நாமக்கல் கவிஞரின் பாடல்களில் தமிழுணர்வு எவ்வளவு
அதிகம் இருந்ததோ அதே அளவு தமிழன் பற்றிய உணர்வு
இருந்தது என்பதை இனிக் காணலாமா?
பக்தியும் அன்பும் அறமும் தமிழனின் பண்புகளில்
குறிப்பிடத்தக்கவை என்று நாமக்கல் கவிஞர் குறிப்பிடுகின்றார்.
அதற்கு ஒரு பாடலைச் சான்றாகப் பார்க்கலாம். தமிழன் என்றோர் இனமுண்டு;
தனியே அவற்கோர் குணமுண்டு
அமிழ்தம் அவனுடைய மொழியாகும்
அன்பே அவனுடைய வழியாகும்
காப்பிய நூல்களை எழுதிய பெருமையும், திருக்குறள்
யாத்த
சிறப்பும், பக்திப்பாடல்களின் புகழும், புதுமையாய்க் கவிதை யாத்த
பாரதியின் பாக்களும் தமிழ்மொழிக்கு மணிமகுடம் சூட்டக்
கூடியவை எனத் தமிழனின் சிறப்புகளில் சிறந்தனவற்றைப்
பட்டியலிடுகிறார் கவிஞர். மதங்களின் பெருமைகளைப் பேணிக்
காத்தவன் தமிழன். எம்மதமும் சம்மதம். கடவுள் வழிபாடு
அவசியம். எல்லா மதத்திற்கும் முக்கியத்துவம் தருதல் ஆகியன
தமிழனைத் தனித்த குணமுடையவன் என்பதைக் காட்டுகின்றன
அல்லவா?
|