|
உரைகள் காலந்தோறும் தோன்றிக் கொண்டேயிருந்தன;
ஏனெனில் உரைகளுக்குத் தேவைகள் இருந்தன; கற்றறிந்த
அறிஞர்கள் உரையெழுத ஆர்வம் கொண்டிருந்தனர்; மேலும்
இலக்கியக் கல்வி தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. சங்க
இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் பல உரைகள்
இடைக்காலத்திலே தோன்றின எனக் கண்டோம். ஆனால்,
காப்பியங்களுக்கு அந்த
அளவிற்கு உரைகள் தோன்றவில்லை.
காப்பியங்களுள் சிலப்பதிகாரமே அந்தக் காலப் பகுதியில்
புகழும்
பெருமையும் பெற்றிருந்தது. கி.பி.12-ஆம் நூற்றாண்டில்தான்
கம்பராமாயணம் உருவாயிற்று. காப்பியங்களுக்குப் பெருமையும்
விசாலமான தளமும் இருந்தாலும், சங்க இலக்கியங்களுக்கும்
திருக்குறளுக்குமே பலகாலம் வரை, செல்வாக்கு இருந்தது போலும்!
எனவே
உரையாசிரியர்களையும் அவை வெகுவாகக் கவர்ந்தன.
இப்பாடத்தில் காப்பிய உரைகளையும், சமய இலக்கியங்களுக்கான
உரைகளையும் தற்கால உரையாசிரியர்களின் உரைகள் குறித்தும்
காணலாம்.
|