ஒரு நாடகத்துக்குக் கூடுதலான கலையைச்
 சேர்ப்பவை
 முரண்கள்  ஆகும்.  நாடகத்தில்  ஒரு  காட்சியை
 அழகுபடுத்துவதற்காகச் சில இயற்கைப் பின்னணியை
 முரணாக
 அமைப்பர். சில நேரங்களில் பாத்திரப்
 படைப்புகளையே முரணாக
 அமைப்பர்.  
   மனோன்மணீயத்தில் சீவகன், குடிலன் பேச்சுக்கு
 மகுடியின்
 இசைக்கு மயங்கும் பாம்பைப் போல் கட்டுப்
 படுகிறான். ஆயினும்
 இருவரும் முரண்பட்ட பாத்திரப்
 படைப்புகளே. 
   நடிக்கவே தெரியாதவன் சீவகவழுதி; நடிப்புக்
 கலையில்
 வல்லவன் குடிலன். உள் ஒன்று வைத்துப் புறம்
 ஒன்று பேசத்
 தெரியாதவன் சீவகவழுதி. உள்ளத்தில்
 தனக்குச் சாதகமான
 திட்டத்தைத்  தீட்டிக் கொண்டே வெளியே மன்னனுக்கு
 ஏற்றாற்போல் பேசுபவன் குடிலன்.
 ஒவ்வொன்றையும் நேர்நிலையில்
 (Positive) பார்ப்பவன்
 சீவகன். ஒவ்வொன்றையும் எதிர்நிலை
 (Negative) யில்
 பார்ப்பவன் குடிலன்.  
   இதோ! சீவகனையும் குடிலனையும் நாராயணன்
 எவ்வாறு
 மதிப்பிடுகிறான் பாருங்கள். சீவகனைப் பற்றிக்
 கூறும்போது, 
 ............................................. சீவகா ! சீவகா ! 
முற்றுநான் அறிவன் நின்குற்றமும் குணமும் 
குற்றம் மற்று என்உள கூறற்கு உன்வயின் ! 
வித்தையும் உன்பெரும் சத்திய விருப்பும் 
உத்தம ஒழுக்கமும் எத்துணைத்து ஐயோ ! 
வறிது ஆக்கினையே வாளா அனைத்தும் 
அறியாது ஒருவனை அமைச்சாய் நம்பி 
 
 
 (வறிது = பயன்இன்மை; வாளா = அலட்சியம்) 
 என்று சீவகனின்குணநலன்களையும்
 வெண்மையான
 உள்ளத்தையும் படம் பிடித்துக்
 காட்டுகிறான் நாராயணன்.  
   சீவகனே ! சீவகனே ! உன்னிடம் இருக்கும்
 குற்றம் குணம்
 ஆகிய இரண்டு பண்புகளையும் முற்றும்
 நான் அறிவேன். உன்னிடம்
 குற்றம் என்று கூறுவதற்கு
 என்ன இருக்கிறது ! சத்தியத்தையே
 விரும்புபவன் நீ; உயர்ந்த ஒழுக்கம் உன்னிடம் எவ்வளவு
 இருக்கிறது !
 ஐயோ ! இவை அனைத்தையும் பயன் இல்லாமல்
 ஆக்கிவிட்டாயே ! அலட்சியமாய் (நோக்கம் இல்லாமல்)
 இருந்து
 விட்டாயே ! நல்லது எதையுமே தெரியாத
 ஒருவனை அமைச்சனாய்
 நம்பி விட்டாயே ! என்று
 கூறிப் புலம்புகிறான். 
   குடிலனைப் பற்றிக் கூறும்போது இதற்கு எதிராக
 மதிப்பீடு
 செய்கிறான். 
 ............................ குடிலனோ 
சூதே உருவாய்த் தோன்றினன் அவன்தான் 
ஓதுவ, உன்னுவ, செய்குவ யாவும் 
தன்னயம் கருதி அன்றி மன்னனைச் 
சற்றும் எண்ணான் மற்றும் சாலமா 
நல்லவன் போலவே நடிப்பான்  
 (சூது = சூட்சி, தீய எண்ணம்; ஓதுவ = படிப்பது,
 சொல்லித்
 தருவது, பேசுவது; உன்னுவ = நினைப்பது;
 தன்னயம் = சுயநலம்; 
 சால = மிகவும்;
 மா = பெருமை, சிறப்பு)
 
 என்று கூறுகிறான். 
   குடிலன் தீய எண்ணமே வடிவானவன்.
 அவனுடைய பேச்சும்
 நினைப்பும் செயலும் ஆகிய
 யாவும் தன்னலம் கருதியதே ஆகும்.
 மன்னனின்
 நலத்தைச் சிறிதும் நினைக்காதவன். ஆனாலும் மிகவும்
 பெருமை உடையவன் போலவும், நல்லவன் போலவும்
 நடிப்பவன்
 என்று குடிலனின் குணநலன்களை மதிப்பீடு
 செய்கிறான். 
       சேரமன்னன் புருடோத்தமனுக்கும் பாண்டியன் சீவக
 வழுதிக்கும் இடையே நடந்த போரில் சீவகன்
 தோற்பது உறுதி
 என்று
 தெரிந்தவுடன் குடிலன் சேர
 மன்னனிடம் தான் அரசு
 அமைப்பதற்காகப் பேரம் பேசத்
 துணிகிறான். அதுவரை பாண்டியன்
 நிழலிலேயே அண்டிவாழ்ந்த குடிலன் இப்போது தானே அரசனாகும்
 முயற்சியில் ஈடுபடுகிறான். தான் செய்யும் செயலுக்கு உரிய
 நியாயத்தையும் கற்பிக்கிறான்.  
   இராமாயணத்தில் வீடணன் இராமனிடம் சேர்ந்து
 அவனுக்குச்
 செய்ததை நினைவூட்டித் தானும் அவ்வாறே
 புருடோத்தமனுக்கு
 உதவி செய்வதாகக் கூறுகிறான்.  
	 
    
 பண்டு இராகவன் பழம்பகை செற்று 
வென்றதோர் இலங்கை விபீஷணன் காத்தவாறு 
இன்றுநீ வென்றநாடு இனிது காத்திடுவேன் 
 (அங்கம் 5 : களம் 1, 142-144)  
 (செற்று = அழித்து)  
 என்று கூறுகிறான். குடிலன் இராமாயணத்தில்
 இருந்து
 மேற்கோள் காட்டிப் பேசுவதைச் சாத்தான்
 திருமறையில் இருந்து
 மேற்கோள் காட்டிப் பேசுவதை
 ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவ்வாறு,
 குடிலன் தீய
 பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.  
        |