|  
          2.3 
              சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு  தமிழ்ச் 
              சிறுகதை வளர்ச்சியில் பெண் எழுத்தாளர்களின் பங்கு தொடக்கம் முதல் இருந்து 
              வந்துள்ளது.  2.3.1	
              தொடக்கக் காலம் (1975 வரை)   கு.ப.சேது 
              அம்மாள்  (கு.ப.ரா.வின் சகோதரி), கமலா விருத்தாசலம் (புதுமைப்பித்தனின் 
              மனைவி),  விசாலாட்சி அம்மாள், 
               வை.மு.கோதை நாயகி அம்மாள், சாவித்திரி அம்மாள், சரஸ்வதி 
              அம்மாள் போன்றவர்கள் பரவலாக இதழ்களில் 
              எழுதி வந்துள்ளனர். இவர்களில் சாவித்திரி அம்மாள், சரஸ்வதி அம்மாள் 
              போன்றவர்கள் பிற இந்தி மொழிச் சிறுகதைகளையும், ஆங்கிலச் சிறுகதைகளையும் 
              தமிழில் மொழிபெயர்த்துள்ளனர். குமுதினி, 
              குகப்பிரியை, வசுமதி ராமசாமி, எம்.எஸ்.கமலா போன்ற எழுத்தாளர்கள் 
              இக்காலக் கட்டத்தில் காந்தியம், தேசியம், விதவை மறுமணம், பாலிய மணக் 
              கொடுமைகள், தேவதாசிக் கொடுமைகள் இவற்றைக் கருப் பொருளாகக் கொண்டு சிறுகதைகள் 
              படைத்துள்ளனர்.  இதற்கு 
              அடுத்த காலக் கட்டத்தின் தொடக்கத்தில் அநுத்தமா, 
              ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், கே.ஜெயலெட்சுமி, வேங்கடரமணி, இந்திரா 
              தேவி, சரோஜா ராமமூர்த்தி போன்றோர் கதை எழுதியுள்ளனர்.
            கலைமகள் 
              இதழில் பரிசுக்குரிய சிறுகதைகளைப் பெரும்பாலும் பெண் எழுத்தாளர்களே 
              படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ராஜம் கிருஷ்ணனின் ஊசியும் 
              உணர்வும், நூறு ரூபாய் நோட்டு, ஸ்ரீமதி விந்தியா எழுதிய 
               அன்பு மனம், குழந்தை உள்ளம், 
              சூடாமணி எழுதிய காவேரி போன்ற 
              கதைகள் பரிசு பெற்ற சிறுகதைகளாகும். 1947இல்,  
              கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் அநுத்தமாவின் 
              முதல் கதையான அங்கயற்கண்ணி இரண்டாம் 
              பரிசினைப் பெற்றது. இக்காலக் கட்டப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் 
              குடும்ப உறவுகள் மற்றும் குடும்பச் சிக்கல்களை வைத்துக் கதைகள் எழுதினர், 
              ராஜம் கிருஷ்ணன், சூடாமணி இருவர் மட்டும் சமூக நோக்குடைய கதைகளை எழுதி 
              வந்துள்ளனர்.  1960களில் 
              தொடங்கிச் 
              சிவசங்கரி, வாஸந்தி, இந்துமதி, அனுராதா ரமணன் போன்றவர்கள் 
              சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளனர். இவர்களது சிறுகதைகளில் பெரும்பாலும் 
              காதல், காதல் மணம், தனிக்குடித்தனம், குழந்தையின்மை போன்றவை கருக்களாக 
              அமைந்திருந்தன. எழுபத்தைந்துக்குப் பின் சிவசங்கரி, வாஸந்தி எழுத்துகளில் 
              மாற்றங்கள் ஏற்பட்டன. சமூகப் பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண் உரிமை 
              இவற்றைக் கருவாகக் கொண்ட கதைகளை இவர்கள் எழுதத் தொடங்கினர்.  இதே 
              காலக் கட்டத்தில் தோற்றம் பெற்ற  ஜோதிர்லதா 
              கிரிஜா தொடக்கத்திலிருந்தே சமூக உணர்வோடு சிறுகதைகள் படைத்து 
              வருகிறார்.  2.3.2	
              தற்காலம் (1976 முதல் இன்று வரை)  இக்காலக் 
