சுவாமிகள் மொத்தம் 50 நாடகங்கள் எழுதியுள்ளார்.
அவற்றுள் சிம்பலைன், ரோமியோ ஜூலியட், ஜூலியஸ்சீசர்
ஆகியன ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட
நாடகங்கள் ஆகும்.
சுவாமிகள் எழுதிய, இயக்கிய அனைத்து
நாடகங்களுமே
சிறப்புடையனவாகும். எனினும் பின்வரும்
நாடகங்களை மிகவும்
சிறப்புடையனவாகச் சுட்டிக்
காட்டலாம். 1. சத்தியவான் சாவித்திரி
2. பவளக்கொடி சரித்திரம்
3. வள்ளி திருமணம்
4. அரிச்சந்திர மயான காண்டம்
5. கோவலன் சரித்திரம்
6. இராம ராவண யுத்தம்
7. வீரபாண்டிய கட்டபொம்மன்
8. மதுரை வீரன்
9. சித்திராங்கி விலாசம்
10. நளதமயந்தி
ஆகிய நாடகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும்.
சுவாமிகள் எழுதிய அத்தனை நாடகங்களும் ஆயிரக்கணக்கில்
அரங்கில் நடிக்கப் பெற்றவை ஆகும். சுவாமிகள் இயற்றிய நாடகங்கள்தாம் தமிழ்
நாடகக்கலை வளர்ச்சிக்கு அடிப்படைச் செல்வங்கள் ஆகும்.
தமிழ் நாடகக்கலையைப் பொறுத்தவரையில் சுவாமிகள்
காலத்துக்கு முன், சுவாமிகளின் காலத்துக்குப் பின் என்று
பகுத்துப் பார்க்கும் அளவிற்குச் சுவாமிகளின் நாடகக்கலைத்
தொண்டு அமைந்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கொண்டிருந்த நாடகக்
கலையை உயர்த்திப் பிடித்தது மட்டும் அல்லாமல் தம்
காலத்துக்குப் பின்னரும் உயர வேண்டிய நாடகக்
கலையைத் தம் நாடகங்கள் மூலம் நிலை நிறுத்தினர்.
உண்மையில் சுவாமிகளின் நாடகங்கள் தாம் அவர்
காலத்துக்குப் பின்னரும் நாடகக் கலைக்கு உயிரூட்டி
வந்தன.
சென்னையில் ஒருமுறை சங்கரதாஸ் சுவாமிகளின்
நினைவு விழா நடந்தது. அவ்விழாவில் பேசிய கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் சுவாமிகளை நாடக உலகின்
இமயமலை என்று குறிப்பிட்டார். அந்த அளவிற்குச்
சுவாமிகளின் நாடகத் தொண்டு அமைந்திருந்தது.
|