கடற்கரை மணலில் இளம்பெண்கள் வீடு கட்டி
விளையாடுவதைச் சிற்றில்கட்டி விளையாடல்
என்பர்.
தலைவியை மணந்து கொள்வதில் கருத்தின்றிப்
பகலில்
மீண்டும் மீண்டும் தலைவியைக் காண வருகிறான் தலைவன்.
‘இதனை அன்னை அறிந்தால்
தலைவியை வெளியில்
அனுப்பாமல் வீட்டில் இருத்தி விடுவாள். எனவே விரைவில்
மணந்துகொள்’
என்கிறாள் அகநானூற்றுத் தோழி. ஊதை ஈட்டிய
உயர்மணல் அடைகரை
கோதை ஆயமொடு வண்டல்
தைஇ
ஓரை ஆடினும் உயங்கும்நின் ஒளியென
(அகநானூறு - 60 : 9-11, குடவாயிற்கீரத்தனார்)
(ஊதை = வாடைக்காற்று; அடைகரை = நீர்க்கரை;
கோதை = மாலை; ஆயம் = தோழியர்கூட்டம்; வண்டல் =
சிற்றில்; தைஇ = கட்டி;
ஓரை = விளையாட்டு)
“ஊதைக் காற்றால்
குவிக்கப்பட்ட உயர்ந்த மணற்குன்றை உடையது நீர்க்கரை. அக்கரையில் மாலை அணிந்த
தோழியருடன் சிற்றில் கட்டி விளையாடினாலும் “உன்
உடம்பின்
ஒளி வாடும். அங்குப் போகாதே” என்று சினப்பாள் தாய்.
அப்படிப்பட்ட தாய் உன் வருகையை அறிந்தால் தலைவியைக் காவலில் வைத்துவிடுவாள்” என்று தோழி
கூறுகிறாள்.
அகநானூற்றுப் பாடலொன்று இளம் பெண்கள் விளையாடும் வரிமனையை (சிற்றில் அல்லது மணல்வீட்டை),
கடல் அலை வந்து அழிக்கும் என்று
குறிக்கிறது.
மூத்தோர் அன்ன வெண்தலைப் புணரி
இளையோர் ஆடும் வரிமனை சிதைக்கும்
(அகநானூறு - 90 : 1-2, மதுரை மருதனிளநாகனார்)
(வெண்தலை = நுரையோடு கூடிய அலைகள்;
புணரி = கடல்)
தோழியர்
கூட்டத்தோடு சேர்ந்து மணல்வீடு கட்டி
விளையாடுவது நெய்தல் நில இளம் பெண்களின் உற்சாகமான
பொழுதுபோக்கு எனத் தெரிகிறது. |