              கட்டத்தில் பெண்களின் எழுத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெண் கல்வி, 
              பொருளாதாரச் சுயசார்பு, வேலைவாய்ப்பு, வெளி உலகத் தொடர்பு இவை காரணமாகப் 
              பெண்களின் கதைக்களம் இல்லம் என்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து 
              விரிந்து பரந்ததாக அமைந்தது. கதை சொல்லும் உத்திமுறை, வடிவ நுணுக்கங்கள் 
              என்ற நிலையிலும் பெண் எழுத்துகள் இக்காலக் கட்டத்தில் சிறப்புப் பெற்றன. 
              உயர்கல்வி படித்து ஆய்வு செய்பவர்கள், பேராசிரியர்கள், ஆட்சிப் பணியில் 
              உயர் பதவி வகிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், 
              உலகப் பயணம் மேற்கொண்டவர்கள், சமூகச் சேவையாளர்கள், பத்திரிகைத் தொழிலில் 
              ஈடுபட்டவர்கள், பன்மொழிப் புலமை பெற்றவர்கள் என்று பலரும் கதைகள் படைத்து 
              வருகிறார்கள். இவர்கள், இன்றைய நடப்பியல் பிரச்சினைகளான பெண் கருவழிப்பு, 
              பெண் சிசுக்கொலை, இரட்டைச் சுமை, பாலியல் பலாத்காரம், நவீனத் 
              தொழில் நுட்பங்களால் ஏற்படும் பாதிப்பு, சுற்றுச் சூழலால் ஏற்படும் 
              பாதிப்பு, பெண் உடல் அல்லது மனம் சார்ந்த பிரச்சினைகள் எனச் சிறுகதைப் 
              பொருண்மைகள் விரிந்து பரந்துள்ளன. இக்காலக் கட்டத்தில்  
              அம்பை, காவேரி, திலகவதி, சிவகாமி, பாமா, அனுராதா, உஷா சுப்பிரமணியன், 
              தமயந்தி, உமாமகேஸ்வரி, தமிழ்செல்வி   போன்ற பெண் எழுத்தாளர்கள் 
              எழுதி வருகின்றனர். இவர்களில், அம்பை மொழி நடையிலும், சிறுகதையின் 
              உருவத்திலும், உள்ளடக்கத்திலும், பொருண்மையிலும் மாறுபட்டவற்றைக் கையாண்டு 
              சிறந்த சிறுகதைகளைப் படைத்து வருகிறார்.  
              அம்மா ஒரு கொலை செய்கிறாள், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, வாமனன், 
              கருப்புக் குதிரைச் சதுக்கம்  போன்ற கதைகள் அம்பையின் மிகச்சிறந்த 
              கதைகளாகும். காவேரி என்ற புனைபெயர் கொண்ட லட்சுமி கண்ணன் ஓசைகள், 
              வெண்மை போர்த்தியது போன்ற தொகுதிகளில் நவீனப் பெண்களின் 
              பிரச்சினைகளைக் கையாண்டுள்ளார். சிவகாமி, பாமா இருவரும் தலித் பெண்ணியக் 
              கதைகளைப் படைத்துள்ளனர்.     
              
                 
                  | தன் 
                      மதிப்பீடு : வினாக்கள் - I |   
                  | 1.
 
 |  
                      ரஷ்யாவில் ‘சிறுகதையின் தந்தை’ என்று போற்றப்படுபவர் யார்? 
                       |  |   
                  | 2. |  
                      விநோத ரச மஞ்சரியின் ஆசிரியர் யார்?  |  |   
                  | 3.
 
 |  
                      பாரதியார் எழுதிய சிறுகதைகள் இரண்டின் பெயர்களைக் குறிப்பிடுக. 
                       |  |   
                  | 4.
 
 |  
                      ‘குளத்தங்கரை அரசமரம்’ - இச்சிறுகதையை எழுதியவர் யார்?  |  |   
                  | 5.
 
 |  
                      தமிழில் சிறுகதை முன்னோடிகளாகக் குறிப்பிடப்படுபவர்கள் யாவர்? 
                       |  |   
                  | 6.
 
 |  
                      திராவிட இயக்க எழுத்தாளர்கள் பெயர்களைச் சுட்டுக.  |  |   
                  | 7.
 
 |  
                      நவீனச் சிறுகதை எழுத்தாளர்கள் இருவர் பெயரினைக் கூறுக.  |  |  |