4.1 தியாகபூமி தியாகபூமி என்ற புதினத்தை ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக எழுதியிருந்தார். கல்கியின் புதினப் படைப்புத் திறனை வெளிப்படுத்துவதற்காக இப்பாடத்தில் தியாகபூமி என்ற புதினத்தின் சிறப்புகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்து நெடுங்கரை என்னும் ஊரில் வாழ்பவர் தெய்வ பக்தி நிறைந்த சம்பு சாஸ்திரி; அவருடைய மனைவி பாக்கியம், அவள் பெற்ற பெண் குழந்தை சாவித்திரி. பாக்கியம் இறந்துவிடவே சாவித்திரியை வளர்ப்பதற்காகச் சம்பு சாஸ்திரி மங்களம் என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொண்டார். சாவித்திரியை மங்களமும், அவளது தாயார் சொர்ணம்மாளும் சேர்ந்து பல வகையில் கொடுமைப் படுத்தினர். சம்பு சாஸ்திரி, சாவித்திரிக்கு மணம் முடிக்க எண்ணி நரசிங்கபுரத்தில் வாழ்ந்த இராசாராமையர் - தங்கம்மாள் என்போரின் மகனான ஸ்ரீதரனை மணமகனாகத் தேர்ந்தெடுத்தார். ஸ்ரீதரனுக்கோ, சாவித்திரியின் பழமை பிடிக்கவில்லை. தன் தாயின் வற்புறுத்தலுக்காகத் திருமணத்திற்கு உடன்பட்டான். சம்பு சாஸ்திரியின் தங்கை மீனா காணாமல் போன செய்தி திருமணத்துக்கு முன்பு தங்கம்மாளுக்குத் தெரிகின்றது. இச்செய்தியை மறைத்ததற்காக ரூபாய் ஐயாயிரம் வரதட்சணையாகச் சாஸ்திரியிடம் கேட்க, அதற்கு அவர் உடன்பட்டதால் திருமணம் நடந்தது. சம்பு சாஸ்திரியின் தங்கை மீனாவிற்கும், இராமச்சந்திரன் என்பவனுக்கும் திருமணம் நடைபெற்ற பின் அவன் எங்கோ சென்று விட்டதால் மீனா, சம்பு சாஸ்திரி வீட்டிலேயே இருந்தாள். சில ஆண்டுகள் கழித்து, கும்பகோணம் மகாமகத்திற்குச் சென்றபோது, அங்குத் தன் கணவன் விடுதலைப் போரில் ஈடுபட்டு அரசாங்கத்திற்குத் தெரியாமல் மாறுவேடம் பூண்டு மறைந்து இருப்பதைக் கண்டாள். பின் இருவரும் பம்பாய்க்குச் சென்று தனியாகவே தொழில் ஆரம்பித்துப் பெருஞ்செல்வர்கள் ஆனார்கள். இந்நிலையில் காணாமற்போன தங்கையால் சாஸ்திரிக்குப் பழிச்சொல் வந்தது. மேலும் ஆற்று வெள்ளத்தால் துன்பப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சாஸ்திரி, அக்கிரகாரத்தில் உள்ள தனது மாட்டுக் கொட்டகையில் தங்க இடம் அளித்ததால் அந்தணர்கள் சாஸ்திரியை விலக்கி வைத்தனர். இதுவே மீனா காணாமல் போன கதை. இனி சாவித்திரி கதைக்கு வருவோம். கணவன் இல்லத்துக்குச் சென்ற சாவித்திரி பல கொடுமைகளுக்கு ஆளானாள். இந்நிலையில் கருவுற்றாள். இச்செய்தியை சாஸ்திரிக்கு எழுதினாள். ஆனால் சாஸ்திரியோ வறுமைக்கு ஆட்பட்டமையால், தன் இரண்டாம் மனைவி மங்களத்தைத் தாய்வீட்டிற்கு அனுப்பிவிட்டுப் பிழைப்பதற்காகச் சென்னை சென்றுவிட்டார். நெடுங்கரைக்கு வந்த சாவித்திரி தன் தந்தை சென்னை சென்றுவிட்டதை அறிந்து, அங்குச் சென்று பல இடங்களிலும் தேடினாள். இறுதியில் மகப்பேறு இல்லத்தில் சேர்க்கப்பட்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். வாழ்க்கையில் பல இன்னல்களுக்கு ஆளான சாவித்திரி, எங்கேயாவது வேலை கிடைக்குமா என்று தேடி அலைந்தாள். கடைசியில் கடல் நீரில் மூழ்கிச் செத்துப் போவது என்று குழந்தையுடன் தண்ணீரில் இறங்கினாள். அப்போது தந்தையின் பாடலைக் கேட்டாள். குரல் வந்த திசையை நோக்கி ஓடினாள். தோப்புக்கு நடுவே ஒரு சிறு குளமும், குளத்தின் கரையில் ஒரு பழைய மேடையும் காணப்பட்டன. மேடையில் அப்பா படுத்திருந்தார். சிறிது நேரம் கழித்து மெதுவாக மேடைக்கு அருகில் சென்றாள். அப்பா அசந்து தூங்குவதைப் பார்த்தாள். அவள் தன் குழந்தையை சாஸ்திரி அருகே விட்டு விட்டு, முன்பு கேள்விப்பட்ட பம்பாயில் வாழும் ஒரு குடும்பத்தாருக்குப் பணியாளாகச் சென்றாள். குழந்தையை சாஸ்திரி சாவடிக் குப்பத்திற்கு எடுத்துச் சென்றார். அக்குப்பத்தைச் சீர்திருத்த எண்ணினார். அக்குப்பத்திலுள்ள ஒரு