2.2 வாகைப் படலம் - விளக்கம்

வாகைப் படலத்திற்குரிய விளக்கம் முதல் கொளுவில் தரப்பட்டுள்ளது.

இலைபுனை வாகை சூடி இகல்மலைந்(து)
அலைகடல் தானை அரசுஅட்டு ஆர்த்தன்று - (கொளு-1)

(இகல் = பகை, அட்டு = அழித்து)

‘கடல் போன்ற பெரிய படையையுடைய பகைஅரசனை அழித்துப் போரில் வெற்றி பெற்ற அரசன், இலைகள் சேர்த்துத் தொடுத்த வாகை மாலையைச் சூடி ஆரவாரித்தல்’ என்பது இதன் பொருள். பகையரசனைக் கொன்று வாகை சூடி ஆரவார்த்த வெற்றியை அறிவுடைய புலவர் பலரும் போற்றினார் என வெண்பா விளக்குகிறது. இதனை,

சூடினான் வாகைச் சுடர்த்தெரியல் - சூடுதலும்
பாடினார் வெல்புகழைப் பல்புலவர்...

என்கிறது வெண்பா.