3.4 கஞ்சக்கருவி

    உலோகத்தால் செய்யப்பட்ட கருவிகளைக் கஞ்சக் கருவி என்பர். கைத்தாளம், பிரும்மதாளம், எலத்தாளம், குழித்தாளம், சல்லரி போன்ற கருவிகளைக் கஞ்சக்கருவி என்பர். இவை வெண்கலம் என்னும் உலோகத்தால் செய்யப்படுகின்றன.மங்கல இசைக்குழு, தேவார இசைக்குழு, ஆடலிசைக் குழுவில் இன்றும் இவற்றைப் பார்க்கலாம். அரிகதை செய்வோர், பசனைக்குழு போன்றோரிடமும் இத்தகு கருவிகளைக் காணலாம். ஓசை யமைதிக்கேற்பச் சிறிய, பெரிய, அகலமுள்ள தாளங்கள் அமையும். இரு கைகளிலும் ஏந்தித் தட்டும் பொழுது ஓசை அதிர்வு தடைபடாத வகையிலும் கையில் பிடித்துக் கொள்ளும் வகையிலும் கயிறு கட்டப்பட்டு இருக்கும்.

    மணிகளையும் தாளமாகக் கருதும் நிலை உள்ளது. கையினால் மணியை ஆட்டியும், குச்சியினால் அடித்து ஒலி எழுப்பும் நிலையிலும், கிராமப்புற மக்கள் காய்ந்த விதைகளை யுடைய காய்கள் மூலமும் தாள ஓசையை எழுப்புவர். ஆடலரங்கில் மலர் மொட்டுக்களைப் போன்றுசலங்கைகளைத் தொடுத்து தோல்வாரில் அமைத்து ஆடலில் பயன்படுத்துவர். இதனை வட இந்தியாவில் குங்க்ரு என்றும் தென்னகத்தில் கெச்சைஎன்றும் அழைப்பர். ஆலயங்களில், நாட்டுப்புற நடனங்களில் இச்சலங்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. சலங்கை என்றாலே நாட்டியத் தொழிலைக் குறிக்கும் அளவிற்கு முக்கிய நிலை பெற்றுள்ளது.நாட்டிய அரங்கேற்றம் செய்யும் பொழுது சலங்கை வழிபாடு செய்யும் மரபுள்ளது.

    பீங்கான் கிண்ணங்களில் நீரை நிரப்பி வெவ்வேறு சுரஒலிகளை ஒலிக்கச் செய்து இசை நிகழ்ச்சியைத் தருகின்றனர். இதனை லதரங்கம் என்பர்.நீரின் அலைகள் என்ற பொருளில் சலதரங்கம் என்ற தொடர் பயன் படுத்தப்படுகிறது. கிண்ணங்களை அரை வட்டத்தில் வரிசையாக வைத்து, இசைப்பவர் நடுவில் அமர்ந்து கொண்டு ஒரு மூங்கில் குச்சியால்
கிண்ணங்களின் ஓரங்களைத் தட்டி ஓசை எழுப்பி இசை நிகழ்ச்சியை நிகழ்த்தி வருகின்றனர்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
இசைக் கருவிகளின் வகையைக் குறிப்பிடுக.
2.
சலதரங்கம் - பொருள் கூறுக.
3.
கஞ்சக் கருவி என்றால் என்ன?