கவிதையில் தனிப்பாடல்கள் அமையலாம்; பதிகங்கள் பாடலாம்; காப்பியங்களும் எழுதலாம். அதைப் போலவே உரைநடையிலும் சிறுகதை, நாவல் எனவரும் இலக்கிய வடிவங்கள் அமைகின்றன. இந்த வடிவங்களில் காணப்படும் இலக்கிய உத்திகள் இவற்றிற்குச் சிறப்புச் சேர்க்கின்றன. உவமை, எதுகை, மோனை, சொல்லாட்சி ஆகிய நான்கு வகை இலக்கிய உத்திகள் மு.வ. வின் உரைநடையில் காணப்படுகின்றன. இலக்கிய உத்திகளுள் உவமைக்கு முதலிடம் உண்டு. உவமை ஆசிரியர் கூற விரும்பும் கருத்தினைத் தெளிவாக உரைத்திட உதவுகின்றது. இத்தகைய உவமைகள் மு.வ. வின் உரைநடைகளில் பரவலாகக் காணப்படுகின்றன. அவற்றிற்கு ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுகளைக் காண்போம். ‘கல்வியால் அறிவு வளருமே அன்றி, ஒழுக்கம் வளராது’ என்னும் கருத்தை மு.வ. நெஞ்சில் ஒரு முள் (பக்க-95) என்னும் நாவலில் உணர்த்துகிறார். அப்போது, “படிப்பால் அறிவு வளருமே தவிர, ஒழுக்கம் வந்துவிடாது. விளக்கு ஏற்றினால் வீட்டில் ஒளி பரவுமே தவிர தூய்மை வந்துவிடாது” என்று குறிப்பிடுதல் உவமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. நெடுந்தொகை விருந்து என்னும் இலக்கிய ஆய்வு நூலில் (நெடுந்தொகை என்பது அகநானூறுக்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் என்பதை இங்கு நினைவில் கொள்ளுதல் வேண்டும்) அந்நூல் பலராலும் விரும்பப்படுவதால் அதற்குப் பல பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதற்கு மு.வ. தக்கதோர் உவமையைப் பயன்படுத்தியுள்ளார். “புலவர் பெருமக்கள் இந்நூலின் அருமையை நன்கு உணர்ந்து போற்றியிருக்கிறார்கள். அதனாலேயே செல்வக் குழந்தைக்குப் பல பெயர்கள் வழங்குதல் போல் நெடுந்தொகை, அகநானூறு, அகப்பாட்டு, அகம் என்று பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன”. இன்றைய மக்களின் வாழ்க்கையில் பொய்மையும் போலித்தன்மையும் காணப்படுவதை மு.வ. உவமை ஒன்றால் விளங்க வைக்கின்றார். “இக்காலத்துப் பலருடைய வாழ்க்கை பொன் முலாம் பூசிய பொருள் போல் தொடக்கத்தில் மட்டுமே நல்ல ஒளி வீசுகின்றது. பழமைப் பட்டுத் தேயத் தேய ஒளி இழந்து மங்குகின்றது” (தங்கைக்குக் கடிதங்கள், பக்கம்-8)
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒத்துநின்று அமைவதை எதுகை என்று வழங்குகிறோம். இந்த எதுகை நயம் உரைநடையில் அமைகின்ற போதும், அது உரைநடைக்கு இனிமை தருகின்றது. மு.வ. பயன்படுத்தியிருக்கும் எதுகைகளுக்குச் சில எடுத்துக் காட்டுகளைக் காணலாம். “அழுக்கும் தூசியும் இருப்பது விளக்கு ஏற்றினால்தான் கண்ணுக்குத் தெரியும். விளக்குமாறு எடுத்துப் பெருக்கினால் தான் அவை போகும்” (நெஞ்சில் ஒரு முள், பக்கம்-95) அடுத்ததாக மு.வ. வின் தம்பிக்குக் கடிதங்கள் என்னும் நூலில் இருந்து, “திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும்” எனவரும் எதுகையைக் காணலாம். இதே நூலில் ‘உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும்’ எனவரும் எதுகையையும் காணலாம்.
செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் ஒவ்வொரு முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். இதனை உரைநடையிலும் பயன்படுத்துமிடத்து உரைநடையில் சுவை கூடுகின்றதைக் காணலாம். மு.வ.வின் உரைநடையில் காணப்படும் மோனை நயத்திற்குக் ‘குறட்டை ஒலி’ என்னும் சிறுகதையில் இருந்து ஓர் எடுத்துக்காட்டுக் கீழே தரப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்னும் நூலில் இருந்து, பின்வரும் பகுதியைப் பார்க்கலாம்.
ஒரு சொல்லையோ அல்லது தொடரையோ மீண்டும் மீண்டும் பயன்படுத்தி ஆசிரியர் உணர்த்த விரும்பும் கருத்தை வலியுறுத்துவதில் இருந்து அவரது சொல்லாட்சி புலப்படும். ‘நாட்டுப்பற்று’ என்னும் மு.வ.வின் கட்டுரைத் தொகுப்பில் இருந்து அவரது சொல்லாட்சிக்கு ஓர் எடுத்துக்காட்டைக் காணலாம். ‘வாழ்க்கை நடத்துவதற்குப் பொருள்கள் பல வேண்டும். அரிசி, காய், கனி முதலியவை வேண்டும். உடை, வீடு முதலியவை வேண்டும். காசும் காகித நோட்டும் வேண்டும், இன்னும் பல வேண்டும். இவற்றை ஆளும் அறிவும் வேண்டும்”. மேலே காணும் பத்தியில் ‘வேண்டும்’ என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து அந்தப் பத்தியில் மு.வ. கூற விரும்பிய கருத்தை வலியுறுத்திக் கூறுவதற்கும், அதில் விறுவிறுப்புத் தோன்றுவதற்கும் வாய்ப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். |