3.5 உருவகமும், படிமமும்


‘உவமை, உருவகம் போன்ற அலங்காரங்களை மறுத்து, உண்மை, உலகியல் இவற்றையே இனிக் கவிதையின் இயல்பான அழகாகக் கொள்ள வேண்டும்’ -இது புதுக்கவிதையின் முக்கியப் பண்பு. எனவே படைப்பவன் கவிதையில் இவற்றைத் தேடி அணிவிப்பதும், படிப்பவன் தேடி அனுபவிப்பதும் தவறு. இது நல்ல கவிதைப் படைப்புக்கு அழகு அல்ல என்பது தான் புதுக்கவிதையின் கோட்பாடு.

ஆனால் மொழி இயற்கையிலேயே உவமை, உருவகம், படிமம் (உருக்காட்சி) இவற்றைத் தனக்குள் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றை முற்றிலும் விலக்கிவிட்டு ஒரு மொழி இயங்க முடியாது. மொழியின் முழு மலர்ச்சியான கவிதையால் எப்படி இயங்க முடியும்?

நண்பர்களே ! இதுவரை பார்த்த பிச்சமூர்த்தி கவிதைகளில் பல முழுக்கவிதைகளே உருவகமாகவும், படிமமாகவும் இருப்பதைக் காணலாம். ஒருமுறை திரும்பப் பாருங்கள். நல்ல உவமைகளும், உருவகங்களும் கவிதையோடு கலந்து நிற்பதைக் காண்பீர்கள்.இன்னும் சில சான்றுக்காக இங்குத் தரப்படுகின்றன.

  • உருவகம்

சொல் என்னும் கவிதையில் சொல்லை உருவக அடுக்காக வருணிக்கிறார். அதன் முரண்பட்ட இரட்டைத்தன்மையை, அது தரும் ஏமாற்றத்தை, சமயங்களில் அதன் பயனின்மையை - ஒரு கவிஞனின் அனுபவமாகத் தருகிறார்.


சொல் ஒரு சூது
இருபுறமும் ஒடும்
காக்கைக் கண்
இருமுகம் தெரியும்
பேதக் கண்ணாடி
காம்பில் படாமல்
மரத்தில் தாக்கி
மூர்க்கமாய்த் திரும்பிவரும்
எறிகல்
உண்மை என்று
ஒருதலை கடிப்பதை
மாயை என்று மறுக்கும்
இருதலைப் பாம்பு

  • படிமம்

தேவை என்னும் கவிதையில் சடுகுடு விளையாட்டு ஒரு படிமமாகிறது.


விலைப் புள்ளியும்
பஞ்சப் படியும்
விளையாடும் சடுகுடு


விலைப்புள்ளிக்கு ஏற்றாற் போல, ஊழியர்களின் பஞ்சப்படி ஏறும்; இறங்கும். இதை இரண்டுக்கும் இடையிலான சடுகுடுவாகக் காண்கிறார்.

இப்படிப் பல உருவகங்களை, படிமங்களை இவர் நூல் முழுக்கக் காணமுடியும்.

நண்பர்களே ! இவற்றால் என்ன புரிந்து கொள்கிறோம்?

எதுகைக்கும் மோனைக்குமாகச் சொற்களை வலிந்து கையாளுவது; உவமை உருவகம் என்று கவிதைப் பொருளோடு பொருந்தாமல் செயற்கையாகக் கையாளுவது - இவற்றையே பழமை என்று தள்ளுகிறார் பிச்சமூர்த்தி. கவிதையின் பொருளோடு இயைந்த இந்த எழில் நலங்களைத் தம் கவிதை முழுக்கத் தேவைக்கேற்பப் பயன்படுத்தியிருக்கிறார்.