வைதிக சமய நூல்கள் கி.பி.19-ஆம் நூற்றாண்டில் தான் அதிக
அளவில் தமிழாக்கப்பட்டன. ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வந்து
அதிகாரத்தினைக் கைப்பற்றியவுடன், ஏற்கனவே இந்தியாவில்
நிலவிய சனாதன வருணாசிரம முறை ஆட்டங்கண்டது. சாதி
அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிற சமயங்களை நாடத்
தொடங்கினர். இந்நிலையை மாற்றி அமைத்திட
வைதிக
சமயத்தில் சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்ததுடன்,
மறுமலர்ச்சிப் போக்கினுக்கு ஆதரவான சமய
நூல்களும்
தமிழில் வெளியிடப்பட்டன. வேதங்கள்,
உபநிடதங்கள்,
ஆகமங்கள், பாகவதம், புராணம் போன்றவை பெரிய அளவில்
தமிழாக்கப்பட்டன.
அத்துவித
ரச மஞ்சரி, ஆசார்ய ஹ்ருதய சாரசங்க்ரஹம்,
சிவானந்த லஹரி, பஜ கோவிந்தம், ஆனந்த ரகஸ்யம், சுப்ர
பாதம், ஹரி நாம சங்கீர்த்தனம், அபிராமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்ற வைதிக சமய நூல்கள் நூற்றுக்கணக்கில்
வெளியாகியுள்ளன.
இருக்கு
வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்
ஆகிய நான்கு வேதங்களும் கடோபநிஷத்து முதலிய
உபநிடதங்களில் சிலவும் தமிழில் வெளியிடப்பட்டுள்ளன.
சைவ, வைணவ
சமயத் தத்துவங்களும் தமிழில் விரிவான
அளவில் மொழிபெயர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளன.
குறிப்பாக,
சைவ சித்தாந்தம்
தமிழ்நாட்டில்
தமிழ்த்திருமுறைகளின் அடிப்படையில் உருவானது.
இதிற்காணும் ஆகமக் கருத்துகளை ஆழ்ந்து பயில்வதற்கென
ஆகமங்களை மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
காஷ்மீர சைவம், வீரசைவம் பற்றிய சித்தாந்த
விளக்கங்கள்
தமிழாக்கப்பட்டுள்ளன.
·
புராண மொழிபெயர்ப்புகள்
கி.பி.15-ஆம்
நூற்றாண்டிலிருந்து தமிழில் புராணங்கள் அதிக
அளவில் மொழிபெயர்க்கப்பட்டன. புராணம்
என்பது
உயர்வானது; புனிதமானது என்ற
கருத்துச் சமய
நம்பிக்கையுடையோரின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகும்.
கி.பி.16-ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் அதிவீரராம பாண்டியர்,
கூர்ம புராணம், இலிங்க புராணம், கந்த புராணத்தின் பகுதியான
காசிக் காண்டம் ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார்.
கந்த
புராணத்தின் பிற பகுதிகளான பிரமோத காண்டத்தினை
வரதுங்கராம பாண்டியரும் உபதேச காண்டத்தினைக்
கோனேரியப்பரும் மொழிபெயர்த்துள்ளார்.
கி.பி.15-ஆம்
நூற்றாண்டில் சூதசங்கிதை என்ற நூலினைப் பிரம
கீதை என்ற பெயரில் தத்துவராயர் தமிழாக்கினார். அதே நூல்
கி.பி.19- ஆம் நூற்றாண்டில் மீனாட்சி சுந்தரம் பிள்ளையினால்
தமிழாக்கப் பட்டுள்ளது.
கி.பி.16-ஆம்
நூற்றாண்டில் மச்ச புராணம் வடமலையப்பராலும்
பாகவத புராணம் செவ்வைச்சூடுவாராலும் தமிழ்
வடிவம்
பெற்றுள்ளன.
தமிழ்நாட்டிலுள்ள
கோயில்கள் அமைந்துள்ள ஊர்களைப்
போற்றும் புராணங்கள்,தல புராணங்கள் ஆகும். அவை தமிழில்
எழுதப்பட்டன. இத்தகைய புராணங்களை எழுதியவர்களில்
பலர் தமிழும் வடமொழியும் நன்கு
அறிந்தவர்கள்.
வடமொழியில் எழுதுவது சிறப்பு என்ற அன்றைய பொதுக்
கருத்தினால் தமிழில் எழுதப்பட்ட புராணங்கள்
பின்னர்
வடமொழியில் தரப்பட்டன. அவ்வாறே வடமொழியில்
எழுதப்பட்ட சில தல புராணங்கள் (இவை ‘மான்மியம்’ என்று
பொதுவாகக் குறிக்கப்படும் இருநூற்றுக்கும்
மேற்பட்ட
புராணங்கள்) வடமொழியிலிருந்து தமிழாக்கப்பட்டதாக ஓர்
ஆய்வு குறிப்பிடுகின்றது.
·
பகவத்கீதை மொழிபெயர்ப்புகள்
மகாபாரதத்தில்
இடம் பெற்றுள்ள பகவத்கீதை, பின்னர்
எழுதிச் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து அறிஞர்களிடையே
கருத்து வேறுபாடுகள் உள்ளன. வைதிக சமயத்தின் புனித
நூலாகக் கருதப்பட்ட ‘பகவத்கீதை’ இருபதாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் எல்லோருக்கும் பொதுவான செயலாக்கம்
மிக்கதாக மாற்றமடைந்தது. இந்நூலுக்கு இன்று வரை
சமய
விற்பன்னர்கள் விளக்க உரை எழுதி வருகின்றனர்.
கி.பி.11-ஆம்
நூற்றாண்டில் ஆளவந்தார் பகவத்கீதையை, ‘கீதார்த்த சங்கிரகம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதுவே
தமிழில் வெளியான முதல் மொழிபெயர்ப்பு நூலாகும்.
கி.பி.19-ஆம்
நூற்றாண்டு வரை பகவத்கீதையை, பத்து மொழி
பெயர்ப்பாளர்கள் வெவ்வேறு
காலகட்டங்களில்
மொழிபெயர்த்துள்ளனர்.
இருபதாம்
நூற்றாண்டில் பகவத்கீதை பாரதியார் உட்படப்
பலரால் தமிழாக்கப்பட்டுள்ளது. |