பண்டைத் தமிழகத்தில் தமிழரின் வாழ்வியலை
நெறிப்படுத்துவதற்காகத் தனிப்பட்ட ‘சட்ட நூல்கள்’ எதுவும்
இல்லை. தமிழர் அன்றாட வாழ்வில், ‘அறவியல்’ சிந்தனைக்கு
முக்கியத்துவம் தந்தனர். அறம் சார்ந்த நிலையில் சமுதாய
வாழ்க்கையில் புதிய மதிப்பீடுகள் தோன்றின. இந்தியா
ஆங்கிலேயரின் குடியேற்ற நாடாக அடிமைப்பட்டவுடன்,
அதற்கேற்பச் சட்டங்கள் வகுக்கப்பட்டன. நீதிமன்றம், சட்டம்
ஆகியன சராசரி மனிதனுக்கு எட்டாத தொலைவில் இருந்தன.
இந்தியா, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து
விடுதலை அடைந்தவுடன் சட்டத்திற்கு முன்னர் எல்லோரும்
சமம் என்ற எண்ணப்போக்கு எங்கும் பரவலானது.
இந்நிலையில் தமிழ்மக்களின் தாய்மொழியான தமிழில்
சட்டங்கள் வெளிவர வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டது.
தமிழுக்குப் புதியதான சட்டத் தொகுப்புகள், தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்படும்போது, புதிய வகைப்பட்ட மொழிநடை
தேவைப்படுகின்றது.
|