6.1 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வாழ்வும் வளர்ச்சியும்


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


பிறப்பிடம் : தஞ்சை மாவட்டத்திலுள்ள செங்கப்படுத்தான் காடு
தந்தை : அருணாசலக் கவிராயர்
தாய் : விசாலாட்சி
பிறப்பு : 13.04.1930
கல்வி : அண்ணன் கணபதி சுந்தரத்தோடு உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளியில் அரிச்சுவடி படித்திருக்கிறார்.

அதில் அவருக்கு நாட்டமில்லை. ஆனால் அடிப்படைக் கல்வியை அண்ணனிடம் கற்றுக் கொண்டார். தம் வாழ்க்கையின் வழிகாட்டியாக, பட்டுக்கோட்டையார் அண்ணனையே ஏற்றுக்கொண்டார்.

தந்தை அருணாசலம் கவிஞராக இருந்ததால் அவர் மகன்களான கணபதி சுந்தரமும், கல்யாணசுந்தரமும் கவிபாடும் திறத்தைப் பெற்று இருந்தனர். பட்டுக்கோட்டையார் சிறுவயதிலேயே கவிதை பாடுவதில் ஆர்வம் காட்டினார்.

அவர் வாழ்ந்த ஊர் நிலவளம் நிறைந்தது. ஏரிக்கரையில் ஒருநாள் வயலைப் பார்க்கச் சென்ற பட்டுக்கோட்டையார் வீடு திரும்பும் போது, வேப்பமர நிழலில் அமர்ந்து ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏரியில் நீர் நெளிவதை, சூரிய ஒளிவீச்சில் நீர் சிரிக்கிறது எனக்கண்டு மகிழ்ந்தார். தாமரை மலர்கள் பளிச்செனக் காட்சியளித்தன. அந்த நேரத்தில் கெண்டைமீன் துள்ளித் தாமரை இலைமீது நீர்த்துளியைத் தெளித்துத் தலைகீழாய்க் குதித்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்,

ஓடிப்போ ஓடிப்போ
கெண்டைக் குஞ்சே - கரை
ஓரத்தில் மேயாதே
கெண்டைக் குஞ்சே
தூண்டிக்காரன் வரும்நேரமாச்சு - ரொம்பத்
துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே

(கே.சீவபாரதி (தொ.ஆ), பட்டுக்கோட்டையார் பாடல்கள், ப.63)

என்று பாடினார். இந்தப் பாட்டை எல்லோரிடமும் பாடிக் காட்டினார். அனைவரும் ரசித்தனர். இவ்வாறு பட்டுக்கோட்டையார் இளமையிலிருந்தே பாடல் எழுதி வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைவிட, அந்த இளமைப் பருவத்திலேயே வர்க்க எண்ணம் - துன்புறுவோர் - துன்புறுத்துவோர் பற்றிய எண்ணம் - துன்புறுவோர் சார்பாக அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றிவிட்டது என்பதை இப்பாடல் தெளிவுபடுத்துகிறது. பிற்கால வளர்ச்சியில் தூண்டிலில் பிடிக்கப்படும் மக்களுக்கான படைப்பாளியாகவே அவர் ஆகிவிட்டார் என்பதைக் காணலாம்.

பெரியார் ஈ.வெ.ரா. 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். நீதிக் கட்சியோடு இணைந்து சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பிற்பட்ட சாதியினர் கோயிலுக்குள் நுழையும் உரிமை, பெண் முன்னேற்றம் முதலியன குறித்துத் தீவிரமாகப் பேசினார். இதனால் நாட்டில் ஒரு புது எழுச்சி ஏற்பட்டது. இந்தக் காலக்கட்டத்தில் கவிஞர் கல்யாணசுந்தரம் அரசியல் போக்கையும், நாட்டின் நிலையையும் உணர்ந்து பாடல்கள் படைத்தார்.

பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், கல்யாணசுந்தரத்தின் பாடலில் பளிச்சிட்டன. “தான் பிறந்த சமூகத்தில் இருந்துவரும் மூடநம்பிக்கைகளையும், ஆசார அனுட்டானங்களையும் கிண்டல் செய்து பல பாடல்களைத் தன் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பாடிக் காட்டிக் கிண்டல் செய்யும் பழக்கம் உடையவர் கவிஞர்” என்று திரு.ஆ.மு.பழனிவேல் கூறுகிறார்.

பாரதிதாசன் பாடல்களின் தாக்கத்தால் பொதுவுடைமைச் சிந்தனைகளும், சமூகக் கொடுமைகளின் மீதான சாடலும் பட்டுக்கோட்டையார் கவிதைகளில் மேலோங்கித் தெரிந்தன.

கொடுக்கிற காலம் நெருங்குவதால் - இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது

(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல். படம்: திருடாதே, 1961)

என்று பொதுவுடைமை யுகத்தின் வருகையை அறிவிக்கிறார்.

பொதுமைச் சிந்தனைக்குப் பாரதிதாசன்தான் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். பட்டுக்கோட்டையார் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் ஏழை விவசாயியின் துயரங்களைத் தெரிந்து சொல்கிறார்.

வாழை நிலைக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது
கூழைக்குடிக்குது; நாளைக் கழிக்குது
ஓலைக்குடிசையில் ஒட்டிக்கிடக்குது
காடு வௌஞ்சென்ன மச்சான் - உழைப்போர்க்கு
கையுங்காலுந்தானே மிச்சம்

(பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், ஜனசக்தி 1956)

கவிஞரின் சொந்த வாழ்க்கைச் சூழல், அவர் வாழும் சமூகம் ஆகியன கவிதையின் கருப்பொருளாகின்றன என்பதை இதன்மூலம் உணரலாம்.