இயற்கைப்
புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப்
பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள்
மரபு ஆகும். அவையாவன :-
- உள்ளப் புணர்ச்சி
- மெய்யுறு புணர்ச்சி
இக்கருத்தை,
உள்ளப் புணர்ச்சியும்
மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)
என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.
- உள்ளப் புணர்ச்சி
தலைமக்கள்
இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல் உள்ளப் புணர்ச்சி
எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.
பழி பாவங்களுக்கு
அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும்,
நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.
இருவர்க்கும்
உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால்
இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.
- மெய்யுறு புணர்ச்சி
உள்ளத்தால்
அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு
புணர்ச்சி எனப்படும். (மெய் - உடல்)
காலமும் - காரணமும்
மெய்யுறு
புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை
ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உஎ்ளுதல், மெலிதல், ஆக்கம்
செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல்,
மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள்
நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும் மெய்யுறு புணர்ச்சி
மேற்கொள்வர். |