நாடகம், கூத்து ஆகிய இரு சொற்களும்
ஒன்றுக்கொன்று தொடர்புடைய சொற்களாகும். ஆனால்,
இரண்டும் ஒன்றல்ல. நாடகத்துக்கும் கூத்துக்கும் இடையே
சிறிதளவு வேறுபாடு உண்டு. சதிராட்டம் அல்லது நாட்டியம்,
நாடகம் ஆகிய இரண்டும் இணைந்தது கூத்து.
சதிராட்டத்தில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டது நாடகம்.
ஒரு தனிப் பாட்டுக்கோ, ஒரு சிறு நிகழ்ச்சிக்கோ அபிநயம்
பிடிப்பது நாட்டியம்; ஒரு கதையை மையப்படுத்தி
வேடமிட்டு ஆடுவது நாடகம். இந்த இரண்டையும் கூத்து
என்னும் பொதுப் பெயரால் பண்டைத் தமிழர் வழங்கி
வந்தனர். கூத்து என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில்
பல இடங்களில் காணப்படுகின்றன.
|