பள்ளியில் குழந்தையைச் சேர்த்தார். அவள் சாருமதி என்ற பெயருடன் அனைத்திலும் தேர்ச்சி பெற்று விளங்கினாள். பம்பாய்க்குச் சென்ற சாவித்திரி தன் அத்தை மீனாவின் குடும்பத்திற்கே பணியாளாய்ச் சென்றாள். பின் மீனாவும், அவளது கணவனும் இறந்துபடவே, மிகுந்த செல்வத்துடனும் உமாராணி என்ற மாற்றுப் பெயருடனும் சென்னைக்கு வந்தாள். உமாராணியைப் பார்க்கச் சாருமதியும், தோழிகளும் வந்தனர். பள்ளிக்கூடக் கட்டிட நிதிக்காக நாடகம் நடத்தப் போவதாகவும், அதற்குரிய நுழைவுச் சீட்டை வாங்க வேண்டும் என்றும் அக்குழந்தைகள் வேண்டினர். உமாராணி எல்லா நுழைவுச் சீட்டுகளையும் தானே வாங்கிக் கொண்டாள். அந்தக் குழந்தைகள் சென்ற பிறகு உமாராணி, சாருமதி நினைவாகவே இருந்தாள். எனவே தன்னுடன் பணியாற்றிய வழக்கறிஞர் ஆபத்சகாயமய்யர் உதவியால் சாவடிக் குப்பம் சென்றாள். அங்குத் தன் தந்தை சாஸ்திரியைக் கண்டாள். அங்கு அவள் தன்னை வெளிக்காட்டாமல் பேசினாள். சாஸ்திரியிடம் தான் குழந்தை சாருவை எடுத்து வளர்ப்பதாகக் கூறினாள். இதற்கு சாஸ்திரியும் உடன்பட்டார். ஆனால் உமாராணிக்குத் தெரியாமல் சாவடிக் குப்பத்திலிருந்து கிளம்பி, சாருவுடன், சாஸ்திரி ஊர் ஊராகச் சென்று நாட்டு விடுதலைக்காகப் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். தன் மனைவி மங்களத்தின் உடல் நலக் குறைவு அறிந்து நெடுங்கரைக்குச் சென்றார். மங்களம் சாஸ்திரியின் மடியிலே இறந்தாள். சாருவைக் காணாத உமாராணி காவல் நிலையத்திற்குச் சென்று முறையீடு செய்யும் போது காவலர்கள் ஸ்ரீதரனை அழைத்து வருவதைக் கண்டாள். அவன் விடுதலை பெற இவள் உதவினாள். ஸ்ரீதரன், உமாராணி தன் மனைவி என அறிந்து உரிமை கோரி வழக்குத் தொடுத்தான். உமாராணிக்காக ஆபத்சகாயமய்யரும், ஸ்ரீதரனுக்காக நாணாவும் வழக்காடினார்கள். அப்போது தான் உமாராணி தன் மகள் சாவித்திரி என்பதையும், சாருமதி தன் பேத்தி என்பதையும் சாஸ்திரி அறிந்தார். உமாராணி தான் தன் தாய் என்பதை அறிந்து சாரு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தாள். மறுபடியும் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாவித்திரி தன் குழந்தையைக் கொன்று விட்டதாகக் கூறினாள். இதனால் காவல் துறையினர் அவளைக் கைது செய்ய முயன்றனர். உடனே சாரு நீதிபதியைப் பார்த்து உண்மையைக் கூறினாள். வழக்கு முடிந்தவுடன் சாஸ்திரி தன் மகள் சாவித்திரியை ஸ்ரீதரனுடன் சேர்ந்து வாழுமாறு அறிவுரை கூறினார். ஆனால் சாவித்திரியோ அதற்கு உடன்படவில்லை. இந்தப் பெருஞ்செல்வத்துக்குக் காரணம் அத்தை மீனாவே என்று விரித்துரைத்தாள். சாஸ்திரி தன் தங்கையைப் பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார். கணவனுடன் இணைந்து வாழ விரும்பாத சாவித்திரி நாட்டுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒரு நாள் நாட்டிற்காகப் பணியாற்றிய பெண் தொண்டர்கள் பலரைக் காவற்படையினர் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். அதே வண்டியில் ஸ்ரீதரனும் சமூகக் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட ஏற்றப்பட்டான். ஸ்ரீதரனும் போலீஸ் வண்டிக்குள் தேச சேவகிகளின் மத்தியில் சாவித்திரியைக் கண்டு அளவில்லாத வியப்படைந்தான். இத்தனை நாளும் பிரிந்தவர்கள் அந்த நிமிடத்திலேதான் ஒன்று கூடினார்கள். இறுதியில், சம்பு சாஸ்திரி தன் பேத்தி சாருமதியுடன் சாவடிக் குப்பத்திற்கு மீண்டும் வந்தார். குப்பத்தில் இறைவழிபாடு நடந்து கொண்டிருந்தது. பின் வைஷ்ணவ ஜனதோ என்ற பாடலை மக்கள் மகிழ்ச்சியுடன் பாடிக் கொண்டிருந்ததைக் கண்டு மெய்மறந்து நின்றனர் சம்பு சாஸ்திரியும், சாருமதியும். சிறைசென்ற சாவித்திரியும், ஸ்ரீதரனும் விடுதலையானபின் நாட்டு விடுதலைக்காக இணைந்து போராடினர். இவ்வாறு கதை முடிவடைகிறது. |