உவமை நயம் சிறக்கும் நெய்தல் பாடல்கள் பல.
சான்றாகச் சிலவற்றைக்
காணலாம்.
‘நண்டு தாக்குவதால் துறையில் வாழும் இறால் மீன் புரளும்
இடம் தொண்டி.
இனிய ஆரவாரம் நிறைந்த அத்தொண்டி
போன்றது இவளது நெற்றி’ என்கிறார் அம்மூவனார்
(ஐங்குறுநூறு - 179). ஓர் ஊரைச் சொல்லி அதைப் போன்றது
நெற்றி என்று ஏன் சொல்ல வேண்டும்? “அழகாலும்,
இன்பத்தாலும் இனிய ஆரவாரங்கள் நிறைந்த தொண்டிக்கு
ஒரு சிறு துன்பம் நேர்ந்தாலும், அது ஒளிவு மறைவின்றி
வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதுபோலக்
காதல் துயரால்
இவளது நல்ல நெற்றி பசலை கண்டால், மற்றவர்க்குக் களவுக்
காதல் தெரிந்துவிடும்.
இவள் நாணம் உடையவள் என்பதால்
உயிர்வாழ மாட்டாள். அதனால் வளம் மிகுந்த தொண்டி
போன்ற இவளது அழகு மிகுந்த நெற்றியில் பசலை வரக்
காரணமாக இருக்காதே. விரைவில்
மணந்து கொள்” என்று
குறிப்பாகத் தலைவனிடம் உணர்த்த இவ்வாறு கூறுகிறாள்.
உவமையைச் சொல்வதில்,
கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே
(ஐங்குறுநூறு - 184)
என்ற தொடர் சிறக்கின்றது. கடலை விடப் பெரியது
அவர் கொண்ட
காதல் என்று தலைவி கூறுவது இலக்கிய
இன்பம் தருகிறது.
நெய்தல் நில மக்களுக்கு ஏற்ற, அவர் தம் வாழ்க்கை
முறைக்கு ஏற்ற
உவமையை எடுத்தாள்வது உண்டு.
புறங்காட்டி ஓடாத கொள்கையை உடைய மன்னன் ஒரு
பாசறை
அமைக்கின்றான். அதில் உள்ள யானைகளின்
பொன்னால் ஆன முகத்திரைகள் (முகபடாங்கள்)
ஆடுகின்றன;
ஒளிவிடுகின்றன. அதைப்போல் கடலில் பரதவர் மீன் பிடிக்கப்
பயன்படுத்தும்
தோணிகளில் (படகுகளில்) விளக்குகள் ஒளி
சிந்துகின்றன. (அகநானூறு - 100 : 5-10,
உலோச்சனார்)
இந்த உவமை பரதவர்கள் புறங்காட்டி ஓடாதவர்கள்,
அவர்தம்
படகுகள் யானைபோல் பலம் வாய்ந்தவை என்ற
கருத்துகளையும் உணர்த்துகின்றது.
|