2.3 விறலியர் பற்றிய செய்திகள்

விறலியர் என்போர் பாணர்களின் கூட்டத்தில் இடம்பெறுபவர்கள். இவர்கள் அக உணர்வுகளைப் புறத்தே வெளிப்படுத்திக் காட்டுவதில் விறல்பட (திறம்பட) நடிக்கும் ஆற்றல் உடையவர்கள். இவர்களும் பாணர்களுடன் பாலை நில வழியாக வருகின்றனர். இவர்களின் மென்மைமிக்க இயல்பையும் அழகையும் சிறுபாணாற்றுப்படை 13-40 அடிகளில் கேசாதிபாதமாக (தலை முதல் கால்வரை) அழகிய முறையில் வருணிக்கிறது.

2.3.1 வருணனை

தமிழ்ப் புலவர்கள் மனிதர்களை, குறிப்பாகப் பெண்களை வருணிப்பதில் இருவகை நெறிகளைப் பின்பற்றினர். அவை (1) கேசாதிபாதம், (2) பாதாதிகேசம் ஆகும்.

கேசாதிபாதம்

கேசம்+ஆதி+பாதம்

கேசம்

=

முடி (தலை)

ஆதி

=

முதல்

பாதம்

=

அடி

இதில் ஒவ்வோர் உறுப்பாக எடுத்துக் கொண்டு, உவமை கூறி வருணிப்பர்.

முடி முதல் அடி வரை அதாவது தலை முதல் கால் வரை வருணிப்பது கேசாதிபாதம் ஆகும்.

பாதாதிகேசம்

கேசாதிபாத வருணனைக்கு நேர் மாறானது பாதாதிகேச வருணனை.

பாதம் + ஆதி + கேசம். அதாவது அடி முதல் முடிவரை வருணித்தல் (பிற்காலத்தில் பாதாதிகேச வருணனை முறை தெய்வங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்).

இந்நூலில் விறலியர் கேசாதிபாத வருணனை முறையில் வருணிக்கப்பட்டுள்ளனர்.

2.3.2 விறலியரின் கேசாதிபாத வருணனை

விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.

கூந்தல்

உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.

சாயல் (மென்மை)

மழை மேகத்தைக் கண்டு மயில்கள் தம் தோகையை விரித்து ஆடுவது இயற்கை. விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. ஆனாலும் அவற்றிற்கு வெட்கம் (நாணம்) வந்து விட்டது. ஏன் தெரியுமா? தமது தோகையின் சாயல் (மென்மை) விறலியரின் கூந்தல் சாயலுக்குச் சமமாகாது என்று மயில்கள் கருதியதால் ஆகும்.

நுதல்

நுதல் என்றால் நெற்றி. இது ஒளி மிக்கதாக உள்ளது. பெண்களின் நெற்றி ஒளி வீசக் கூடியது என்று கூறுவது வழக்கம்.

கண்

நீலமணி போன்ற கண்கள்.

பார்வை

மருட்சி உடைய இளமையான மானின் பார்வை போன்று உள்ளது.

எயிறு

எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது.

முலை

கோங்கு என்ற மலரின் அரும்பைப் போன்று அணிகலன்களுக்கு இடையே அடங்கிக் கிடக்கும் மார்பகம்.

தொடை

கரிய பெண் யானையின் தும்பிக்கையைப் போன்ற செறிந்த தொடை.

ஓதி (மயிர் முடிப்பு)

வாழைப் பூவின் தோற்றம் போன்ற அழகிய ஓதி.

அடி

ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது.

சுணங்கு (தேமல்)

வண்டுகள் மொய்த்து ஆரவாரம் செய்கின்ற வேங்கை மலர் போன்ற சுணங்கு.

2.3.3 விறலியரின் இயல்பு

இவ்வாறு, விறலியரின் கூந்தல், சாயல், நுதல், கண், பார்வை, எயிறு, முலை, தொடை, ஓதி, அடி, சுணங்கு ஆகியவை பல்வேறு உவமைகளால் விளக்கப்பட்டுள்ளன. இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர், முல்லை சான்ற கற்பும், மெல்லியல்பும், மான் நோக்கும், வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்

(அடிகள் 30, 31)

என்னும் அடிகள் சுட்டுகின்றன.

கல்லாத இளைஞர்

மென்மைத் தன்மை உடைய விறலியர், பாலை நிலத்தின் கடும் வெப்பம், நடந்து வந்த களைப்பு முதலியவற்றால் வருந்திய அடிகளை உடையவர்களாக இருந்தனர். அவர்களுடைய மென்மையான பாதங்களை, தம் தொழிலைத் தவிர வேறு கல்வி அறிவு இல்லாத இளைஞர்கள் மென்மையாக வருடி, வலியைப் போக்கினர். இதனை,

நடைமெலிந்து அசைஇய நல்மென் சீறடி

கல்லா இளையர் மெல்லத் தைவர

(அடிகள் 32 - 33)

(அசைஇய = வருந்திய ; தைவர = வருட)

என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

2.3.4 பாலைப் பண்

பண் என்றால் இசை என்றும் யாழ் என்றும் பொருள் உண்டு. பாலை நிலத்துக்கு உரிய பண் பாலைப்பண் ஆகும். இப்பண்ணைச் சிறுபாணன் இசைத்து வருகிறான்.

பொன் கம்பி போன்று முறுக்கு மிக்க நரம்பின் இனிய ஓசையை உடைய சிறிய யாழை இடப்பக்கத்தில் தழுவி (வைத்து) இருக்கிறான் பாணன். அதில் நட்டபாடை என்னும் பண்ணை (பாலைப்பண்) இனிமையாக அவன் இசைக்கிறான்.

இங்ஙனம் சிறிய யாழில் இனிய இசையை இசைத்துக் கொண்டு, வாரி வழங்கும் வள்ளல்கள் இல்லாததால் பரிசிலர் இயங்காத இவ்வுலகில் தருவாரை எதிர்பார்த்து வழிநடந்த களைப்பைப் போக்குவதற்காக மர நிழலில் சிறுபாணன் இளைப்பாறினான் (ஓய்வெடுத்தான்).