2.0 பாட முன்னுரை

கலை என்பது பண்பாட்டின் வளர்ச்சியில் தோன்றுவது. கலையின் அடிப்படை, அழகு உணர்வே. எனவே கலைகளை அழகுக்கலைகள் என்று கூறினர். மனிதன் காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவனிடம் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது. அதனால்தான் இலைதழைகளால் உடை உடுத்தக் கற்றுக் கொண்டான்; குகைகளில் ஓவியங்கள் வரையத் தொடங்கினான்; கற்களால் செய்யும் கருவிகளில்கூட அழகு உணர்வு புலப்படத் தொழில் திறம் காட்டினான். மண்ணால் செய்த பாண்டங்களிலும் அழகிய உருவம் படைக்கச் செய்தான். பண்டைக்காலத்திலிருந்தே கலைகள் படிப்படியாக வளர்ந்தன; கூடவே அவை மனிதனின் பண்பாட்டையும் வளர்த்தன.