2.2 அண்ணாவின் படைப்புகளும் நோக்கங்களும்

இப்பகுதியில் அண்ணாவின் படைப்புகளின் பரப்புகளையும் அவை எழுந்ததன் நோக்கங்களையும் காணலாம். எந்தவொரு படைப்பும் அது தோன்றுவதற்கான நோக்கத்தை ஒட்டியே அமைகின்றது. அந்த வகையில் 1934 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசியலில் ஈடுபட்டு வந்த அண்ணா தமிழக மக்களுக்குத் தமிழ்மொழி உணர்வு, இனஉணர்வு என இவ்விரண்டையும் உண்டாக்குவதற்குத் தம் எழுத்தையும் பேச்சையும் இரு கருவிகளாகப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிகின்றது. 

அண்ணாவின் படைப்புகள் பல்வகைப் பட்டவை. அவரது படைப்புகள் நாடகம், புதினம், சிறுகதை, சொற்பொழிவு, மடல்கள், கட்டுரைகள், அந்திக் கலம்பகம், ஊரார் உரையாடல்கள் எனப் பலவகை இலக்கிய வடிவங்களில் விரிந்து செல்கின்றன.

அண்ணாவின் படைப்புகள் பல வகைகளில் அமைந்தாலும், ஒவ்வொரு வடிவத்தையும் அவர் உணர்த்த விரும்பும் கருத்திற்கு ஏற்ற வகையில் களமாக அமைத்துக் கொண்டார் என்பதை உணரலாம். 

அண்ணா திராவிட இயக்கத்தோடு தம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். திராவிட இயக்கக் கருத்துகளைப் பரப்புவதற்கான கருவிகளாகவே அண்ணாவின் படைப்புகள் தோன்றின. அறியாமையிலும் ஆங்கில ஆட்சியிலும் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழக மக்களைத் தட்டி எழுப்பும் வகையில் அண்ணாவின் படைப்புகள் அமைந்தன. தமிழ் மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று, பகுத்தறிவு, விடுதலை வேட்கை முதலியவற்றைத் தமிழ் மக்களிடையே தோற்றுவிக்கவும் வளர்த்திடவும் அண்ணாவின் இலக்கியங்கள் தோன்றின எனக் கூறலாம்.

தமிழர் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்க வேண்டும்’ என்பது அண்ணாவின் படைப்புகள் அனைத்திலும் நிறைந்திருக்கும் கருத்து ஆகும். ‘இழந்த பழம்புகழ் மீள வேண்டும்; நாட்டில் எல்லோரும்

பாவேந்தர் பாரதிதாசன்

தமிழர்களாய் வாழ வேண்டும்’ என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வரிகள் அண்ணாவின் படைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன என்று கொள்ளலாம். மாணவர்களே! அண்ணாவின் எந்த இலக்கியத்தைப் படித்தாலும் இக்கருத்தையே கண்டறிய முடியும்.