1.3 சிறுபாணாற்றுப்படை - ஓர் அறிமுகம்  | |||
| 
       சிறுபாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவது நூலாக இடம் பெற்றுள்ளது. இஃது ஆசிரியப்பாவால் ஆனது. 269 அடிகளைக் கொண்டது. பழம் பெரும் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதி உள்ளார். பிற்காலத்தில் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனாரும் வேறு சிலரும் இந்நூலுக்கு உரை எழுதி உள்ளனர்.  | |||
குழல், யாழ் முதலான இனிமையான இசை தரும் கருவிகளை இசைப்பதில் (வாசிப்பதில்) திறம் பெற்றவர்களைப் பாணர் என்பர்.  | |||
மிடற்று வழியாக (குரல் வழியாக-வாய் வழியே) இன்னிசையை இசைப்பவர் (பாடுபவர்) இசைப்பாணர் ஆவர்.  | |||
யாழ் என்னும் இசைக்கருவியை இசைப்பதில் திறம் பெற்றவர்களை யாழ்ப்பாணர் என்பர்.  | |||
யாழ்ப்பாணர்களுள் பெரிய யாழை இசைப்பவர் பெரும்பாணர், சிறிய யாழை இசைப்பவர் சிறுபாணர்.  | |||
| 
       நல்லியக்கோடன் என்பவன் ஒரு சிற்றரசன். இவனைப் புகழ்ந்து பாடிய சிறுபாணன் ஒருவன் பரிசு பெற்று வருகிறான். இவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு சிறுபாணனை இம்மன்னனிடம் சென்று பரிசுபெறும் வகையில் நெறிப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.  | |||
| 
       ஒரு சிறுபாணன் வேறு ஒரு சிறுபாணனை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது.  | |||
சிறுபாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய புலவர் பற்றித் தெரிய வரும் செய்திகளும் பாடப்பட்டவர்கள் பற்றிய செய்திகளும் கீழே கூறப்பட்டுள்ளன.  | |||
  | |||
| 
       சிறுபாணாற்றுப்படையைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இப் பெயரில் மூன்று செய்திகள் அடங்கி உள்ளன. அவை:  | |||
1)  | நத்தத்தனார் | - |   இது புலவரின் இயற்பெயர். சிலர், தத்தனார் 
        என்பதே இயற்பெயர் என்பர். சான்றோர்களின் பெயர்களுக்கு முன்னால் 'ந' சேர்ப்பது 
        பழங்கால மரபு என்பதால் ந + தத்தனார் என்பது நத்தத்தனார் என்று இலக்கண முறைப்படி 
        வந்தது என்று கூறுவர்.   | 
2)  | நல்லூர் | - | இஃது அவர் பிறந்த ஊர். | 
3)  | இடைக்கழி நாடு | - |   நல்லூர் என்னும் ஊர் இருந்த 
        நாடு இஃது என்றும், சென்னைக்குத் தென் மேற்கில் மதுராந்தகத்துக்கு அருகில் 
        எடக்கு நாடு என்னும் பெயரில் இன்றும் உள்ளது என்றும் கூறுவர். 
      
  | 
| 
       சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் நல்லியக் கோடன். இவன் ஓய்மா நாட்டை ஆண்ட ஒரு சிற்றரசன். எனவே, இவன் ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்று சிறப்பித்துக் கூறப்பட்டான்.  | |||
ஓய்மா நாடு என்பது இப்பொழுதைய திண்டிவனத்தை ஒட்டி உள்ள பகுதி. இந்நாட்டின் தலைநகர் கிடங்கில் என்னும் ஊர்.  | |||