3.7 துறவறம்

கற்பு வாழ்வின் முடிவாக - நிறைவாக - பயனாகத் தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் துறவறம் பற்றிய நூற்பா கீழ் வருமாறு:-

மக்களொடு மகிழ்ந்து, மனையறம் காத்து,
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனும், தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப (116)

இதன்படி,

  • மக்களைப் பெற்று மகிழ்தல்
  • இல்லறத்திலிருந்து ஏனைய அறம் புரிதல்
  • காம வேட்கையைத் தீர்த்துக் கொள்ளுதல்

இவையாவும் நிகழ்த்திய பிறகு தலைமக்கள் தம் ஊரை விட்டு நீங்கி, ஆனால் சுற்றத்தினரை விட்டு நீங்காமல் மேற்கொள்ளும் பற்றற்ற வாழ்வே துறவறம் ஆகும்.