6.0 பாட முன்னுரை

    தமிழ்மொழி, இலக்கணப் பாரம்பரியம் மிக்க ஒரு மொழியாகும். இம்மொழி காலந்தோறும் வளர்ந்து வருவதால் பழங்காலத்தில் எவ்வாறான     இலக்கணக்கூறுகளைக் (Grammatical category) கொண்டிருந்தது என்பது பற்றியும் தற்காலத்தில் எத்தனை வகையான இலக்கணக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பது பற்றியும் இப்பாடத்தில் காண இருக்கிறோம். நான்கு வகை இலக்கணக் கூறுகளைக் கொண்டிருந்த தமிழ்மொழி பின்னர் எட்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலக்கணக் கூறு, இலக்கணத் தொழிற்பாடு (Grammatical function) இவற்றிற்கான வேறுபாடுகளையும் பெயரடையின் வளர்ச்சி ஒரு வரலாற்று ரீதியானது என்பதையும் தெரிந்து கொள்ளவிருக்கிறோம். சங்க காலத்திலும் இடைக்காலத்திலும் பெயரடையாக வழங்கிய     வடிவங்கள், வினைமுற்றாகவும் பெயராகவும் வழங்கின. தற்காலத்தில் பெயரடை, வினையடை ஆகிய ஒவ்வொன்றும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை குறித்தும் பொதுவாகப் பெயரடை, வினையடை வளர்ந்த வரலாற்றைக் குறித்தும் இப்பாடத்தில் காணப்போகிறீர்கள்.