் குறித்த ஓவியம் ஒன்று இருந்தது. கௌதம முனிவன், இந்திரன், அகலிகை, இந்திரன் கொண்ட பூனை வடிவம் ஆகிய உருவங்கள் ஓவியமாக ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பாண்டிய நாட்டுப் பழக்க வழக்கங்களாகிய தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பரிபாடல் மூலம் வெளிப்படுகின்றன.
6.3.5 புறநானூற்றில் பண்பாடு புறநானூற்றை அக்காலப் பண்பாட்டுக் களஞ்சியம் என்று
கூறலாம். அரசர்களுக்கு அஞ்சி வாழாத கல்விச்செருக்கு
புலவர்களிடம் இருந்தது எனப் புறநானூறு கூறுகின்றது. தம்மை
மதிக்காமல் பரிசளிக்க வந்த வேந்தர்,
காலந்தாழ்த்திப் பரிசளித்த
கொடையாளி, அதுபோல்
தகுதியறியாது பரிசில் வழங்க முயன்ற
மன்னர் ஆகியோர்
கொடையை அக்காலப் புலவர்கள்
ஏற்கவில்லை.
“எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே"
(புற: 206-13)
சோழன் வடக்கிருந்தான். திருவரங்கம் என்ற ஊரில் காவிரிக்கரையில் சோழன் வடக்கிருந்தபோது தன் பக்கத்தே இருந்த சான்றோரிடம் ‘என் நண்பன் ஆந்தை என்னைத் தேடி வருவான். நான் உயிர்நீத்தபின் வந்தால், எனக்கு அருகே அவனுக்கும் உயிரடக்கம் கொள்ள இந்த இடத்தை நான் அளித்தேன் என்று கூறுங்கள்’ என்று கூறி உயிர் விட்டான். அவன் சொன்னபடியே ஆந்தையும் வந்தார். நிகழ்ந்தது அறிந்து அவ்விடத்தேயே இருந்து அவரும் உயிர் நீத்தார். பொன்னும் மணியும் முத்தும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மாலை சமைக்கும்போது பக்கத்தில் நெருங்கி வந்து விடுதல் போலச் சான்றோர்கள் சான்றோரையே சேர்வர் என்று புலவர் ஒருவர் இந்நிகழ்வு குறித்துப் போற்றினார். புலவர் ஒருவர் பரிசில் பெறுவதற்காகத் தன் தலையையே கொடுக்க முன் வந்தான் குமணன் என்னும் மன்னன். புலவர் ஒருவர் வறுமையைத் துடைக்க வசதியற்ற நிலையில் கொடையாளி ஒருவன் தன் வாளை அடகு வைத்தான்; மற்றொருவன் பகைவர்மீது போர் தொடுக்கவும் கருதினான். பூதப்பாண்டியன் என்ற அரசன் ‘பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக’ என்று சூள் உரைத்தான். பூதப்பாண்டியன் இறந்தபின் கைம்மை நோன்பு ஏற்க விரும்பாத அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள். சோழன் நலங்கிள்ளி ‘பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும்’ என்றான். சேர அரசன் ஒருவன், ‘என் மனைவி இறந்த பிறகும் நான் உயிர் வாழ்கிறேனே’ என்று மனம் நொந்தான். புறநானூறு தமிழர் வரலாற்றின் கருவூலம். அது தமிழர்களின் வீரப் பெருமையையும், மன்னர்களின் கொடைச் சிறப்பையும், புலவர்களின் பெருமிதத்தையும், நட்பின் சிறப்பினையும் வெளிப்படுத்துகிறது.
|