5.0 பாட முன்னுரை
முந்தைய பாடங்களில் இலக்கியமும் மொழியும் மற்றும்
இலக்கியமும் வாழ்க்கையும் என்ற தலைப்புக்களில் மொழியும்
வாழ்க்கையும் இலக்கியத்தில் ஒன்றிணைந்து பொதிந்து
கிடப்பதைப் பற்றிப் பார்த்தோம். இந்த இரண்டும் இலக்கியத்தின்
இருபக்கங்கள். இவ்வாறு இருக்க, இத்தகைய இலக்கியத்தின்
செயல்பாடு அல்லது நோக்கம் என்னவாகி இருக்கிறது என்று
பார்க்கத் திறனாய்வு கடமைப்பட்டுள்ளது. ஏனெனில், கலை
இலக்கியத்தின் தகுதி அல்லது விழுமியம் (Value), அதன்
மூலமாகி நம்மால் அறியப்படுகிறது. எனவே, கலை,
கலைக்காகவா அல்லது வாழ்க்கைக்காகவா என்ற கேள்வி
அல்லது வாதம் இங்கே வைக்கப்படுகிறது. வாதம் பழையதுதான்
என்றாலும், இதன் மூலம் திறனாய்வு ஒரு சரியான முனைப்பை
அல்லது கோணத்தைத் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது
என்பதால், இது மிகவும் அவசியமாகும்.
|