6.5 தமிழர் பண்பாடு

சங்க நூல்கள் அனைத்திலும் தமிழர் பண்பாடுகள் பரவிக் கிடக்கின்றன.

நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் அது நஞ்சு என்று தெரிந்தும் உண்பர். இதனை நயத்தக்க நாகரிகம் என்பார் திருவள்ளுவர். தமிழர்களின் இந்நனி நாகரிகத்தைச் சுட்டும் குறள் இது:

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

(குறள் - 580)

உலகம் முழுவதையும் தம் சொந்த ஊராகவும் அதில் வாழும் அனைவரையும் தம் உறவினர்களாகவும் தமிழர் உறவாடி மகிழ்ந்ததைக் கணியன்பூங்குன்றன் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எடுத்துக் கூறுகிறார்.

தனக்கென முயலாது பிறர்க்கென வாழும் பண்பாளரால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று கூறி கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் சங்கப் புலவன் சான்றாண்மைக்கு அடையாளம் காட்டுகிறான்.

இத்தகைய சிறந்த பண்பாடுகளுக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். அவர்களின் சிறந்த பண்பாடுகளுள் தலைசிறந்தது விருந்தோம்பல் என்னும் பண்பாகும்.

6.5.1 விருந்தோம்பல்

விருந்து என்றால் புதுமை என்று பொருள். அதாவது நம் வீட்டுக்கு வரும் புதியவர்களுக்கு உணவு படைத்தல் (அளித்தல்) விருந்தோம்பல் ஆகும்.

ஆனால், இன்றைய நிலையில் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவு படைப்பதே விருந்தோம்பல் என்ற நிலை உள்ளது. விருந்து படைக்கும் இப்பண்பு தமிழர்களுக்கே உரியது எனில் அது மிகையன்று. இச் சிறந்த பண்பு பற்றித் திருவள்ளுவர் விருந்தோம்பல் என்னும் ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.

சிறுபாணாற்றுப்படையில் விருந்து

கிடைப்பதற்கு அரிய அமிழ்தமே ஆனாலும் தமிழர்கள் தாம் மட்டுமே அதை உண்ணார். பலருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்பர். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் இத்திறம் தமிழர்களின் தலையாய அற உணர்வின் வெளிப்பாடாகும். இத்திறம் சிறுபாணாற்றுப்படையிலும் காணக் கிடக்கிறது.

"அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த (வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு உணவாகக் கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில் கோமானை (நல்லியக்கோடனை)ப் பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும் அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும் குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்" எனவும்

முல்லை நிலப்பகுதி வழியாக, பகல் பொழுதில் சென்று கொண்டே இருந்தால் மாலைப் பொழுதில் வேலூரைச் சென்று அடையலாம். அங்கு, உள்ளேயிருப்போரை வருத்தும் வெப்பம் மிகுந்த குடிலில் (குடில் - வீடு) முல்லை நில மக்களாகிய எயினர்கள் இருப்பர். அக்குலத்துப் பெண்கள் (எயிற்றியர்) தாங்கள் சமைத்த மான் இறைச்சி கலந்த புளியஞ்சோற்றை வழங்குவர்கள். எனவும்

உழவர்கள் வலிமையான எருதுகளை உடையவர்கள். உழத்தியர் தங்கள் இல்லத்தின் உள்ளே இருந்துகொண்டு தங்கள் மக்களால் அன்புடன் வரவேற்பர். மருத நில வாழ் மக்கள் விருந்து உபசரிப்பதில் தலைசிறந்தவர்கள். ஆதலால், உழத்தியர் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின் கறியுடன் சேர்த்து விருந்து அளிப்பர். இச் சோற்றை உண்டு மகிழலாம் எனவும், வரும் இவற்றின் மூலம், எளிய உணவாக இருந்தாலும்கூட விருந்தோம்புகின்ற பண்பில் இருந்து தமிழர் சிறிதும் விலகினார் இல்லை என்பது தெளிவாகிறது.

தமிழர் விருந்தோம்புகின்ற சீரிய திறத்தைச் சிறுபாணாற்றுப்படையில் பரதவர், எயினர், உழவர் ஆகியோர் பாணனுக்கு அளிக்கும் முறைமையில் பரக்கக் காண முடிகிறது.